பதிவு செய்த நாள்
28
ஜூன்
2017
01:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு படை எஸ்.பி., ஆய்வு செய்து, அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார். ராமேஸ்வரம் கோயில் மற்றும் பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதால், கோயில் சார்ந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி 2013ம் ஆண்டு முதல் கோயில் நான்கு ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்து, பக்தர்களை வெடிகுண்டு பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே கோயிலுக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
மேலும் கோயில் அக்னி தீர்த்த கடற்கரை, கோயில் ரதவீதி, கோயில் பிரகாரங்கள், சுவாமி, அம்மன் சன்னதி உள்ளிட்ட முக்கிய பகுதியில் 72 சி.சி.டி.வி., கேமிராக்கள் பொருத்தி, தமிழக சிறப்பு படை போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோயில் பாதுகாப்பு குறித்து நேற்று, தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.,) எஸ்.பி., பீனு ராஜசேகர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு கோயில் மூன்றாம் பிரகாரம், சுவாமி, அம்மன் சன்னதி மற்றும் கோயில் மேல் தளம் சென்று ஆய்வு செய்தனர். பின் கோயில் வரைபடம், சி.சி.டி.வி., கேமிராக்கள் செயல்பாடு குறித்து கோயில் பொறியாளர் ராமமூர்த்தியிடம் ஆலோசித்தனர். இதன் பின் கோயில், பக்தர்களின் பாதுகாப்பு குறித்து கோயில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, மத்திய, மாநில உளவுதுறை போலீசாருடன் ஆலோசனை நடத்தினர்.