பதிவு செய்த நாள்
25
செப்
2017
10:09
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், காவிரி மகா புஷ்கரம் விழா, நேற்று நிறைவு பெற்றது. இரண்டு லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில், 144 ஆண்டுகளுக்கு பின், மகா புஷ்கரம் விழா, 12ம் தேதி துவங்கியது. மகா புஷ்கரம் விழாவின் போது, காவிரியில் புனித நீராடினால், 3.50 கோடி தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திதி கொடுத்தனர் : விழாவின் நிறைவு நாளான நேற்று, ஞாயிற்று கிழமை என்பதால், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், மயிலாடுதுறை துலா கட்டத்தில் குவிந்து, முன்னோருக்கு திதி கொடுத்து, புனித நீராடினர். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் மற்றும் சிவன் கோவில்களில் இருந்து, காவிரி துலா கட்டத்தில், தீர்த்தவாரிக்கு எழுந்தருளிய அஸ்திர தேவர்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. விடையாற்றி உற்சவம், கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது.நேற்று புனித நீராட, ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீர்த்தேக்கத்தில் அதிகளவு குளோரின் பவுடர் போடப்பட்டதாலும், காவிரியில் பக்தர்கள் விட்டுச் சென்ற ஆடைகளை உடனுக்குடன் அகற்றாததாலும், பக்தர்கள் அவதிக்கு ஆளாகினர்.
பவானியில் உற்சாகம் : தமிழகத்தில், 12 இடங்களில் புஷ்கர விழா நடந்தது. இதில், ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில், எங்கள் பவானி பவுண்டேஷன் மற்றும் அகில இந்திய துறவியர்கள் சங்கம் சார்பில், வெகு விமரிசையாக நடந்தது. விழா துவங்கியது முதலே பல்வேறு பகுதி ஆதீனங்கள், மடாதிபதிகள், துறவியர், சாதுக்கள் உள்ளிட்டோர் புனித நீராடி, காவிரி அன்னையை வழிபட்டனர். அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், நீதிபதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் புனித நீராடினர். கடைசி நாளான நேற்று அதிகாலை முதலே, பக்தர்கள் புனித நீராடினர். கூடுதுறை மற்றும் கோவில் வளாகம், மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பல்வேறு மாவட்ட பக்தர்களும், வெளிமாநில பக்தர்களும் குவிந்தனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள், காவிரியில் புனித நீராடி, சங்கமேஸ்வரரை வழிபட்டனர். விழாவை ஒட்டி காவிரி ஆற்றில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில், ௨௦ம் தேதி முதல், நேற்றிரவு வரை, ஒன்பது சிவாச்சாரியார்கள், உதவியாளர்கள் பல்வேறு பூஜை செய்து, காவிரி அன்னைக்கு தீபாராதனை காட்டி வழிபட்டனர். இதை, படித்துறையில் அமர்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள் ரசித்தனர். விழாவை ஒட்டி, பல்வேறு ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.