பதிவு செய்த நாள்
21
செப்
2017
01:09
நவராத்திரியின் முதல் நாளான இன்று, பூஜையின் போது பாட வேண்டிய பாடல்
மால்அயன்தேட, மறைதேட, வானவர்தேட நின்ற
காலையும், சூடகக் கையையும் கொண்டு - கதித்தகப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும்போது, வெளிநில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.
அம்பாள் : சாமுண்டி
உருவம் : தெத்துப்பல் வாய், முண்டன்
என்ற அசுரனை வதம் செய்து, மாலையாக கொண்டவள்
குணம் : நீதியை காக்க குரூர குணம்
சிறப்பு : சப்த கன்னியர்களில் ஏழாம் கன்னி
நைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல், எள்ளோதரை
பூஜை நேரம் : காலை, 10:30 - 12:00 மணி வரை, மாலை, 6:00 - 7:30 மணி வரை
மலர் : மல்லிகை, வில்வம்
தாம்பூலங்கள் : ஏழு வகையான மங்கலப் பொருட்கள்
பாட வேண்டிய பாடலின் ராகம் : காம்போதி
இன்று பூஜை செய்ய வேண்டிய நட்சத்திரகாரர்கள்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், 8ம் எண்ணில் பிறந்தவர்கள், சனி அல்லது ராகு திசை நடப்பவர்கள், லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகியவற்றில் சனி அல்லது ராகு உடையவர்கள். அலங்காரம்: அம்பாளுக்கு, மகேஸ்வரி பாலா என்று திருநாமம் சூட்டி, வணங்க வேண்டும்; -மது, கைடபர் ஆகிய அசுரர்களின் அழிவுக்கு காரணமானவள்; சாமுண்டியாக அலங்காரம் செய்ய வேண்டும். மதுரை மீனாட்சி இன்று, ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி தருகிறாள்.
அலங்கார காரணம்: அன்னை ராஜராஜேஸ்வரி இந்த உலகிலுள்ள அசைகிற, அசையாப் பொருட்கள் அனைத்துக்கும் அதிபதியாக இருந்து, அருளாட்சி நடத்துவதைக் குறிக்கும் வகையில் இந்த அலங்காரம் செய்யப்படுகிறது.
முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு - மகேஸ்வரி, கவுமாரி, வராகி
இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு - மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி
கடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு - சரஸ்வதி, நாரசிம்மி, சாமுண்டி
ஆக, மொத்தம் இந்த ஒன்பது நாட்களின் சிறப்பையும், பெருமையையும், பலன்களையும் நாம் தெரிந்து கொள்வது, நமக்கு சிறப்பு பலன்களை தரும் என்பது மிகையில்லை.
நவராத்திரியில், ஒன்பது படிகளில் கொலு வைக்கும் முறை:
முதல் படி : ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும், புல், செடி, கொடி போன்ற, தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்
இரண்டாம் படி: இரண்டறிவு கொண்ட, நத்தை, சங்கு போன்ற, பொம்மைகள் இருத்தல்
வேண்டும்
மூன்றாம் படி : மூன்றறிவு உயிர்களை விளக்கும், கரையான், எறும்பு போன்ற, பொம்மைகள் இடம் பெற வேண்டும்
நான்காவது படி: நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும், நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்
ஐந்தாவது படி: ஐந்தறிவு கொண்ட, நான்கு கால் விலங்குகள், பறவைகள் பொம்மைகள் இடம் பெற வேண்டும்
ஆறாவது படி : ஆறு அறிவு படைத்த, உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெறவேண்டும்
ஏழாவது படி: மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்
எட்டாவது படி: தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்
ஒன்பதாவது படி: பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும், மும்மூர்த்திகள். அவர் தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.