பதிவு செய்த நாள்
16
நவ
2017
10:11
சபரிமலை: மண்டலகால பூஜைகளுக்காக சரண கோஷங்கள் முழங்க சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜைகள் நடைபெறும். புதிய மேல்சாந்திகளும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.மண்டலகால பூஜைக்காக சபரிமலை நடை நேற்று மாலை 5:00-க்கு திறக்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக சபரிமலையில் தங்கி பதவி நிறைவு பெறும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றினார். பின்னர் கணபதி கோயிலில் விளக்கேற்றி விட்டு 18-ம் படி வழியாக இறங்கி சென்று ஆழி குண்டத்தில் அக்னி வளர்த்தார். பின்னர் புதிய மேல்சாந்திகள் கே.வி. உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, அனிஷ் நம்பூதிரி ஆகியோருக்கு மாலை அணிவித்து 18-ம் படி வழியாக அழைத்து வந்தார். அவர்கள் ஸ்ரீகோயில் முன்புறம் வந்ததும் அவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
இரவு 7:00 மணிக்கு சபரிமலை புதிய மேல்சாந்தி கே.வி. உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, ஸ்ரீகோயில் முன்புறம் தரையில் அமர்த்தப்பட்டார். அவருக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜைகள் நடத்தி ஒரு குடம் நீரால் அபிஷேகம் நடத்தினார். பின்னர் அவரது செவியில் ஐயப்பன் மூல மந்திரத்தை சொல்லிக்கொடுத்து ஸ்ரீகோயிலுக்குள் அழைத்து சென்றார். இதுபோல அனிஷ் நம்பூதிரிக்கு மாளிகைப்புறம் கோயில் முன்புறம் நடைபெற்ற சடங்கில்
தந்திரி அபிஷேகம் நடத்தி, தேவி மந்திரம் சொல்லிக்கொடுத்து ஸ்ரீகோயிலுக்குள் அழைத்து சென்றார்.இன்று முதல் நெய் அபிஷேகம் நேற்று வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறவில்லை. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.இன்று அதிகாலை 3:00மணிக்கு புதிய மேல்சாந்தி கே.வி.உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும், தந்திரி அபிஷேகம் நடத்திய பின்னர் மண்டலகால நெய் அபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெறும்.வரும் 41 நாட்களிலும் காலை 3:15 மணி முதல் பகல் 12:00 வரை நெய் அபிஷேகம் நடைபெறும். எல்லா நாட்களிலும் காலை 7:30-க்கு உஷபூஜை, பகல் ஒரு மணிக்கு உச்சபூஜை, மாலை 6:30-க்கு தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகம், இரவு 10:00க்கு அத்தாழபூஜை ஆகியவை நடைபெறும்.
அலைமோதிய கூட்டம்: சபரிமலையில் நடைதிறந்த நேரத்தில் கூட்டம் அலைமோதியது. பக்தர்களுக்கு இந்த ஆண்டு மேலும் பல சிறப்பு வசதிகள் செய்யப் பட்டுள்ளன. வடக்குவாசல் மற்றும் நெய் அபிஷேக வரிசை மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.கோயில் பாதுகாப்புக்காக திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் பாதுகாப்பு தனி அதிகாரி பி.கே. மது தலைமையில் இரண்டாயிரம் போலீசார் வந்துள்ளனர். இவர்களுடன் மத்திய அதிவிரைவு படை வீரர்களும், தேசிய பேரிடர் நிவாரண படையினரும் வந்துள்ளனர்.கேரளாவில் இன்று கார்த்திகை ஒன்றாம் தேதியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் நாளை தான் கார்த்திகை பிறக்கிறது. இதனால் மண்டல பூஜையிலும் ஒரு நாள்வித்தியாசம் ஏற்படும்.