பதிவு செய்த நாள்
17
நவ
2017
10:11
சபரிமலை: புதிய மேல்சாந்தி ஏ.வி. உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நேற்று அதிகாலை 3:00 மணிக்கு திறந்ததும், சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கியது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும் பூஜைகள் ஒரு மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று தான் கார்த்திகை பிறக்கிறது. ஆனால் கேரளாவில் நேற்று கார்த்திகை முதல்நாள். இதையொட்டி நேற்று அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். அப்போது பக்தர்கள் சரணகோஷமிட்டனர். தொடர்ந்து கண்டரரு மகேஷ்மோகனரரு ஐயப்பனுக்கு அபிஷேகங்கள் நடத்திய பின், நெய் அபிஷேகத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கணபதி ஹோமமும் வழக்கமான உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை போன்றவையும் நடைபெற்றன. இனி வரும் 40 நாட்களிலும் தினமும் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கும். நேற்று அதிகாலையில் நடை திறந்த போது 18-ம் படியேறுவதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். நடை திறந்த போது தேவசம்போர்டு தலைவர் பத்ம குமார், உறுப்பினர் ராகவன், சங்கரதாஸ் உள்ளிட்டோர் சன்னிதானத்தில் இருந்தனர்.
பின்னர் சபரிமலையை பக்தர்களே சுத்தமாக பராமரிக்கும் புண்ணியனம் பூங்காவனம் திட்டத்தை தேவசம்போர்டு அமைச்சர் சுரேந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பக்தர்கள் தங்கள் வழிபாடுகளை நடத்தவும், வழிபாடு பொருட்களை சமர்ப்பிக்கவும் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தொடக்கத்தில் சபரிமலையில் மாறுபட்ட கால நிலை நிலவுகிறது. பகல் நேரத்தில் வெயில் கொளுத்துகிறது. இரவில் கடுமையான குளிர் நிலவுகிறது. மாலையிலேயே கடும் பனி மூட்டம் வருகிறது. இரவில் வாகன ஓட்டிகளுக்கு ரோடு தெரியாத அளவு பனிமூட்டம் உள்ளது.