பதிவு செய்த நாள்
18
ஜன
2018
11:01
அரூர்: அரூர் அருகே, பொங்கல் விழாவை முன்னிட்டு, முயல் விடும் விழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது. தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த குடுமியாம்பட்டி கிராமத்தில், ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு, பாரம்பரியமாக முயல் விடும் விழா நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு முயல் விடும் நிகழ்ச்சிக்காக, நேற்று காலை, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், ஊரில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்று, சுவாமியை வழிபட்டனர். பின், கோவிலில் இருந்த வலைகளை எடுத்துக் கொண்டு, முயலை பிடிக்க வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு வலை மூலம் ஒரு முயலை பிடித்து வந்தனர். மாலை, 6:00 மணிக்கு, கோவில் அருகில் பெண்கள் பொங்கல் வைத்த பின், பெரிய மாரியம்மன், வேடியப்பன் மற்றும் வேட்டைக்காரன் ஆகிய மூன்று சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜை நடந்தது. இதையடுத்து, காட்டிலிருந்து பிடித்து வந்த முயலுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜை செய்து, சுவாமியை சுற்றி, மூன்று முறை வலம் வந்த பின், சிறிது துாரம் சென்று முயலை விட்டனர். அது துள்ளி குதித்து, வனப்பகுதியை நோக்கி ஓடியது. விழாவில், அச்சல்வாடி, ஒடசல்பட்டி உட்பட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: கடந்த, மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக, முயல் விடும் விழா நடத்தி வருகிறோம். விழாவின் போது விடப்படும் முயலை யாராவது பிடித்தால், அவர்களுக்கு ஊர் பஞ்.,ல் அபராதம் விதிக்கப்படும். ஊர் மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டி, பாரம்பரியமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில், நேற்று முன்தினம் மாலை, முயல் விடும் விழா நடந்தது. இதை காண, ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.