பதிவு செய்த நாள்
19
மே
2018
11:05
கிருஷ்ணகிரி: சந்தூர் கிராமத்தில், மகாபாரத திருவிழாவையொட்டி, அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் கிராமத்தில், திரவுபதியம்மன் கோவிலில், மகாபாரத விழா கடந்த, 2ல் தொடங்கியது. தினமும் மதியம் மகாபாரத சொற்பொழிவு, இரவில் தெருக்கூத்து நாடகம் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான, அர்ச்சுனன் தபசு மரம் ஏறுதல் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. முன்னதாக, சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 37 அடிக்கு மேல் உயரமுள்ள பனை மரம் நடப்பட்டது. தபசு மரத்தை, கருடன் வலம் வந்ததையடுத்து, அர்ச்சுனன் தவ வேடம் அணிந்திருந்த நாடகக் கலைஞர், பூசாரி சிவன் ஆகியோர் பனை மரத்தின், ஒவ்வொரு படிக்கும் ஒரு பாடல் பாடியவாறு ஏறினர். தொடர்ந்து மரத்தின் உச்சியில் இருந்து, அர்ச்சுனன் தவம் புரிந்து பக்தர்களுக்கு வில்வ இலை, எலுமிச்சை, வாழைப்பழம், பொரி கடலை, பூ ஆகியவற்றை வீசினர். இவற்றை சாப்பிட்டால் குழந்தை இல்லாத பெண்களுக்கு, குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.