பதிவு செய்த நாள்
22
மார்
2018
10:03
வேலூர் வேலூர் அருகே, பராந்தக சோழ மன்னனால் கட்டப்பட்டு, ராஜராஜ சோழ மன்னன் குடமுழுக்கு செய்த கோவிலில், சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு, நேற்று நடந்தது. தமிழக, ஆந்திர மாநில எல்லையில், வேலுார் மாவட்டத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டை நாட்டின் வட பகுதியான வள்ளிமலை அமைந்துள்ளது. இங்கு, நீவா நதி என்ற பொன்னை ஆற்றின் மேற்கு கரையில், மேல்பாடி தபஸ்கிருதாம்பாள் சமேத சோமநாதீஸ்வரர் கோவில் உள்ளது.
இது, 1,000 ஆண்டுகளுக்கு முன், பராந்தக சோழ மன்னனால் கட்டப்பட்டு, ராஜராஜ சோழ மன்னனால் குடமுழுக்கு செய்யப்பட்ட சிறப்புக்குரியது. இக்கோவிலின் தென்திசையில், 200 அடி தொலைவில், ராஜராஜ சோழனின் பாட்டனார், ஆரூர் துஞ்சியதேவன், கல்லறை அமைந்துள்ளது.இவர், கி.பி., 1014-ல் நடந்த போரில், வீரமரணம் அடைந்தார். அவரது நினைவாக, கருங்கல்லால் ஆன அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய, கோவில் கட்டப்பட்டது. அங்கு, லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அரிஞ்சிகை ஈஸ்வரர் கோவிலாக அழைக்கப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த கோவிலில், சிவலிங்கம் மீது, ஆண்டுதோறும், மார்ச், 21ம் தேதி முதல், 24-ம் தேதி வரை, காலை, 6:00 முதல், 6:30 மணி வரை சூரிய ஒளி விழும், நிகழ்வு நடக்கிறது. இதை பார்ப்பதற்காக, ஏராளமானோர் நேற்று இக்கோவிலுக்கு வந்திருந்தனர்.