நதிக்கரைகளில், மரத்தடிகளில் என்று நாம் பார்க்கும் இடங்களிலெல்லாம் பிள்ளையார் அருள்பாலித்து வருகிறார். அவரை வழிபட நிறைய சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை. ஒன்றும் படிக்காத வருக்கும், அவர் கூப்பிட்ட குரலுக்கு வந்துவிடுவார். பாவித்த மாத்திரத்தில், எந்த மூர்த்தியிலும் எழுந்தருளி விடுவார் பிள்ளையார், தோப்புக்கரணம் அவருக்கான விசேஷம்!
சிதறு தேங்காய் போடுவது, நெற்றியில் சூட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவது ஆகியவை பிள்ளையார் ஒருவருக்கே உரியவை. பிள்ளையார் சன்னிதியில் இரண்டு கைகளையும் குறுக்கே மறித்து நெற்றிப்பொட்டில் குட்டிக்கொள்ள வேண்டும். அப்படியே இரண்டு கைகளையும் மறித்துக் காதுகளைப் பிடித்துக்கொண்டு, முட்டிக்கால் தரையில் படுகிற மாதிரி தோப்புக்கரணம் போட வேண்டும். இவை எதற்கு என்றால், யோக சாஸ்திரம் என்று ஒன்று இருக்கிறது. அதிலே நம் நாடிகளில் ஏற்படுகிற சலனங்களால் எப்படி மனதையும் நல்லதாக மாற்றிக்கொள்ளலாம் என்று வழி சொல்லியிருக்கிறது. நம் உடம்பைப் பல தினுசாக வளைத்துச் செய்கிற அப்பியாஸங்களால், சுவாசத்தின் கதியில் நல்லவித மாற்றங்கள் நிகழ்கின்றன. நெற்றிப்பொட்டில் குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவது இவற்றால் நம் நாடிகளின் சலனம் மாறும்; மனதில் தெய்விகமான மாறுதல்கள் உண்டாகும்.