பதிவு செய்த நாள்
17
அக்
2017
11:10
முழு இருளோடு பிணைந்து வாழ்ந்த மனிதன், பிற்காலத்தில் விளக்குகளை கண்டறிந்து வரையறுத்த வாழ்க்கைக்கு மாறியபின்பு, அதே இருளை கண்டு அச்சமடைந்து, அதை ’கருப்பு’ என அழைத்தான். இந்த பயத்திலிருந்து விடுபட கருப்பின் கடவுளாக ’கருப்பணசாமியை’ உருவாக்கி வழிபட தொடங்கினான். இரவு நேரம் இருளோடு கலந்து, கிராமத்தை வலம்வந்து, காவல்காக்கும் தெய்வமாக கருப்பணசாமி உருவகம் பெற்றது.விளைச்சலை பெருக்கி, மக்களுக்கு வளத்தை கொடுப்பதாக நினைத்து, ’கன்னிமார்’களை வழிபட்ட மக்கள், விளைச்சலையும், செல்வத்தையும் காக்கும் காவல் தெய்வமாக கருப்பணசாமியை வணங்கினர். இந்த வழிபாடு பழமையானதாகும். பெரும்பாலான கிராமங்களிலும் இத்தகைய வழிபாடு உள்ளது. சில நுாற்றாண்டுக்கு முன்புவரை, சிறிய கோவில்களில் அல்லது மரத்தடியில், விளைநிலங்களில் கற்களை நட்டுவைத்து, வழிபட்ட மக்கள் பின்னாளில், கருப்பணசாமிக்கு சிலைகள் அமைத்து தனி கோவிலுக்குள்வைத்து வழிபடதொடங்கினர்.
கட்டுமஸ்தான உடலோடு, முறுக்கிய மீசையும், மிரட்டும் விழிகளோடு கருப்பணசாமி சிலைகள் உள்ளன. இடையில் மட்டும் முழங்கால்வரை மறைத்த ஆடையும், புஜங்களில் காப்பு, வலது கையில் பெரிய அரிவாள் ஓங்கியபடி இருக்கும். இடது கையில் தண்டம்(ஒரு வகை ஆயுதம்) தரையை நோக்கி இருக்கும். காவலுக்கு நிற்பது போல்தான் இந்த சிலைகள் உள்ளன. படையலிட்டு வணங்குவது இந்த சுவாமியின் சிறப்பாகும். சிலகோவில்களில் சைவ உணவும், பல கோவில்களில் அசைவ உணவுடன் மதுவை வைத்து வழிபடுகின்றனர். சில ஊரிலுள்ள கோவில்களில் சிரமத்திலிருந்து விடுபட்டால் முப்பூசை கொடுப்பதாக பக்தர்கள் வேண்டிக்கொண்டு, வேண்டுதல் நிறைவேறிய பின்பு, நேர்த்திக்கடனாக அமாவாசை இரவில் கருப்புநிறத்திலுள்ள கோழி, ஆடு, பன்றி மூன்றையும் பலியிட்டு படைத்து வழிபடுகின்றனர். சிலர் கருப்பணசாமியை குலதெய்வமாக வழிபடுவதும் தங்கள் குழந்தைகளுக்கு கருப்புசாமி, கருப்பணசாமி, கருப்பன், கருப்பாத்தாள், கருப்பாயி என பெயரிடுவது இந்த தெய்வத்தின் சிறப்புகளில் குறிப்பிடத்தக்கது. காவல் தெய்வமாக கருப்பணசாமியை வழிபடுகிறோம். முப்பூசை கொடுத்து வணங்குவது தற்போது மறைந்து போனது.கடந்த காலத்தில் தனிஇடத்தில் கோபக்கார சுவாமியாக இருந்தது. தற்போது கோவில் வளாகங்களில், தனிகோவில் அமைத்து வழிபடுகின்றனர். இரவுநேரம் ஊரை சுற்றி வலம்வந்து, காவல் காப்பதாக தற்போதும் நம்பிக்கையாக உள்ளது என மக்கள் தெரிவிக்கின்றனர்.