பதிவு செய்த நாள்
14
ஜூன்
2018
12:06
காஞ்சிபுரம்:வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் பங்கேற்கும், வெளியூர் பக்தர்களுக்காக, உணவு உபசரிப்புடன், இலவசமாக தங்குவதற்காக காஞ்சிபுரத்தில், பல்வேறு மடங்கள், தர்ம சத்திரங்கள் செயல்படுகின்றன. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவம், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 10 நாட்கள் நடைபெறுகிறது. கருடசேவை மற்றும் தேரோட்டத்தின் போது, உள்ளூர் மட்டுமல்லாமல், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள்வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பஜனை குழுவினர், காஞ்சிபுரம் வந்துள்ளனர். ஒவ்வொரு பஜனை குழுவிலும், 10க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள், பிரபல உற்சவத்தின் போது, சுவாமி ஊர்வலத்திற்கு பின், பஜனை பாடியபடி செல்கின்றனர். அதன்படி, பிரம்மோற்சவத்தில் பங்கேற்க, காஞ்சிக்கு வந்துள்ள வெளியூர் பஜனை குழுவினர் மற்றும் பக்தர்களை உபசரிக்கவும், அவர்கள் இலவசமாக தங்குவதற்காகவும், வரதராஜ பெருமாள் கோவிலைச் சுற்றி, 12க்கும் மேற்பட்ட மடங்கள், தர்ம சத்திரங்கள், மண்டபங்கள் உள்ளன.
இதில், பெரும்பாலானவற்றில், வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள் அனைவருக்கும், காலை முதல், இரவு வரை, தலைவாழை இலையில், கூட்டு, பொறியல், அவியல் போன்ற பதார்த்தங்களுடன், உணவு பரிமாறி உபசரிக்கின்றனர். மேலும், வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கும் இடவசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வெளியூரில் இருந்து, காஞ்சிபுரம் வரதர் கோவில் பிரம்மோற்சவத்தில் பங்கேற்க வந்துள்ள வெளியூர் பஜனை கோஷ்டியினர், 10 நாட்களும் இங்கு தங்கியிருந்து, பிரம்மோற்சவம் முடிந்ததும், தங்கள் ஊர்களுக்கு புறப்படுகின்றனர். வரதராஜ பெருமாள் தெற்கு மாடவீதியில் உள்ள வியாஸராஜ மடத்தில், 52வது ஆண்டாக, 10 நாட்களும், அனைத்து தரப்பு பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கி வருகிறோம். மேலும், வெளியூர் பக்தர்கள் தங்க, இலவசமாக தங்கும் வசதியும் உண்டு. வி.குருராஜ்மேலாளர், வியாஸராஜ மடம், காஞ்சிபுரம்
அதிதி சத்காரம் என்ற பெயரில், சன்னதி தெருவில், காலை, 9:30 முதல், இரவு, 11:00 மணி வரை, ஒரு நாளைக்கு, 3,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகிறோம். வெளியூர் பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்குவதோடு, வேட்டி, சேலையும் இலவசமாக வழங்குகிறோம். கூரம் சேஷாத்ரிஅதிதி சத்காரம், ஸ்ரீரங்கம்