பதிவு செய்த நாள்
01
டிச
2017
12:12
திருவண்ணாமலை: ”மஹா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்த, மலை ஏறும் பக்தர்கள், மாலை, 6:00 மணிக்குள் கீழே இறங்கிவிட வேண்டும்,” என, கலெக்டர் கந்தசாமி கூறினார்.
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மஹா தீபத்தின் போது மலை ஏற, 2,500 பேர் அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு, அண்ணா நுழைவாயில் முன், முன்னுரிமை அடிப்படையில், காலை, 6:00 மணி முதல் டோக்கன் வழங்கப்படும். மேற்கு கோபுர தெருவில், மலை ஏறும் வழியாக, காலை, 11:00 மணி முதல், இவர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். இவர்கள், மாலை, 6:00 மணிக்குள் கீழே இறங்கி விட வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. பிளாஸ்டிக்கால் ஆன கேரி பேக், பாட்டில்கள் கொண்டு செல்லக் கூடாது. குடிநீர் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டிலை, மீண்டும் கீழே கொண்டு வந்துவிட வேண்டும். நெய் காணிக்கை செலுத்த விரும்புவோர், மலை மீது செல்ல முடியாதவர்கள் கொண்டு வரும் நெய்யை பெற, ரமணர் ஆசிரமம், பச்சையம்மன் கோவில், மேற்கு கோபுரம் அருகில் என, மூன்று இடங்களில் சிறப்பு கவுன்டர் இன்று காலை திறக்கப்பட்டு, மாலை வரை நெய் பெறப்படும். இந்த நெய், மஹா தீப கொப்பரையில் கொண்டு சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.