காஞ்சிபுரம் மடத்திற்கு பக்தர் ஒருவர் வந்தார். அவருடைய குடும்பத்தில் ஏதேதோ பிரச்னை; வியாதி ஒருபுறம்; பொண்ணுக்கு நல்ல வரன் அமையவில்லை; மனைவியிடம் அடிக்கடி சண்டை; மனசில் நிம்மதி இல்லை; இப்படி அடுக்கடுக்காக சோதனை வருவது ஏன் என சுவாமிகளிடம் கேட்டார். மேலும், “பிரச்னைக்கு தீர்வு தேடி ஜோசியரிடம் ஜாதகம் பார்த்தேன். பரிகாரமாக நவக்கிரக ஹோமம் செய்தால் நல்லது” என்று சொன்னார். அதற்கு தங்களின் ஆலோசனை கேட்டு வந்தேன். பக்தரின் முகத்தை உற்று பார்த்த சுவாமி, “நவக்கிரக ஹோமம் பண்ணினா நல்லது நடக்கிறதோ இல்லையோ நிச்சயம் கெடுதல் உண்டாகாது” ன்று சொல்லி விட்டு மடத்திற்குள் சென்றார். பக்தருக்கு ஏதும் புரியவில்லை.
“ஹோமம் செய்யச் சொல்கிறாரா? வேண்டாம் என்கிறாரா? ” என்ற குழப்பம் உண்டானது. மடத்திலுள்ள தொண்டரிடம் விஷயத்தை சொல்ல அவர், தானே சுவாமிகளிடம் கேட்பதாக உள்ளே சென்றார். சுவாமிகளும் விளக்கம் அளித்தார். “நமக்கு வாழ்வில் நல்லது நடக்கணும்னா, நாமும் நல்லபடியா இருக்கணும் இல்லியா? தாத்தா, பாட்டி வீட்டுல இருக்காளே, அவாகிட்ட ஆதரவா ரெண்டு வார்த்தை பேசறோமா? பெண்டாட்டி, புருஷனோட திட்டைக் கேட்கவென்றே பிறந்தவளா? குடும்பமே கதியா பாடுபடுற அவகிட்ட அன்பா நாலு வார்த்தை சொல்லாம, எப்பவும் சிடுசிடுத்தா எப்படி? வயசான காலத்துலயும் தன்னால் முடிஞ்சதை உழைக்கிற அப்பா, அம்மா கிட்ட நன்றியோட நடக்கிறோமா? வீட்டு வேலைக்காரர்களை எப்பவும் ஏன் திட்டணும்? பிச்சை கேட்டு வந்தா ரெண்டு காசு போட்டா குறைஞ்சா போவோம்? வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு ஜலம் கொடுத்தாவது உபசரிக்க வேண்டாமா? இதெல்லாம் பண்ணினா குடும்பம் ஒரு கோயிலாக திகழும். அப்புறம் தான் நவக்கிரக ஹோமம் பண்ணணும் தெரிஞ்சுதா....” என்றார் அலுப்புடன்.
விடை பெற்ற தொண்டர், சுவாமிகளின் விளக்கத்தை பக்தரிடம் தெரிவித்தார். பக்தரின் கண்களில் கண்ணீர் பெருகியது. ஓடி வந்து சுவாமிகளின் திருவடியை வணங்கினார். “சுவாமி... நீங்க சொன்ன குத்தமெல்லாம் எங்கிட்ட இருக்கு. இனிமே என்னை மாத்திக்கிறேன் பெரியவா” என்று சொல்லி வணங்கினார். கனிவுடன் பார்த்த பரமாச்சாரியார் “ஷேமமா இருக்கணும்” என்று சொல்லி ஆசியளித்தார். - திருப்பூர் கிருஷ்ணன்