ஆவணி ஞாயிறு நாளில் நாகருக்கு பால் ஊற்ற அலைமோதிய பக்தர் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2017 11:08
நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறை முன்னிட்டு நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்த பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நாகர் சன்னதி எல்லா கோயில்களிலும் காணப்படும். ஆனால் நாகரை மூலவராக கொண்ட அரிய கோயில்களில் ஒன்று நாகர்கோவில் நாகராஜாகோயில். இந்த கோயிலால்தான் தான் குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் என பெயர் பெற்றது. இங்கு மூலஸ்தானம் இன்னும் ஓலைக்கூரையில்தான் இருக்கிறது. இங்குள்ள பாம்பு புற்று மண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இங்கு நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டால் பெண்களுக்கு திருமண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதனால் ஞாயிற்றுக் கிழைகளில் அதிக அளவில் பெண் பக்தர்கள் வருகின்றனர். அதுவும் ஆவணி மாதம் ஞாயிறு நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். நேற்று முதல் ஞாயிறு. அதிகாலை நான்கு மணிக்கே பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். மதியம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.