பதிவு செய்த நாள்
17
ஆக
2017
10:08
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்திப்பெரு விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங் கியது. ஆக.,24ல் தேரோட்டமும்,ஆக.,25ல் தீர்த்தவாரியும் நடக்கிறது. நேற்று காலை 8:30 மணிக்கு உற்சவர் மற்றும் அங்குசத்தேவர் கொடிமரம் அருகே எழுந்தருளினர். தலைமைக்குருக்கள் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில், சோமசுந்தர குருக்கள், ஸ்ரீதர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதினர்.
காலை 10:10 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் நற்சாந்துப்பட்டி பெரியகருப்பன் செட்டியார், காரைக்குடி மகாதேவன் செட்டியார் செய்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இரவில் தங்க மூஷிக வாகனத்தில் உற்சவ விநாயகர் வீதி உலா நடந்தது. தினசரி இரவில் வாகனங்களில் விநாயகர்வீதி உலா நடக்கிறது. இன்று காலை 9:30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து ஒன்பதாம் திருநாள் வரை காலை சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஆக.,21ல் மாலையில் கஜமுகாசூர சம்ஹாரம், ஆக.,24 மாலையில் தேரோட் டமும், மாலை 4:30 மணி - இரவு 10 :00 மணி வரை மூலவர் சந்தனக் காப்பு தரிசனமும் நடக்கிறது.பத்தாம் திருநாளான ஆக.,25 விநாயகர் சதுர்த்தியன்று காலையில் கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரியும், இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கிறது.