பதிவு செய்த நாள்
01
டிச
2017
12:12
திருப்போரூர் : கந்தசுவாமி கோவில் சார்பில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை, தை முகூர்த்த நாட்களுக்காவது பயன்படுத்த, மாவட்டஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திருப்போரூரில், புகழ்பெற்ற கந்த சுவாமி கோவில் உள்ளது. இங்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தன்னிறைவு திட்டம் விழா நாட்களில், இரவில், கோவில் வளாகம் மற்றும் வெளி புறத்தில், பக்தர்கள் தங்குகின்றனர். இதனால், மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், கோவில் நிர்வாகம் ஒரு பங்கு நிதி அளித்தால், மாநில அரசின் தன்னிறைவு திட்டத்தில் திருமண மண்டபம் மற்றும் பக்தர்கள் ஓய்வுக்கூடம் அமைக்க, அரசிடமிருந்து இரு பங்கு நிதி கிடைக்கும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, அப்போதைய கோவில் செயல் அலுவலர், இத்திட்டத்தை செயல்படுத்த, உரிய நிதியை ஊரக வளர்ச்சி முகமைக்கு வழங்கினார். அதை தொடர்ந்து, அதே ஆண்டில், அரசு ஒப்புதலுடன், கால்கோல் விழாவும் நடைபெற்றது.
நடவடிக்கை: சுறுசுறுப்புடன் நடந்த பணிகள், 2015ல், 20 சதவீதத்துடன் நின்றன. இது குறித்து, தொடர்ந்து நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டதன் எதிரொலியாக, 10 சதவீத பணிகள் சரிசெய்யப்பட்டன. மீதமுள்ள பணிகளையும் விரைவில் முடித்து, தை மாத முகூர்த்தத்திலாவது பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்களும், உள்ளூர் வாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.