பதிவு செய்த நாள்
19
அக்
2017
03:10
எம்பெருமான் முருகனின் அவதாரம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்குக் காரணமாக பல சம்பவங்கள் பல காலம் முன்பாகவே நடந்தேறின. முன்னொரு காலத்தில் தட்சன், காஸ்யபன் என இரு பிரஜாபதிகள் பிரம்மனை நோக்கித் தவமிருந்து பல அரிய வரங்களைப் பெற்றனர். இதில் தட்சன் என்பவன் அரச வாழ்க்கையை விரும்பிக் கேட்டு அதை அடைந்தான். காஸ்யபர் தவ சீலராக வாழும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். தட்சனின் தவப்பயனால் உலகன்னையே அவனுக்கு மகளாக வந்து பிறந்தாள். ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானே மருகனாகும் நற்பேறு வாய்த்தது தட்சனுக்கு. ஆனால் அவன் ஆணவத்தால் சிவனை மதியாது அழிந்து போனான்.
காஸ்யப முனிவர் தவம் செய்யும் போது மாயை என்ற அழகிய பெண்ணைக் கண்டு மோகம் கொண்டு தனது தவப்பலனை முழுவதும் இழந்தார். அவளோடு கூடி பிள்ளைகள் பெற்றுக் கொண்டார். மனித உரு எடுத்துக் கூடியபோது பிறந்தவன்தான் சூரபதுமன்; பின்னர் யானை முகத்தோடு கூடியபோது பிறந்தவன் கஜமுகாசுரன்; பின்னர் சிங்க முகத்தோடு கூடியபோது. சிங்கமுகாசுரன் பிறந்தான். தனக்குப் பிறந்த குழந்தைகள் அனைவரும் அசுரர்கள் என்பதையறிந்து மிகவும் வருத்தம் கொண்டார் காஸ்யப முனிவர். அவர் தன் மகன்களை அழைத்து, உலகிலேயே மிகவும் உயர்ந்தவர் சிவபெருமான். அவரை நீங்கள் எக்காரணம் கொண்டும் பகைத்துக் கொள்ளக்கூடாது! அவரை வேண்டி வரங்களைப் பெற்று நன்கு வாழுங்கள்! என்று அறிவுரை கூறியதோடு, சிவபெருமானை மதிக்காத தட்சனின் கதையையும் கூறினார். மூவரும் இன்று முதல் சிவபெருமானே எங்கள் கடவுள். நாங்கள் அவரையே வழிபடுகிறோம் என்று கூறினர். பின்னர் தந்தையின் புத்திமதியின்படி பிரம்மாவை நோக்கித் தவம் செய்தனர். அவர்களது கடுந்தவத்தின் பயனாக பிரம்மா தோன்றினார். அவரைப் பார்த்தும் சகோதரர்கள் மூவர் மனதிலும் பேராசை என்ற மாயை உட்புகுந்தது. தந்தை சொன்ன அறிவுரையை மறந்தனர்.
1008 அண்டங்களையும், 108 உலகங்களையும் அடக்கி ஆளும் வரமும், அதோடு இறவாத வரமும் வேண்டினர். பிரம்மா திகைத்துப் போனார். சூரபதுமா! நீங்கள் கேட்ட முதல் இரு வரங்களையும் அளிக்கிறேன். ஆனால் இறவாவரம் என்பது பூமியில் பிறந்த உயிர்களுக்குக் கிடையாது. அதனால் யாரால் உனக்கு மரணம் சம்பவிக்காது என்று நினைக்கிறாயோ அவனைக் குறித்து வரம் கேள்! என்றார். தான் மிகுந்த புத்திசாலி என்ற ஆணவம் கொண்டவன் சூரபதுமன். உடனே, ஐயனே! பெண்ணுக்குப் பிறக்காத, ஆனால் பெண்ணுக்கு மகனாக இருக்கும் ஒருவனால்தான் எனக்கு அந்திமக் காலம் வர வேண்டும் என்று வேண்டினான். அவ்வாறே வரம் கொடுத்து மறைந்தார் பிரம்மன். அன்று முதல் சூரபதுமனது அட்டகாசங்கள் ஆரம்பமாயின. தன்னை அழிக்க ஒருவரும் இல்லை என்ற ஆணவம் அவன் கண்ணை மறைத்தது. முனிவர்களையும் ரிஷிகளையும், துன்புறுத்தினான். தேவர்களையும், நவகிரகங்களையும்கூட அடிமையாக்கி சிறையில் அடைத்தான். தேவகுலப் பெண்களுக்கு அவன் இழைத்த கொடுமைகள் சொல்ல முடியாது. இந்திராணியையும் சிறைப்பிடிக்க முயன்றான். ஆனால் அவள் ஒரு மலர் போல மாறி, தப்பி விட்டாள்.
அவனது கொடுங்கோலைக் கண்டு அண்ட சராசரங்கள் நடுங்கின. மழையும், காற்றும், வெப்பமும் கூட அவனைக் கேட்டுத்தான் தங்களது பணியை செய்ய வேண்டும் என்ற நிலை. அப்போது நாரத முனி பிரம்மாவையும், மகாவிஷ்ணுவையும் அழைத்துக்கொண்டு கைலாயம் வந்தார். தேவர்களின் நிலையைச் சொல்லி அபயம் கேட்டார். சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்கள் உண்டு. அதோடு ஞானிகளால் மட்டுமே பார்க்க முடிந்த ஒரு முகம் அதோமுகம் எனப்படும் ஞானமுகமும் உண்டு. ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஒரு நெருப்புப் பொறி வருமாறு செய்து, அதைத் தனது நெற்றிக் கண்ணால் வெளியிட்டார். உலகம் தகித்தது. அந்த வெப்பத்தைத் தாங்க முடியாத அன்னை உமையவள் காலில் சிலம்புப் பரல்கள் தெறிக்க ஓடினாள். அவற்றிலிருந்த நவரத்தினங்கள் சிதறின. நெருப்பின் வெம்மை பட்டு அவை நவவீரர்களாக உருவாயின. அக்னி அந்த நெருப்பைக் கொண்டு போய் சரவணப் பொய்கையில் சேர்த்தான். கங்கை நீர் அதைக் குளிர்வித்தது. அழகான ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகள் செந்நிறத்தில் ஜொலித்தன. அவர்களை கார்த்திகைப் பெண்கள் அறுவரும் எடுத்து பாலூட்டி வளர்த்தனர். அன்னை சக்தி, தனது அம்சங்களை அவர்களுக்கு அளித்தாள். அதனால் அவர்களும் தெய்வாம்சம் பெற்று விளங்கினர்.