பரமக்குடி; பரமக்குடியில் மழை வேண்டி சிறுமிகள்,பொதுமக்கள் பெருமாள் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகளை சுற்றி வந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 2 வருடங்களாக மழையின்றி நீர்நிலைகள் அனைத்தும் வற்றியுள்ளன. மேலும் நகரில் நீர்மட்டம்கடந்த வருடம் 70 அடியிலும், இரண்டு மாதங்களுக்கு முன் 150 அடியில் இருந்த நிலையில் தற்போது 200 அடியை தொட்டுள்ளது. இதனால்200 அடி வரை வீடுகளில் ஆழ்குழாய் அமைத்தவர்கள் தண்ணீர் இன்றி சிரமமடைகின்றனர். இதனால் புதிதாக ஆழ்குழாய் அமைப்பவர்கள் 350 முதல் 400 அடி வரை போர்களை அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 3 லட்சம் ரூபாய் வரை பொதுமக்கள் செலவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் வாசலில் கடந்த மாதம் மழை வேண்டி சுமார் 15 க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதனையடுத்து 2 நாட்கள் மழை பெய்தது. தொடர்ந்து கடந்த மூன்று தினங்களாக 8 வயது முதல் 10வயது வரையான சிறுமிகள் பலரும் பெருமாள் கோயிலில் இருந்து முக்கிய வீதிகளை சுற்றி வந்தனர். அப்போது திருப்பாவை, பாசுரங்கள், பக்தி பாடல்கள் இசைத்தபடி பொதுமக்கள் பலரும் உடன் சென்றனர். இதனால் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக புரோகிதர்கள் தெரிவித்தனர்.