பதிவு செய்த நாள்
21
செப்
2017
01:09
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் சபரிமலையில், விமான நிலையம் அமைப்பதற்கான ஆலோசகர்களாக, ’லுாயிஸ் பாங்கர் ஆலோசனை நிறுவனம்’ நியமிக்கப்பட்டுள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. இங்கு உள்ள சபரிமலையில், பிரசித்திபெற்ற அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் இருந்து, ஜனவரி வரை, இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.பக்தர்கள் வசதிக்காக, சபரிமலையில் விமான நிலையம் அமைக்க, கேரள அரசு கடந்த ஆண்டு கொள்கை ரீதியில் ஒப்புதல் அளித்தது. சபரிமலை கோவிலுக்கு அருகே உள்ள செருவேலியில், 2,263 ஏக்கர் நிலப்பரப்பில், புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது. சர்வதேச ஆலோசனை நிறுவனமான, லுாயிஸ் பாங்கர் நிறுவனத்தை ஆலோசகர்களாக நியமிக்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ’சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள், அதற்காகும் செலவு மதிப்பீடு, தேவையான அனுமதிகள் வாங்கித் தருவது உள்ளிட்ட பணிகளை இந்த ஆலோசனை நிறுவனம் மேற்கொள்ளும்’ என, கேரள அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.