விநாயகரை முதல் கடவுளாக வழிபடும் மதம், காணாபத்யம். முருகனை வழிபடுவது கவுமாரம். அம்பிகையை வழிபடுவது சாக்தம். சைவ சமயத்தில் சிவனே முதற்பொருள். திருமாலை வழிபடுவதற்கு வைணவம் என்று பெயர். அது போல சூரியனை பரம்பொருளாக வழிபடும் முறை சவுரம். இந்த வழிபாடுகளில் சூரியன் தவிர, மற்ற தெய்வத்தை கண்களால் காண முடியாது. கண் கண்ட தெய்வமான சூரியன் கிழக்கில் உதயமாகி அருள்புரிகிறார். இவரது வழிபாடு பழங்காலத்தில் மக்கள் மத்தியில் சிறப்பாக இருந்து வந்தது. தற்போது கோயில்களில் பரிவார தெய்வங்களில் ஒருவராக திகழ்கிறார்.