Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
15. பாத்திரங் கொண்டு பிச்சை புக்க காதை 17. உலகவறவி புக்க காதை
முதல் பக்கம் » மணிமேகலை
16. ஆதிரை பிச்சையிட்ட காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2012
05:01

(பதினாறாவது மணிமேகலைக்கு ஆதிரையென்னும் பத்தினிப் பெண்டிர் பாத்தூணீத்த பாட்டு)

அஃதாவது: அமுதசுரபியின்கண் முதன்முதலாக அகமலி உவகையின் பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடும் பிச்சை ஏற்றல் பெருந்தகவுடைத்து என்னுங் கோட்பாட்டோடு ஆதிரையின் மங்கலமனை முன்றிலிலே மணிமேகலை தான் புனையா வோவியம் போல நிற்ப, அதுகண்ட ஆதிரை நல்லாள் அகமலியுவகையளாய் அவளைத் தொழுது வலங்கொண்டு அமுதசுரபி என்னும் அரும் பெரும் பாத்திரம் நிறைதருமாறு ஆருயிர் மருந்தைக் கொணர்ந்து பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென வாயார வாழ்த்திப் பெய்து அருளறத்திற்குக் கால்கோள் செய்தமையைக் கட்டுரைக்கும் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- ஆதிரையின் கற்பின் பொற்பு விளங்கும் வரலாற்றினைக் காயசண்டிகை மணிமேகலைக்குக் கூறுபவள் ஆதிரை கணவனாகிய சாதுவன் கணிகையின் கேண்மை கொண்டு வட்டினுஞ் சூதினும் வான் பொருள் தோற்றுக் கேடெய்துதலும் கணிகையாற் கைவிடப்பட்டு மரக்கலமேறிப் பொருளீட்டய் போதலும் கடலில் மரக்கலம் உடைந்தொழிதலும் சாதுவன் ஒடிமரம் பற்றி நீந்திப் போய் நக்கசாரணர் நாகர் வாழ் மலைப்பக்கம் சார்ந்து நாகர் தலைவன்பால் எய்துதலும் உடைந்த மரக்கலத்தே உயிருய்ந்தோர் பூம்புகார்க்கு வந்து சாதுவன் சாவுற்றான் என ஆதிரைக்கறிவித்தலும் அவள் தீப்பாய்தலும் தீ அவளைச் சுடாது நீரெனக் குளிர்ந்திருத்தலும், அவள் தீயுங் கொல்லாத் தீவினையாட்டியேன் இனி யாது செய்வேன் என்று ஏங்குதலும் அசரீரி அந்தரம் தோன்றி நின் கணவன் உயிருய்ந்துளன் என்று கூறுதலும் நீராடி இல்லம் புகுவாள் போன்று ஆதிரை மனை புகுதலும் சாதுவன் நக்கர் தலைவனாலே நயக்கப்பட்டு நம்பிக்கிளையளோர் நங்கையைக் கொடுத்து வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும் எனத் தன் பணிமாக்கட்குக் கட்டளையிடுதலும் அதுகேட்ட சாதுவன் அருளறமுடையனாதலின் அவற்றை மறுத்து நக்கர் தலைவனுக்கு நல்லறம் கூறுதலும் பிறவும் பெரிதும் இனிமையாக ஓதப்படுகன்றன. இக் காதையினால் தமிழகத்தே புத்த சமயத்தைத் தழுவிய தமிழர்கள் தமது பழைய பண்பாட்டை விடாமல் அச் சமயத்தோடு சார்த்தித் தமிழகத்துப் பண்பு கெடாமல் வாழ்ந்திருந்ததொரு தனிச் சிறப்பை இனிதாக இப்புலவர் பெருமான் அறிவித்துள்ளார் ஆதலின் இக்காதை ஒரு வரலாற்றுச் சிறப்புடையதாகவும் திகழ்கின்றது; அச்சிறப்பினை இதனுரையில் உரியவிடத்தே எடுத்துக் காட்டுதும்; அவற்றை ஆண்டுக் கண்டு கொள்க.

ஈங்கு இவள் செய்தி கேள் என விஞ்சையர்
பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள்
ஆதிரை கணவன் ஆய் இழை! கேளாய்
சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி
அணி இழை தன்னை அகன்றனன் போகி
கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க
வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி
கெட்ட பொருளின் கிளை கேடுறுதலின்
பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டி
காணம் இலி என கையுதிர்க்கோடலும்  16-010

வங்கம் போகும் வாணிகர் தம்முடன்
தங்கா வேட்கையின் தானும் செல்வுழி
நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ
ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப
நக்க சாரணர் நாகர் வாழ் மலைப்
பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன்
நாவாய் கேடுற நல் மரம் பற்றிப்
போயினன் தன்னோடு உயிர் உயப் போந்தோர்
இடை இருள் யாமத்து எறி திரைப் பெருங் கடல்
உடை கலப் பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன்  16-020

சாதுவன் தானும் சாவுற்றான் என
ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு
ஊரீரேயோ! ஒள் அழல் ஈமம்
தாரீரோ? எனச் சாற்றினள் கழறி
சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து
முடலை விறகின் முளி எரி பொத்தி
மிக்க என் கணவன் வினைப் பயன் உய்ப்பப்
புக்குழிப் புகுவேன் என்று அவள் புகுதலும்
படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும்
உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது  16-030

ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்
சூடிய மாலையும் தொல் நிறம் வழாது
விரை மலர்த் தாமரை ஒரு தனி இருந்த
திருவின் செய்யோள் போன்று இனிது இருப்பத்
தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன்
யாது செய்கேன்? என்று அவள் ஏங்கலும்
ஆதிரை! கேள் உன் அரும் பெறல் கணவனை
ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்பப் போகி
நக்க சாரணர் நாகர் வாழ் மலைப்
பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன்  16-040

சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன்
வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்
நின் பெருந் துன்பம் ஒழிவாய் நீ என
அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்
ஐ அரி உண் கண் அழு துயர் நீங்கி
பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று
மனம் கவல்வு இன்றி மனைஅகம் புகுந்து என்
கண் மணி அனையான் கடிது ஈங்கு உறுக! என
புண்ணியம் முட்டாள் பொழி மழை தரூஉம்
அரும் பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும்  16-050

விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்
ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை
ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மர நீழல்
மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து
துஞ்சு துயில்கொள்ள அச் சூர் மலை வாழும்
நக்க சாரணர் நயமிலர் தோன்றி
பக்கம் சேர்ந்து பரி புலம்பினன் இவன்
தானே தமியன் வந்தனன் அளியன்
ஊன் உடை இவ் உடம்பு உணவு என்று எழுப்பலும்
மற்று அவர் பாடை மயக்கு அறு மரபின்  16-060

கற்றனன் ஆதலின் கடுந் தொழில் மாக்கள்
சுற்றும் நீங்கித் தொழுது உரையாடி
ஆங்கு அவர் உரைப்போர் அருந்திறல்! கேளாய்
ஈங்கு எம் குருமகன் இருந்தோன் அவன்பால்
போந்தருள் நீ என அவருடன் போகி
கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும்
வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில்
எண்கு தன் பிணவோடு இருந்தது போல
பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி
பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகிக்  16-070

கோடு உயர் மர நிழல் குளிர்ந்த பின் அவன்
ஈங்கு நீ வந்த காரணம் என்? என
ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும்
அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன்
வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள்
நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து
வெங் களும் ஊனும் வேண்டுவ கொடும் என
அவ் உரை கேட்ட சாதுவன் அயர்ந்து
வெவ்உரை கேட்டேன் வேண்டேன் என்றலும்
பெண்டிரும் உண்டியும் இன்றுஎனின் மாக்கட்கு  16-080

உண்டோ ஞாலத்து உறு பயன்? உண்டுஎனின்
காண்குவம் யாங்களும் காட்டுவாயாக என
தூண்டிய சினத்தினன் சொல் என சொல்லும்
மயக்கும் கள்ளும் மன் உயிர் கோறலும்
கயக்கு அறு மாக்கள் கடிந்தனர் கேளாய்
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல் அறம் செய்வோர் நல் உலகு அடைதலும்
அல் அறம் செய்வோர் அரு நரகு அடைதலும்
உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர்  16-090

கண்டனை ஆக! என கடு நகை எய்தி
உடம்பு விட்டு ஓடும் உயிர் உருக் கொண்டு ஓர்
இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய்
அவ் உயிர் எவ்வணம் போய்ப் புகும், அவ் வகை
செவ்வனம் உரை எனச் சினவாது இது கேள்
உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி
மற்றைய உடம்பே மன் உயிர் நீங்கிடின்
தடிந்து எரியூட்டினும் தான் உணராதுஎனின்
உடம்பிடைப் போனது ஒன்று உண்டு என உணர் நீ
போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது  16-100

யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம்
கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை
ஆங்கனம் போகி அவ் உயிர் செய் வினை
பூண்ட யாக்கையின் புகுவது தெளி நீ
என்று அவன் உரைத்தலும் எரி விழி நாகனும்
நன்று அறி செட்டி நல் அடி வீழ்ந்து
கள்ளும் ஊனும் கைவிடின் இவ் உடம்பு
உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன்
தமக்கு ஒழி மரபின் சாவுறுகாறும்  16-110

எமக்கு ஆம் நல் அறம் எடுத்து உரை என்றலும்
நன்று சொன்னாய்! நல் நெறிப் படர்குவை
உன் தனக்கு ஒல்லும் நெறி அறம் உரைத்தேன்
உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின்
அடு தொழில் ஒழிந்து அவர் ஆர் உயிர் ஓம்பி
மூத்து விளி மா ஒழித்து எவ் உயிர்மாட்டும்
தீத்திறம் ஒழிக! எனச் சிறுமகன் உரைப்போன்
ஈங்கு எமக்கு ஆகும் இவ் அறம் செய்கேம்
ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க எனப்
பண்டும் பண்டும் கலம் கவிழ் மாக்களை  16-120

உண்டேம் அவர் தம் உறு பொருள் ஈங்கு இவை
விரை மரம் மென் துகில் விழு நிதிக் குப்பையோடு
இவை இவை கொள்க என எடுத்தனன் கொணர்ந்து
சந்திரதத்தன் என்னும் வாணிகன்
வங்கம் சேர்ந்ததில் வந்து உடன் ஏறி
இந் நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து
தன் மனை நன் பல தானமும் செய்தனன்
ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால்
பூங் கொடி நல்லாய்! பிச்சை பெறுக! என
மனைஅகம் புகுந்து மணிமேகலை தான்  16-130

புனையா ஓவியம் போல நிற்றலும்
தொழுது வலம் கொண்டு துயர் அறு கிளவியோடு
அமுதசுரபியின் அகன் சுரை நிறைதர
பார்அகம் அடங்கலும் பசிப் பிணி அறுக என
ஆதிரை இட்டனள் ஆருயிர்மருந்து என்  16-135

(இக் காதை 129 ஆம் அடிகாறும் ஆதிரை வரலாற்றினைக் கூறுகின்ற காயசண்டிகை கூற்றாய் ஒரு தொடர்)

ஆதிரை கணவன் சாதுவன் கேடெய்துதல்

1-10: ஈங்கிவள்..............கோடலும்

(இதன் பொருள்) விஞ்சையர் பூங்கொடி- விச்சாதரியாகிய பூங்கொடி போன்ற காய சண்டிகை மணிமேகலை நோக்கி; ஆயிழை ஈங்கு இவள் செய்தி கேள் என- மணிமேகலாய்! ஈங்கு யான் கூறிய இவ்வாதிரையின் வரலாற்றினைக் கூறுவல் கேட்பாயாக! என்று சொல்லி மணிமேகலையை முன்னிலைப்படுத்திக் கொண்டு மாதர்க்கு புகுந்ததை உரைப்போள்- அவ்வாதிரைக்கு நிகழ்ந்த செய்தியைக் கூறுபவள்; ஆயிழை கேளாய் ஆதிரை கணவன் சாதுவன் என்போன் தகவு இலன் ஆகி- ஆயிழாய்! கேள் இந்த ஆதிரை நல்லாள் கணவனாகிய சாதுவன் என்னும் பெயருடையன் ஆவான் அவன் பெருந்தன்மையிலனாய் இன்பத் துறையில் எளியனாகி; அணியிழைதன்னை அகன்றனன் போகி கற்புக் கடம்பூண்ட தெய்வம் போலவாளாகிய அறிகலனணிந்த தன் மனைவி ஆதிரை நல்லாளைப் பிரிந்து போய்; கணிகை யொருத்தி கைத்து ஊண்நல்க- தன்னைக் காமுற்ற கணிகை மகள் ஒருத்தி தன் பரத்தைமைத் தொழிலால் ஈட்டிய பொருளாலியன்ற உணவினை நாடொறும் வழங்குதலாலே அதனை உண்டு; வட்டினும் சூதினும் வான் பொருள் வழங்கி- வட்டாடுதலும் சூதாடுதலும் ஆகிய தீத்தொழில்களிலீடுபட்டுத் தன் முன்னோர் ஈட்டி வைத்த பெரும்  பொருளையெல்லாம் தொலைத்து விட்டமையாலே; கெட்ட பொருளின் கிளை கேடு உறுதலின்-இவ்வாறு கெட்டொழிந்த பொருள் காரணமாக அப் பொருட்கு வருவாய் ஆகிய நிலமும் பிறவுமாகிய பொருட் பகுதிகள் எல்லாம் கேடுறுதலாலே; பேணிய கணிகையும் காணம் இலி என பிறர் நலம் காட்டிக் கை உதிர்க் கோடலும்-பொருளிருக்குமளவும் தன்னைப் பொய்யன்பு காட்டி உண்டியும் கொடுத்துப் பேணி வந்த அக்கணிகை தானும் இவன் பொன்னில்லாதவன் என்றறிந்த பொழுதே தன்னைக் காமுற்று வருகின்ற பிறராகிய செல்வரின் சிறப்பை இவனுக்குக் கூறிக்காட்டி இனி நீ என் மனைக்கு வாராதே கொள் எனக் கையை அசைத்துப் போக்கி விடாநிற்ப என்க.

(விளக்கம்) ஈங்கிவள் என்றது ஈண்டு யான் கூறிய அவ்வாதிரை என்றவாறு செய்தி என்றது- ஆதிரை தெய்வக் கற்புடையாள் என இவ்வுலகம் அறிதற்குக் காரணமாக அவட்கெய்திய செய்தியை விஞ்சையர் பூங்கொடி: காயசண்டிகை; மாதர்க்கு-ஆதிரைக்கு. புகுந்ததை- நிகழ்ந்த செய்தியை ஆயிழை:விளி. அணியிழை ஆதிரை. கணிகை கைத்தூண் என்றது- கணிகைத் தொழிலால் செய்த பொருளாலாய உண்டி. இஃது உண்ணத்தகாமைக்கு ஏதுவை விதந்து கூறியபடியாம். கடவதன்று நின் கைத்தூண் வாழ்க்கை எனச் சிலப்பதிகாரத்தினும் வருதலுணர்க.(15-57)

வட்டினும் சூதினும் கெட்ட பொருட்கு முதலாகிய வழியைக் கிளை என்றார். பொருளின் வருவாய்க்குரிய கிளைகள் என்க. அவை நிலமும் தொழிலுமாம். பேணிய- என்றது பொருள் உள்ளதுணையும் பேணிய கணிகை என்பதுபட நின்றது. பிறர் நலம் காட்டுதலாவது இன்னின்னார் என்னை விரும்புகின்றனர் அவர் இத்துணை நலம் உடையர் என்று நாணாது கூறுதல். இனி இன்னின்ன கணிகையர் இன்னின்னாரால் இத்துணை நலம் எய்தினர் என எடுத்துக் காட்டலுமாம். இது நின்னால் யாது பயன் எனக் கைவிட்டுப் போக்கற் பொருட்டு. காணம்- பொன். கையுதிர்க் கோடல்- கைப்பற்றுதற்கு எதிர்மறை. அகற்றுதல் என்னும் பொருட்டாய ஒரு சொல் எனினுமாம்.

சாதுவன் மரக்கலமேறிச் செல்லுதலும் அவனுக்கு நேர்ந்த நிகழ்ச்சியும்

11-21: வங்கம்.......................உற்றானென

(இதன் பொருள்) தானும் வங்கம் போகும் வணிகர் தம்முடன் தங்கா வேட்கையின் செல்வுழி- தனது தீயொழுக்கத்தாலே தீதுற்ற அச் சாதுவன்றானும் பொருளீட்டற் பொருட்டு மரக்கல மேறி வேற்று நாட்டிற்குச் செல்லும் வணிகரோடு கூடி ஓரிடத்தினும் தங்காமல் பிறநாடெல்லாம் காண்டல் வேண்டும் என்னும் வேணவரவோடு கடலினூடே செல்லும்பொழுது; நளி இரு முந்நீர் வளிகலன் வெளவ - செறிந்த பெரிய கடலானது சூறைக் காற்று வீசிக் கவிழ்த்தலால் மரக்கலத்தை விழுங்கி விட்டமையாலே; ஒடி மரம் பற்றி ஊர் திரை உதைப்ப நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன் காற்றினாலே மோதிக் கவிழ்க்கப்பட்ட அம் மரக்கலத்தல் முறிந்து மிதக்கின்ற மரத்தைத் தெப்பமாகப் பற்றிக் கொண்டு கரை நோக்கி இயங்குகின்ற அலைகள் அம் மரத்தினை உந்திச் செலுத்துதலாலே சென்று ஆடையின்றித் திரிகின்றவராகிய நாகர் என்போர் வாழுகின்ற தீவின் மலைப்பக்கத்தே நிலத்திலேறி அவர் வயப்பட்டனன் இவன் நிலை இன்னதாக; நாவாய் கேடு உற நல்மரம் பற்றி உயிர் உயப் போந்தோர்-இவனோடு மரக்கலத்திற் சென்றவர் அம் மரக்கலங் கெட்டபொழுது இவனைப் போலவே ஒடிந்த நல்ல மரத்துண்டுகளைப் பற்றி அவனோடு உயிர் உய்தற்கு முயன்று சென்றோருள் சிலர் பூம்புகார் நகரத்திற்கே சென்று கரை ஏறியவர்; இடை இருள் யாமத்து எறி திரைப் பெருங்கடல் உடைகலப்பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன் சாதுவன் தானும் சாவு உற்றான் என-இரவின் இருள் மிக்க இடையாமத்திலே மோதுகின்ற அலைகளையுடைய பெரிய கடலின் கண் உடைந்து மூழ்கிய மரக்கலத்தினூடே அகப்பட்டு அங்கு இறந்தவர்களோடு கூடச் சாதுவன்றானும் இறந்தொழிந்தான் என்று கருதி அச் செய்தியை நகரிற் கூறிவிட்டமையாலே என்க.

(விளக்கம்) தங்கா வேட்கை என்றது-ஓரிடத்தே தங்காமல் யாண்டுஞ் சென்று காண வேண்டும் என்னும் அவா. இனி ஊரகத்தே தங்காமைக்குக் காரணமான பொருள் வேட்கையால் எனினுமாம்.

தானும்- சாதுவனும் நளி-குளிர்ச்சியுமாம். முந்நீர் வளி கவிழ்த்தலாலே வெளவ என்க. மரக்கலம் மூழ்கிவிட என்பது கருத்து. மரக்கலத்தில் ஒடிந்து தனித்து மிதக்கும் மரம் என்க. ஊர்திரை: வினைத்தொகை.

நக்க சாரணர் நாகர்- ஆடையின்றித் திரிகின்ற நாகர் என்னும் ஒரு வகை மலையில் வாழும் மாக்கள். இவர் நாகத்தைத் தெய்வமாகக் கருதி வழிபடுவோராதலின் நாகர் என்னும் பெயர் பெற்றனர் என்ப. அவர் பான்மையன்-அவர் வயப்பட்டவன்.

உயிருயப் போந்தவர் சிலர் வெவ்வேறு திசைகளிற் சென்றுய்ந்தாராக அவருள் நன் மரம் பற்றிய காரணத்தாலே மீண்டும் புகார் நகரத்தில் வந்து கரையேறி யுய்ந்தாரும் சிலர் உளராயினர்; அவர் மரக்கலத்துளகப்பட்டு இறந்தவரோடே சாதுவனும் இறந்தனன் என்று எண்ணியே அவன் இறந்தான் என்றே சொல்லி விட்டனர் என்க.

கணவன் இறந்தான் எனக் கேள்வியுற்ற ஆதிரையின் செயல்

22-28: ஆதிரை.....................புகுதலும்

(இதன் பொருள்) ஆங்கு அது கேட்டு ஆதிரை நல்லாள்-ஆங்குப் பரவிய அச் செய்தியைக்கேட்டுக் கற்புடைமையிற் சிறந்த ஆதிரை என்னும் நங்கை அப்பொழுதே; ஊரீரேயோ-இம்மூதூரில் வாழும் பல்சான்றீரே பல்சான்றீரே!; ஒள் அழல் ஈமம் தாரீரோ எனச் சாற்றினள் கழறி-கணவனை இழந்த அளியேனுக்கு யான் மூழ்குதற்கியன்ற ஒள்ளிய நெருப்பினைச் சுடுகாட்டின்கண் வளர்த்துத் தரமாட்டீரோ? என்று பலர்க்கும் அறிவிக்க அவர் தாமும் அவள் தீயின் முழுகுதல் வேண்டா என அவளைத் தடுத்த பொழுது அவரையெல்லாம் இடித்துரை கூறி அடக்கி அவர்களைக் கொண்டே; சுடலைக் கானில் தொடுகுழிப்படுத்து முடலை முளி விறகின் எரி பொத்தி-சுடுகாட்டுக் கோட்டத்துள்ளமைந்த நன்காட்டின்கண் தீ வளர்த்தற்குத் தோண்டும் குழியை முறைப்படி தோண்டச் செய்து அக் குழியிலடுக்கிய முறுக்கேறி உலர்ந்த விறகின்கண் தீ மூட்டி; மிக்க என் கணவன் வினைப்பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன் என்று அவள் புகுதலும்- எனக்குத் தெய்வத்தினும் மிக்கவனாகிய என்னுடைய கணவன் தான் செய்த பழவினை செலுத்துதலாலே சென்று மாறிப் பிறந்த விடத்தே யானும் என்னுயிரும் மாறிப் பிறக்கு மாற்றால் அவன் மனைவியே ஆகுவேன் என்னும் கோட்பாட்டோடே அவ்வாதிரை அத் தீயினுட் புகாநிற்ப என்க.

(விளக்கம்) அது- சாதுவன் சாவுற்றான் என்ற செய்தி. ஊரீர் என்றது ஊரிலுள்ள தன் குலத்துச் சான்றோரை. ஈமம்-சுடுகாட்டில் பிணஞ்சுட அடுக்கும் விறகு. சுடுகாடெனினுமாம். சாற்றுதல் வற்புறுத்துக் கூறுதல். கழறிஎன்றார். ஊரவர் அவளைத் தடுத்தமையும் அவரையெல்லாம் இடித்துக் கூறித் தன் கருத்தின் வழி ஒழுகினாள் என்பது போதர. முளி விறகின் என மாறுக. முடலை விறகு-முதிர்ந்த ஒழுங்கற்ற முருட்டுக் கட்டைகள். முளிதல்-உலர்தல். எரிபொத்தி தீமூட்டி.

மிக்க என் கணவன் என்றது எனக்குத் தெய்வத்தினுங் காட்டிற் சிறந்தவனாகிய என் கணவன் என்றவாறு.

செய்வினைக் கேற்பவே மறுபிறப்பு வந்துறுமாகலின் வினைப்பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன் என்றாள். என்னை? இன்பமும் துன்பமும் அவனுக்கும் தனக்கும் ஒன்றாகவே வருதலின். புக்குழிப் புகுவேன் என்றது அவன் பிறப்புற்றவிடத்தே பிறந்து மீண்டும் அவனுக்கே மனைவியாவேன் என்பதுபட நின்றது. ஈண்டு

காதலர் இறப்பின் கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்தகத்து அடங்காது
இன்னுயிர் ஈவர் ஈயா ராயின்
நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்

எனப் பண்டு மாதவி வயந்த மாலைக்குக் கூறியது நிலைக்கற்பாலதாம் (ஊரலர்................42-45)

தீப்பாய்ந்த ஆதிரை ஊறின்றியமைதல்

29-34: படுத்து..............ஏங்கலும்

(இதன் பொருள்) படுத்துடன் வைத்த பாயல் பள்ளியும் உடுத்த கூறையும் ஒள் எரி உறாஅது- தீப்புகுதுவோர் கிடத்தற்கென சமவிறகடுக்கின்மேல் விரித்து அதனோடு கிடத்திய பாயலாகிய படுக்கையிடத்தினும் அதன்கட் புகந்து வைகிய ஆதிரை நல்லாள் உடுத்திருந்த கோடிப் புடைவையினுங் கூட ஒள்ளிய நெருப்புப் பற்றாமலும்; ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலின் சூடிய மாலையும் தொல் நிறம் வழாது- பூசிய சந்தனமும் கட்டிய கூந்தலிலே சூட்டப் பெற்ற மலர் மாலையும் புலர்ந்தும் கருகியும் தத்தம் நிறங் கெடாமலும்; விரைமலர்த் தாமரை ஒரு தனி இருந்த திருவின் செய்யோள் மலராகிய தனதிருக்கையின்கண் தான் ஒருத்தியே தமித்திருந்த திருமகள் போன்று குளிர்ந்து இனிதாகச் சிறிதும் ஊறின்றியிருத்தலும் என்க.

(விளக்கம்) கணவன் இறந்தமையால் தீப் புகுதும் பத்தினிப் பெண்டிர் ஈமவிறகின் மேல் படுத்தற்குப் பாய் விரித்தல் வழக்கம் என்பதும் தீப்புகு மகளிர் மலர் சூடிச் சாந்தம் நீவிப் புதுப்புடைவையுடுத்தும் ஒப்பனை செய்துகொண்டு புகுவர் என்பதும் இதனாலறியப்படும்.

பூசிய சந்தனம் புலர்ந்து நிறம் கெடாமலும் சூடிய மலர் கருகி நிறம் வாடாமலும் இருந்தன. ஈம விறகில் தீப்பற்றிச் சூழக் கொழுந்து விட்டெரிய அதன் நாப்பண் சிறிதும் ஊறின்றி அமர்ந்திருக்கும் ஆதிரை நல்லாளுக்குச் செந்தாமரை மலரின் மேல் எழுந்தருளியிருக்கும் திருமகள் உவமை. சூழ்ந்தெரியும் தீப்பிழம்புகள் செந்தாமரை மலரின் மலர்ந்த இதழ்களாகவும் பாயல் பொகுட்டாகவும் ஆதிரை திருமகளாகவும் கொண்டு இவ்வுவமையின் அழகுணர்ந்து மகிழற்பாற்று. திருவின் செய்யோள்- திருமகள் என்னுந்துணை.

ஆருயிர் நீங்காத ஆதிரையின் துயரமும் தெய்வம் தெளித்துத் தேற்றுதலும்

35-44: தீயும்....................அறைதலும்

(இதன் பொருள்) அவள் தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன் யாது செய்வேன் என்று ஏங்கலும்- தீயினாலே சிறிதும் துன்புறுத்தப்படாமல் உயிரோடிருந்த அந்த ஆதிரை நல்லாள் தீயாகிய தெய்வம் தீண்டவும் ஒருப்படாத மாபெருந்தீவினை செய்துளேன் போலும், அந்தோ இனி யான் எவ்வாற்றால் என்னுயிரைப் போக்கமாட்டுவேன் என்று பெரிதும் ஏங்கி அழா நிற்ப; அசரீரி அந்தரம் தோன்றி-அவளது பேதைமை காரணமாகத் தோன்றிய அவளுடைய துயர்கண்டு அருட்பிழம்பாக யாண்டும் நிறைந்திருக்கின்ற தெய்வம் வானிடத்தே ஒலியுருவில் தோன்றி; ஆதிரை கேள்- ஆதிரை நல்லாய் தீ நின்னைக் கொல்லாமைக்குக் காரணம் கூறுவல் கேள்; உன் அரும் பெறல் கணவனை ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்பப் போகி-உன் அரும் பெறல் கணவன் இறந்திலன் காண்! கடலுள் மூழ்கிய மரக்கலத்திலே ஒடி மரம் பற்றிக் கிடந்த நின் கணவனை இயங்கும் அலைகள் உந்திக்கொடு போதலாலே அவன் போய்; நக்கசாரணர் நாகர் வாழ்மலைப் பக்கம் சேர்ந்தனன்- நக்கசாரணராகிய நாகர்கள் வாழுகின்ற மலைப்பக்கத்திலே சேர்ந்துயிருய்ந் திருக்கின்றனன் காண்!; பல்யாண்டு இராஅன்-அவன் அங்குப் பல யாண்டுகள் தங்கி இருப்பானல்லன்; சந்திர தத்தன் எனுமோர் வணிகன் வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்-இன்னும் சின்னாளிலே அம் மலைப் பக்கமாகச் சந்திரதத்தன் என்னும் ஒரு வணிகனுடைய மரக்கலம் வந்தெய்தும் அந்த மரக்கலத்திலேறி நின் கணவனும் வந்து நின் கண்முன் தோன்றா நிற்பன காண்; நீ நின் பெருந் துன்பம் ஒழிவாய் என-ஆதலின் நீ எய்துகின்ற நின் பெரிய துன்பம் ஒழிந்து இனி திருப்பாயாக என்று; அறைதலும்- கூறா நிற்றலாலே என்க.

(விளக்கம்) தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன் என்றது தீத் தானும் தெய்வமாகலின் என்னைத் தீண்டுதல் தகாது என்று கைவிடத் தகுந்த மாபெருந் தீவினை செய்துள்ளேன் போலும் அதனால் என்னைத் தீண்டா தொழிந்தது என ஆதிரை கற்பித்துக் கொள்ளும் காரணம் நுண்ணியதாதலறிக. யாது செய்கேன் என்றது இனி எவ்வாற்றால் உயிர் துறப்பேன் என்று ஐயுற்றபடியாம்.

உன் கணவன் உயிருடன் இருத்தலாலும் நீ கற்பின் கனலியாதலானும் தீ உன்னைக் கொல்லா தொழிந்தது என்று குறிப்பாகக் காரணம் தெரிவித்தபடியாம்.

அசரீரி-அருவமாயிருக்கின்ற தெய்வம். அந்தரந் தோன்றி என்றது வானத்தில் ஒலியாகத் தோன்றி என்றவாறு. கணவனை இழந்த துன்பமாகலின் பெருந்துன்பம் என்று அத் தெய்வம் கூறுகின்றது.

ஆதிரை மகிழ்ந்து இல்லம் புகுதல்

45-51: மையரி....................ஆயினள்

(இதன் பொருள்) மை அரி உண்கண் அழுதுயர் நீங்கிப் பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று-அசரீரி கூறிய ஆறுதல் மொழி கேட்டலும் கறுத்துச் செவ்வரி படர்ந்த மை எழுதிய கண்ணையுடைய ஆதிரை நங்கை யாது செய்கேன் எனக் கையற்றுக் கலங்கியழுதற்குக் காரணமான துன்பம் நீங்கிக் குளிர்ந்தகுளத்தில் முழுகி ஆடி வருவாள் போன்று அத் தீக்குழியினின்றும் புறப்பட்டு; மனம் கவல்வு இன்றி- மனத்திற் சிறிதும் கவலை இன்றி; மனை அகம்புகுந்து-பெரிதும் மகிழ்ச்சியுடையளாய் இல்லம் புகுந்து; என் கண்மணி அனையான் கடிது ஈங்கு உறுக என-என் கண்ணினுட் பாவை போல்வானாகிய என் காதலன் விரைந்து எம்மில்லம் புகுவானாக என்னும் வேண்டுகோளோடே; புண்ணியம் முட்டாள்-அருள் அறத்தை முட்டுப்பாடின்றிச் செய்பவள்; பொழி மழை தரூஉம் அரும் பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும் விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள்-பொழிகின்ற மழையைத் தாம் விரும்பிய போது பெய்யென ஏவிப் பெய்விக்கும் தெய்வத்தன்மையுடைய இன்றியமையாச் சிறப்பினையுடைய பத்தினி மகளிரும் விரும்பித் தொழத் தகுந்த வியப்புடைய தெய்வக் கற்புடையளாகத் திகழ்கின்றனள் காண்; என்றாள் என்க.

(விளக்கம்) மை- கரிய. அரி- செவ்வரி; உண்கண்- மையுண்டகண் இது பன்மொழித் தொடர். ஆதிரை என்னும் பெயராந்துணை. தீயுள் மூழ்கியவள் பொய்கை புக்காடிப் போதுவாள் போன்று போந்தாள் என்க. கண்மணி யானையான் என்றது சாதுவனாகிய தன் கணவனை சாதுவன் கணிகையின் கேண்மை கொண்டு தன்னைத் துறந்து தீயொழுக்கி னின்றவனாக இருந்தும் அவனை இவள் கண்மணி யனையான் என்று பாராட்டுதல் அவள் தெய்வக் கற்பிற்குச் சிறந்ததொரு சான்றாம் இக்கருத்தினை

சேக்கை இனியார்பாற் செல்வான் மனையாளால்
காக்கை கவிந்தொழுகல் கூடுமோ கூடா
தகவுடைய மங்கையர் சான்றாண்மை சான்றார்
இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார்

எனவரும் பரிபாடலினும் காண்க. (20-86-89)

காயசண்டிகை முன்பு கூறிய சாதுவன் வரலாற்றில் எஞ்சிய துரைத்தல்

52-59: ஆங்க....................எழுப்பலும்

(இதன் பொருள்) ஆங்கு அவள் கணவனும் அலைநீர் அடைகரை ஓங்கு உயர் பிறங்கல் ஒரு மரநீழல்- மணிமேகலை நங்காய் யான் முன்பு நாகர் வாழ்மலைப் பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆயினன் என்று அறிவித்த அவ்வாதிரை கணவனாகிய சாதுவன் செய்திகேள் அவன் எய்தி அலை எறிகின்ற கடலினது நீர் அடைகரையில் மிகவும் உயர்ந்துள்ளதொரு மலையின் மேல் ஏறி அவ்விடத்தே ஒரு மரத்தின் நீழலிலே இருந்தவன்; மஞ்சு உடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து துஞ்சு துயில் கொள்ள முகல்களையுடைய பெரிய கடலிலே அகப்பட்டுத் தான் அலைப்புண்ட உடற்றுன்பம் மிகப்பெற்றுத் தன்னை மறந்து துயில் கொள்ளா நிற்ப; அச் சூர் மலை வாழும் நக்கசாரணர் நயமிலர் தோன்றிப் பக்கம் சேர்ந்து-அந்த அச்சந்தருகின்ற மலையின் கண் வாழ்கின்ற நக்க சாரணராகிய மக்கட் பண்பில்லாதவர் உணவு தேடிவருபவர் அவ்விடத்துத் தாமே வந்தெய்தி ஆண்டுத் துயின்று கிடக்கின்ற சாதுவன் பக்கத்திலே வந்து கூர்ந்து நோக்கியவர்; இவன் பரிபுலம்பினன் தானே தமியன் வந்தனன் அளியன்-இங்குக் கிடக்குமிவன் பெரிதும் வருந்தியவன் என்று தோன்றுகின்றது தான் தமியனாகவே இங்கு வந்துளான் நம்மால் பெரிதும் இரங்கத் தகுந்தவன் என்று தமக்குள்ளேயே அசதியாடுபவராய்; ஊன் உடை இவ்வுடம்பு உணவு என்று எழுப்பலும்-ஊன் மிக்கிருக்கின்ற இவனுடைய இவ்வுடம்பு இப்பொழுது நமக்கு ஒரு வேளை உணவாகலாம் என்று சொல்லிக் கொண்டு அவனைத் துயிலுணர்த்தி எழுப்புமளவிலே என்க.

(விளக்கம்) அலைநீர்- கடல் பிறங்கல்- மலை. மஞ்சு- முகில் மால் கடல் உழந்த நோய்- பெரிய கடலினின்றும் ஒடிமரம் பற்றிக் கிடந்து குளிராலும் பசியாலும் எய்திய துன்பம். அது கூர்த்தலாவது- செயலறவெய்துதல். சூர்மலை- அச்சந்தருமலை. மக்களைத் தின்பவர் வாழு மலையாதலின் சூர்மலை என்றார். நயம்-ஈண்டு மக்கட்பண்பு. கண்ணோட்டம் எனினுமாம்.

கடலிடையே உடைகலப்பட்டு ஒடிமரம் பற்றி வந்து கரையேறிய வரை அவர் பண்டும் பலரைப் பார்த்தவராதலின் இவனும் அங்ஙனம் கடலில் உழந்தவன் என்று அவன் உடல்நிலை கண்டே இவன் பரிபுலம்பினன் என்றார். பரிபுலம்பினன்- பெரிதும் துன்பப்பட்டவன் பலர் வந்திருந்தால் நமக்கு இரை பெரிதும் கிட்டியிருக்கும். ஆனால் இவனோ தனியனாக வந்திருக்கின்றான் என்பார் தாமே தமியன் வந்தான் என்று பரிந்துரைக்கின்றனர். இவனைத் தின்றுவிட்டால் இவன் துயரம் துவரப்போம் ஆதலின் இவனும் நம்மால் இரங்கித் தகுந்தவனே ஆகின்றான் என்று அசதியாடியபடியாம். பரிபுலம்பினனேனும் உடம்பில் தசை மிகுதியாகவே உளது என்பார் ஊனுடைய உடம்பு என்றார். உணவு என்றது நமக்கிது ஒரு பொழுதைக்குப் போதிய உணவேயாம் என்பதுபட நின்றது.

சாதுவன் நாகர் தலைவனைக் காண்டல்

60-71: மற்றவர்.................குளிர்ந்தபின்

(இதன் பொருள்) மற்று அவர் பாடை மயக்கு அறு மரபில் கற்றனன் ஆதலின்- மணிமேகலாய்! நாகராலே எழுப்பப்பட்ட அச் சாதுவன்றானும் அந்த நாகர் மொழியைச் சிறிதும் மயக்கம் இல்லாத முறையிலே நன்கு கற்றிருந்தபடியாலே, தமது மொழியாலே தன்னை உரப்பி எழுப்பிய அந்த நாகரோடு அவரும் வியப்புறும் வண்ணமும் தன்பாலன்புறும்படியும் கேள்விக்கினி தாம்படி அந் நாகர் மொழியாலே அவருடன் சொல்லாடுமாற்றால் அவரைத் தன் வயப்படுத்திவிட்டமையாலே; சுற்றும் நீங்கித் தொழுது உரையாடியாங்கு- அவனைச் சூழ்ந்து மிகவும் அணுக்கராய் நின்ற அந் நாகர் மருட்சியுற்றுப் பெரிதும் விலகி நின்று கைகூப்பித் தொழுது வணக்கத்துடன் பேசிய பின்னர்; அவர் உரைப்போர்-அந் நக்க சாரணர் சாதுவனுக்குத் தமது வேண்டுகோளைக் கூறுபவர்; அருந்திறல் கேளாய் ஈங்கு எம் குருமகன் இருந்தோன் அவன்பால் நீ போந்தருள் என பெறுதற்கரிய பேராற்றலுடையோய் நின்னோடு சொல்லாடும் திறம் எமக்கில்லை இம் மலையிடத்தே எங்கள் குருமகன் இருக்கின்றனன், அவன்பால் நீ எழுந்தருளல் வேண்டும் என்று அழையா நிற்றலாலே; அவருடன் போகி-அவரோடு சென்று; கள் அடு குழிசியும் கழி முடை நாற்றமும் வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில்-கள் சமைக்கும் பானையும் மிக்க ஊன் நாற்றமும் வெள்ளிய என்போடு கூடிய ஊன் வற்றலும் விரவியுள்ளதோர் இருக்கையின்கண்; எண்கு தன் பிணவோடு இருந்தது போலப் பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கி ஏற்றைக் கரடியொன்று தன் காதற்றுணையாகிய பெண்கரடியோடு கூடியிருந்தாற் போன்று தன் காதற் பெண்டாட்டியோடு வீற்றிருந்த தன்மையைப் பார்த்து; பாடையின் பிணித்து அவன் பான்மையன் ஆகி-அவனையும் தன்னுடைய மொழியினிமையாலே தன் வயப்படுத்திக்கொண்டு அவன் பக்கத்து அவனாலே விரும்பப்படும் தன்மையையுடையவனாகி; கோடுயர் மரநிழல் குளிர்ந்தபின்-அவனிருந்த கிளைகயோடுயர்ந்துள்ளதொரு பெரிய மரத்தின் நீழலிலே அவனால் நன்கு மதிக்கப்பட்டுக் கொல்வர் என்னும் அச்சந் தீர்ந் துளங் குளிர்ந்திருந்த பின்னர் என்க.

(விளக்கம்) மற்றவர் பாடை-அந்த நாகர் தாய்மொழியாகிய நாகமொழி. நாகருள் நாகரிக மிக்கவரும் உளர் என்பது கீழ்நில மருங்கின் நாக நாடாளும் இருவர் மன்னவர் என முற் கூறப்பட்டமையால் அறியப்படும் ஈண்டுக் கூறப்படுகின்ற நாகர் அவரினத்தவராய் அவர் பேசுகின்ற நாக மொழியே பேசுகின்ற நாகரிகமில்லாத நாகர்கள் மேலும், ஆடையுடுத்தாது திரியுமளவிற்குத் தாழ்ந்த காட்டகத்தே வாழும் மாக்கள். மக்களைக் கொன்று தின்பவரும் ஆவார். ஆகவே இவரைப் பிரித்துக் காட்டவே புலவர் பெருமான் இவரை நக்க சாரணர் நாகர் என அடைபுணர்த்து ஓதுகின்றனர். ஈண்டுச் சாதுவன் கற்ற மொழி நாகரிகமுடைய நாகர் பேசும் மொழியாகும். ஆகவே தாம் பேசும் மொழியே பேசுகின்ற சாதுவனுடைய மொழியைக் கேட்டலும் நக்கசாரணர் நாகர் இவன் தம்மினத்து மேன்மகன் என்று கருதி அச்சத்தாலே அணுக்கராய் நின்றவர் சற்று நீங்கித் தூரத்தே நின்று தொழுது உரையாடுகின்றனர் என்றுணர்தல் வேண்டும். இவன்பால் இவர் பெரிதும் அச்சமெய்தியதனை இவர் அவனை அருந்திறல் என்று விளிப்பதனாலும் அறியலாம். மேன் மகனாகலின் தமக்குள் மேன்மகனாய் விளங்கும் தங் குருமகன்பால் அழைத்தேகக் கருதி ஈங்கு எங் குருமகன் இருந்தோன் அவன்பால் போந்தருள் என்று வேண்டுகின்றனர்.

கல்லாத மாக்கட்குக் கற்றறிந்தவர்பால் மருட்கையும் அச்சமும் தோன்றுதல் இயல்பு.

குருமகன் இருந்தோன் என்புழி ஆகாரம் ஓகாரமாயிற்றுச் செய்யுளாதலின்.

குழிசி- பானை. முடை-ஊன். என்புணங்கல்-என்போடு கூடிய ஊன்வற்றல். எண்கு- கரடி. பிணவு, ஈண்டுக் கரடியின் பெண்ணுக்கு வந்தமையை,

பன்றி புல்வாய் நாயென மூன்றும்
ஒன்றிய என்ப பிணவென் பெயர்க்கொடை

என்னும் தொல்காப்பியமரபியற் சூத்திரத்தின்கண்(60) ஒன்றிய என்ற இலேசானே அமைத்துக் கொள்க. இங்ஙனமே பரிபாடலினும் வேழப்பிணவு (10-15) என இப் பெயர் யானைக்கும் வருவதூஉ முணர்க.

பெண்டு- பெண்டாட்டி; மனைவி மனையறமில்லாமை பற்றி மனைவி என்னாது பெண்டு என்ற நுண்மை நோக்குக.

குளிர்ந்த பின் என்றது, கொன்று தின்பர் என்னும் அச்சந்தீர்ந்து உள்ளம் குளிர்ந்த பின் என்றபடியாம்.

நக்கசாரணர் நாகர் குருமகன் செயல்

71-79: அவன்.....................என்றலும்

(இதன் பொருள்) அவன் நீ ஈங்கு வந்த காரணம் என் என சாதுவனுடைய மொழியினிமையால் பிணிப்புண்ட அந் நாகர் தலைமகன் சாதுவனை நோக்கி ஐய எமது மலைக்கு நீ வருதற்கியன்ற  காரணம் யாது? என்று வினவா நிற்ப; ஆங்கு அவற்கு அலை கடல் உற்றதை உரைத்தலும்- அங்ஙனம் வினவிய அந் நாகர் தலைவனுக்குச் சாதுவன் தான் அலைமிக்க கடலில் எய்திய துன்ப நிகழ்ச்சியை எடுத்துக் கூறவே அது கேட்ட அத் தலைவன்; அருந்துதல் இன்றி அலைகடல் உழந்தோன் வருந்தினன் அளியன்-உணவுமின்றிப் பெரிதும் அலைக்கின்ற கடலிலே இவன் துன்புற்று வருந்தினன் நம்மால் இரக்கப்படத் தக்கவன் என்று சாதுவன் திறத்திலே பரிவு கூர்ந்து தன் பணி மாக்களை நோக்கி; மாக்காள் வம்மின் நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து வெம்களும் ஊனும் வேண்டுவ கொடும் என- ஏவலர்களே விரைந்து வாருங்கள் இப்பொழுதே ஆடவருட் சிறந்திருக்கின்ற இந்த நம்பிக்குப் பொருத்தமாக இளமையுடையளாய் நம் மகளிரிற் சிறந்த நங்கை யொருத்தியையும் கொடுத்து அவ்விருவர்க்கும் வெவ்விய கள்ளும் ஊனுமாகிய உணவுகளையும் வேண்டும் பிற பொருள்களையும் கொடுங்கோள் என்று கட்டளையிடா நிற்ப; அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து-அத் தலைவன் கூற்றைக் கேட்ட சாதுவன் பெரிதும் வருந்தி; வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும்- நீ அன்பு மிகுதியாலே கூறினையேனும் யான் கேட்கலாகாத தீய மொழிகளைக் கேட்கலாயினேன் நின்னால் கூறப்பட்ட பொருள்களை யான் விரும்புகிலேன் காண்! பொறுத்தருள்க! என்று மறுத்துக் கூறலும் என்க.

(விளக்கம்) அவன்- நாகர் தலைவன். ஈங்கு நீ வந்த காரணம் என்? என்றது மேன் மகனாகிய நீ கீழோர் ஆகிய யாங்கள் உறையுமிடத்திற்கு வர நேர்ந்த காரணம் என்னை? என்று வினவியபடியாம்.

அவற்கு-அந் நாகர் தலைவனுக்கு.  நம்பி என்றான் இவன் ஆண் மக்களுள் தலை சிறந்தவன் என்னும் கருத்தால். இவனுக்கேற்ற இளமகள் ஒருத்தியை ஆராய்ந்து கொடுமின் என்பான் இளையளோர் நங்கையைக் கொடுத்து என்றான்.

அயர்ந்து-வருந்தி. அவன் கட்டளையை மறுத்துழி அவன் தீங்கு செய்யவும் கூடும் என்று கருதி அயர்ந்து என்பது கருத்து.

களும்- கள்ளும்: விகாரம். வேண்டுவ பிறவும்-இவன் விரும்பும் பிறவும். அவை இருப்பிடம் கலம் படுக்கை முதலியன. வெவ்வுரை தீய மொழி. அப் பொருள்களை யான் வேண்டேன் என்றவாறு.

நாகர் தலைவன் வியப்பும் வினாக்களும்

80-83: பெண்டிரும்..............சொல்லென

(இதன் பொருள்) தூண்டிய சினத்தினன்- சாதுவன் தன் கட்டளையை மறுத்த மாற்றத்தாலே தூண்டப்பட்டெழுந்த வெகுளியை யுடையவனாகிய அந் நாகர் குருமகன்; ஞாலத்து பெண்டிரும் உண்டியும் இன்று எனின் மாக்கட்கு உறுபயன் உண்டோ-விருந்தினனே! எற்றிற்கு என் நன்கொடைகளை நீ மறுக்கின்றனை இந் நிலவுலகத்திலே மகளிரும் உணவும் இல்லை எனின் இதன்கண் வாழும் மாந்தருக்கு எய்தும் இன்பம் பிறிது ஏதேனும் உண்டோ? யாமறிகின்றிலேம்; உண்டு எனின் சொல் யாங்களும் காண்குவம் காட்டுவாயாக என- நீ உண்டு என்று கூறுவாயாயின் கூறுதி யாங்களும் அறிந்து கொள்வேங் காண் அவற்றை எமக்குங் காட்டுவாயாக என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) பெண்டிருமுண்டியு மின்றெனின் மாக்கட்கு உண்டோ ஞாலத்து உறுபயன் என நிகழுமிதனோடு

பெண்டிரும் உண்டியும் இன்பமென் றுலகில்
கொண்டோர்               (14:39-40)

எனவரும் சிலப்பதிகாரம் ஒப்பு நோக்கற்பாலதாம்.

சாதுவனுக்கு நலஞ் செய்யும் கருத்தோடு கூறியவற்றை மறுத்துரைத்தலும் அம் மறுப்பு அவன் சினத்தைத் தூண்டுதலியல்பே யாதலறிக. உண்டெனின் யாங்களும் காண்குவம் என்றது இகழ்ச்சி இன்றெனின்-இல்லையாயின்.

சாதுவன் அறங்கூறல்

83-91: சொல்லும்....................ஆகென

(இதன் பொருள்)  சொல்லும்-அது கேட்ட சாதுவன் கூறுவான்; கயக்கறு மாக்கள்- கலங்குதலில்லாத அறிவுடைய சான்றோர்; மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கடிந்தனர்- அறிவினை மயக்கு மியல்புடைய கள்ளுண்ணுதலையும் உடம்பிலே நிலைபெற்ற உயிர்களைக் கொல்லுதலையும் தீவினை என்று கருதி விலக்கிவிட்டனர்; கேளாய்- அதற்குக் காரணம் கூறுவல் கேட்பாயாக!; பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின் தலைவனே இவ்வுலகிலே பிறந்தவர் இறந்து போதலும் இறந்து போனவர் மீண்டும் பிறப்பெய்துதலும் விழித்திருப்பவர் உறங்குவதும் உறங்கியவர் மீண்டும் விழிப்புறுதலும் போன்றதாம் என்னும் மெய்க்காட்சி வாய்மையே ஆதலின்; நல்அறம் செய்வோர் நல் உலகு அடைதலும் அல் அறம் செய்வோர் அருநரகு அடைதலும் உண்டு என உணர்தலின்-மேலும் பிறந்து வாழ்வோருள் வைத்து நன்மை பயக்கும் நல்வினையைச் செய்தவர் இறந்த பின்னர் நன்மையுடைய மேனிலையுலகங்களிலே சென்று இன்புற்றிருத்தலும் அல்லாத தீவினையைச் செய்தவர் இறந்த பின்னர்ப் பொறுத்தற்கரிய துன்பமுடைய நரக லோகத்திலே சென்று துன்பத்திலழுந்துதலும் உண்டு என்று திறவோர் காட்சியினால் தெளிந்திருத்தலாலே; உரவோர் களைந்தனர் கண்டனை ஆகு என-அறிஞர் அவற்றை நீக்கினர் என்று அறிவாயாக! என்று கூறா நிற்ப என்க.

(விளக்கம்) சொல்லும்- சொல்வான். கள் தன்னையும் மறப்பிக்கும் பெரியதொரு மயக்கஞ் செய்வதாகலின் மயக்குங் கள்ளும் என அதன் தீமையையும் விதந்தோதினன். ஈண்டு,

கையறி யாமை யுடைத்தே பொருள் கொடுத்து
மெய்யறி யாமை கொளல்       (குறள்-925)

எனவரும் திருவள்ளுவர் திருவாக்கும்,

ஏயின விதுவலான்மற் றேழைமைப் பால தென்னோ
தாயிவள் மனைவி யென்னும் தெளிவன்றேல் தரும மென்னாம்
தீவினை யைந்தின் ஒன்றாம் அன்றியும் திருக்கு நீங்கா
மாயையின் மயங்கு கின்றாம் மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம்

எனவரும் கம்பநாடர் திருவாக்கும் நினையற்பாலன

மன்னுயிர்-உடம்பில் நிலைபெற்ற வுயிர். கோறல்-கொல்லுதல் இனி நக்கசாரணர் நாகர்தலைவன் ஆகலின் அவனுடைய தகுதி நோக்கி ஈண்டு அறங் கூறும் சாதுவன் இல்லறத்தோர்க் கோதிய பஞ்சசீலம் என்னும் ஐவகை அறமும் கூறாமல் கள்ளுண்ணாமையும் கொல்லாமையும் ஆகிய இரண்டறங்களே கூறியொழிந்தான்; இவ்விரண்டுமே தலைசிறந்தனவாம் இவற்றையே கூறினன். ஏனைய பொய்யாமையும் காமமின்மையும் கள்ளாமையும் ஆகிய மூன்றும் அவர்க்கு ஆற்றலாகாவறங்கள் ஆதலின் என்க. என்னை? அவர் இன்னும் இல்லறமே தலைப்படாத காடுறை வாழ்வினர் ஆதலின் இவை அவர்க்கு விளங்காமையின் பயனில கூறலாய் முடியுமாதலான்.

ஈண்டு பிறந்தவர்.............விழித்தலும் எனவரும் இவ்வடிகள் உறங்குவது போலும் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு எனவரும் (339 திருக்குறட் கருத்தை இவர் பொன்போற் போற்றி வைத்தமை யுணர்க.

கயக்கு-கலக்கம். மேலே கயக்கறு மாக்கள் இவற்றைக் கடிந்தமைக்குக் காரணம் கூறுபவனும், நல்லறம் செய்வோர் நல்லுல கடைதலும் அல்லறஞ் செய்வோர் அருநரகு அடைதலும் உண்டு என்று அச்சுறுத்தினன் என்னை? அச்சமே கீழ்களது ஆசாரம் என்பதுபற்றி நீயிர் இவற்றைச் செய்வீராயின் அருநரகடைந்து அளவிலாத் துயரத்துக் காளாவீர் என்று, அச்சுறுத்தல் வேண்டிற் றென்க. உரவோர் அறிஞர்.

கண்டனை ஆக என்றது இதனை நன்குணர்ந்து கொள்ளுதி என்று வற்புறுத்தியபடியாம்.

நாகர் குருமகன் நகைத்து வினவுதல்

91-95: கடுநகை.....................உரையென

(இதன் பொருள்) கடுநகை எய்தி-அதுகேட்ட அந் நாகர் குருமகன் இவன் நமது நன்கொடையை இகழ்ந்ததூஉமன்றி அச் செயலுக்குத் தகுந்த காரணமும் கூறாமல் வாய்தந்தன கூறுகின்றான் என்று கருதி அவன் மடமை கருதிச் சினத்தோடு விலாவிற்ச் சிரித்து வினவுபவன்! புதுவோய்!; ஈங்கு உடம்பு விட்டு ஓடும் உயிர் உருக்கொண்டு ஓர் இடம் புகும் என்று எமக்கு உரைத்தாய்-இவ்வுலகத்திலே உடம்பைப் போகட்கு ஓடுகின்ற உயிரானது மீண்டும் உடம்பெடுத்துக் கொண்டு நல்லுலகமும் நரகருலகமும் ஆகிய இரண்டிடங்களுள் வைத்து ஓருலகத்திலே புகுதும் என்று கூறினையன்றோ? வறுங்காற்றேயாகிய உயிர் காற்றோடு கலந்தொழிதலன்றி; அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும்-இறந்தொழிந்த அவ்வுயிர் எவ்வாறு சென்று மற்றோருடம்பிலே புகமுடியும்? அவ்வகை செவ்வனம் உரையென-அது புகுதும் வகையை எமக்கு விளக்கமாகக் கூறிக்காண் என்று சொல்லிப் பின்னும் வெகுளா நிற்ப என்க.

(விளக்கம்) உயிருண்மையறியாதோர் உயிர்ப்பையே (பிராண வாயுவை) உயிர் என்ற கருதுதல் இயல்பாகலின் அவர் கருத்திற்கேற்ப உரைவிரித்தாம். இதனை

யாதுமில்லை உயிரிவை யாம் சொலும்
பூதமே யெனப் போந்திருந் தென்னொடு
வாதஞ் செய்கின்ற பூதமவ் வாதமோ
யாதைம் பூதங்க டம்முள்ளு மஃதினி

எனவரும் நீலகேசிச் செய்யுளுள் நீலகேசி ஐம்பூதங்களுள் என்னோடு வாதம் செய்யும் பூதம் அவ்வாதமோ (பிராணவாயுவோ) எனப் பூதவாதியை வினவுமாற்றா லறிக.

மூச்சுகாற்றே இவ்வுடம்பிற்குயிர், அஃதியங்குங்காறும் இவ்வுடம்பியங்கும். இயங்காதொழியின் உடம்பியங்காது. ஆகவே உடம்பிற் புகாது ஒழிந்த மூச்சுக்காற்றுக் காற்றுடன் கலப்பதன்றி வேறோர் உடம்பிற்புகும் என்பதும் வேறோரிடத்திலே வாழும் என்பதும் அந் நாகர் தலைவனுக்குப் பெரும் பேதைமையாகத் தோன்றினமையின். அப் பேதைமை நிலைக்களனாகப் பெருநகை தோன்றுவதாயிற்று. பண்டும் சினந்து வினவியவனுக்குச் சாதுவன் கூற்றுத் தகுந்த காரணமாகப் படாமையிற் பின்னும் சினந்தே வினவினான் என்பது மேலே சாதுவன் சினவாது இதுகேள்! என்று விடை கூறப்புகுமாற்றால் அறியலாம்.

சாதுவன் உயிருண்மையும் மறுபிறப்பும் பிறவும் நாகர் குருமகனுக்கு அறிவுறுத்துதல்

95-106: சினவா..............உரைத்தலும்

(இதன் பொருள்) சினவாது இதுகேள்-தலைமகனே! வெகுளாதே கொள்! நின் வினாக்களுக்கு விடை கூறுவல் அதனைக் கூர்ந்து கேட்பாயாக!; உடல் உயிர் வாழ்வுழி உற்றதை உணரும்-உடலின் கண்ணிருந்து உயிர் வாழ்கின்ற காலத்தே அவ்வுடல் தன்கண் வந்துறுகின்ற புலன்களுள் வைத்து யாதானும் ஒன்றனைத் தன் ஐம்பொறிகளுள் வைத்து அப் புலனுக்கு இயைந்த ஒரு பொறியாலே உணர்கின்ற இயல்புடையதாம்; மற்றையவுடம்பே மன் உயிர் நீங்கிடின் தடித்து எரியூட்டினும் தான் உணராது அவ்வாறு பொறிகளாலே புலன்களை உணரும் இயல்புடைய அவ்வுடம்பு தானே பொறிகளின் வாயிலாயுணரும் பொருளாய்த் தனக்குள்ளில் நிலைபெற்றிருந்த உயிர் போய்விட்ட காலத்தே வாளாலே துணித்துத் தீயாற் சுட்டாலும் தான் ஒரு சிறிதும் உணரமாட்டாது இவ்வியல்பு நீயும் நன்கறிந்ததே யாமன்றோ; எனின் உடம்பிடைப் போனது ஒன்று உண்டு என உணர் நீ-இங்ஙனமாதலின் பண்டு இன்பதுன்பங்களை நுகர்ந்திருந்த பொருளொன்று அவ்வுடம்பினின்றும் போய் விட்டது என்று தெரிகின்றதன்றே அதுவே அவ்வுயிர் என்று நீ உணர்ந்து கொள்ளக்கடவாய்; போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்-தாம் வாழுகின்ற இல்லத்திலிருந்து புறப்பட்டுப் போனவர்க்கு அவர் புகுந்துறைவதற்கு மற்றோர் இல்லம் இருக்கும் என்பதனை யான் மட்டுமோ அறிவேன் யாவருமே நன்கறிகுவால்லரோ?; உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் கடந்து சேண் சேறல் கனவினும் காண்குவை-இனி இது நிற்க மற்றொன்று கூறுவல் கேள், நீ நின் இவ்விருப்பிடத்திலே உறங்கும்பொழுது உன் உடம்பு இவ்விடத்தினின்றும் தனியே பல காவத தூரத்திற்கப்பாலும் சென்று பல்வேறு செயல்களைச் செய்து இன்ப துன்பநுகர்ச்சிகளை எய்துமொரு விந்தையை நீ நின்னுடைய கனவிடத்தே பன்முறையும் கண்டிருப்பாயல்லையோ; ஆங்ஙனம் போகி அவ்வுயிர் செய்வினை பூண்ட யாக்கையில் புகுவது நீ தெளி-அவ்வாறே சென்று அந்த உயிரானது தான் செய்த வினைக்கிணங்க எடுத்த உடலின்கண் புகுந்து வாழ்வதாம் என்று நீ தெளிந்து கொள்ளுதி; என்று அவன் உரைத்தலும்- என்று சாதுவன் கூறியவளவிலே; என்க.

(விளக்கம்) செவ்வனம்- செவ்வையாக; விளக்கமாக. சினவாது என்றமையால் அவன் வெகுண்டமை பெற்றாம். உடல் உயிர் வாழ்வுழி உற்றதை யுணரும் என்க. உற்றதை என்றது புலனை சாதியொருமை. சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் புலன்களை உணரும் என்றவாறு. உடல் கருவிகளால் உணரும் என்பதாம். கருவி- மெய்வாய் கண் மூக்குச் செவி மனம் என்னும் ஆறுமாம். உயிர் நீங்கிடில் அவ்வுடம்பே உணராமையின் உணர்தற்கு வினை முதலாக அவ்வுடம்பிடை இருந்து போனது ஒன்றுண்டு என்று தெரிகின்றதன்றோ அதுவே உயிர் என நீ உணர் என்றறிவுறுத்தபடியாம். இங்ஙனம் புலன்களை யுணருமியல்பு உயிர்ப்பிற்கு இல்லை என்பதும் இதனால் அறிவுறுத்தினானுமாதலறிக.

ஓரிடத்திலிருந்து புறப்பட்டுப் போனவர் பிறிதோரிடத்தே சென்றுறைவர் என்பது கூறாமலே அமையும் என்பான் யாவரும் உணர்குவர் என்றான்.

இனி அவ்வுயிர் உடம்பு கிடப்பத் தான் மட்டும் புறம் போமாற்றை உணர்ததுவான் உடம்பீண்டொழியக் கடந்து சேட் சேறல் கனவினுங் காண்குவை என்றான். இதனால் கனவிற் காணப்படும் அருவுடம்பினுள் உயிர் இருத்தலைக் கூறாது கனவையே அஃதாவது அருவுடம்பையே உயிர் என்று அறிவுறுத்தானாம், என்னை? அவன் ஐயந்தீர்த்தற்கு அருவுடம்பினியல்பு கூறுதல் மிகையாய் அவனுக்குப் பிறிதும் ஐயந்தோற்றுவிக்குமாகலின் என்க.  

அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும் என்பதே அவன் வினாவாதலின் உயிர் உறக்கத்தே பருவுடம்பை நீத்து அருவுடம்பிற் சேட் சேறலைக் கனவின்கண் வைத்து அறிவுறுத்தான். உறங்கும் போது உடல் உயிர்ப்புடன் கிடத்தலின் இதனானும் உயிர்ப்பு உயிர் அன்று என்று அறிவுறுத்தானும் ஆயினன் ஆதலறிக.

இதனாற் பயன் நல்லறம் செய்வோர் நல்லுலகடைதலும் அல்லறம் செய்வோர் அருநரகடைதலும் கூடும் என்று அக் குருமகனுக்கு அறிவித்தலாம் என்க.

இதனால் அவன் நன்கொடையைத் தான் மறுத்தமைக்குச் சிறந்த காரணம் அறிவுறுத்தினமையும் அறிக.

நாகர் தலைவன் நன்றிநவின்று எமக்காம் நல்லறம் நவிலுக என்று சாதுவனைச் சரணடைதல்

104-111: எரிவிழி..................என்றலும்

(இதன் பொருள்) எரிவிழி நாகனும்- சாதுவன் கூறிய புதுமையுடைய மொழிகளைக் கேட்டவுடன் தீப்போன்று எரிகின்ற கண்களையுடைய அந் நாகர் குருமகன் பெரிதும் வியந்து பின்னும் அவனுடைய சொன்னயத்தாலே பிணிப்புண்டவனாய்ச் சாதுவனைப் பெரிதும் மதித்து; நன்று அறிசெட்டி நல் அடி வீழ்ந்து நல்லறத்தை நன்குணர்ந்த வணிகனாகிய அச் சாதுவனுடைய அழகிய அடிகளிலே வீழ்ந்து வணங்கி; கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பின் உள் உறை வாழ் உயிர் ஓம்புதல் ஆற்றேன்- பெரியோய்! நீ கூறிய அறவுரை சிறந்ததே ஆயினும், நீ அறிவுறுத்தவாறு யானும் கள்ளையும் ஊனையும் உண்ணாது கைவிடு வேன்மன்! அங்ஙனம் அவற்றைக் கைவிட்டாலோ இந்த உடம்பினுள்ளே உறைந்து வாழும் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுதல் இயலாதேனாவேன் காண்!; தமக்கு ஒழிமரபின் சாவு உறும் காறும் எமக்கு ஆம் நல் அறம் எடுத்துரை என்றலும்- உயிர்கட்கு வரையறுத்துள்ள முறைமையாலே இந்த உடம்பு சாக்காடெய்து மளவும் எம்மால் ஆற்றலாகும் நல அறங்களை மட்டும் எடுத்துக் கூறுவாயாக! என்று வேண்டா நிற்றலும் என்க.

(விளக்கம்) கள்ளையும் ஊனையுமே உண்டு பழகி விட்டமையாலே அவற்றைக் கை விட்டால் வேறுணவு கோடல் எம்மாலியல்வதன்று என்பது கருத்து. தமக்கு ஒழிமரபு என்றது மன்னுயிர்கட்கு இன்னது செய்யலாகாது என்று விலக்கப்பட்ட முறைமையை. இவற்றை அன்றி வேறு அறம் உளவேல் கூறுக அவற்றைக் கடைப்பிடிப்பல் என்பது கருத்து.

நன்றறி செட்டி  நாகர்கடைப் பிடித்தற்கியன்ற நல்லறங் கூறுதல்

112-123: நன்று.............கொள்கென

(இதன் பொருள்) நன்று சொன்னாய் நல் நெறிப் படர்குவை உன் தனக்கு ஒல்லும் அற முரைக்கேன்-அது கேட்ட சாதுவன் பெரிதும் மகிழ்ந்து தலைமகனே நீ நன்றே கூறினை இனி நீ படிப்படியாக நன்னெறியிலே சென்று சென்று உய்பவும் உய்குவை காண்! நீ விரும்பியவாறே உன்னால் கடைப்பிடித் தொழுகற் பால அறங்களும் உள அவற்றைக் கூறுவல்கேள்!; உடைகல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் அடுதொழில் ஒழிந்து ஆர் உயிர் ஓம்பி- என்னைப் போன்று கடலில்கண் தாம் ஏறிவரும் மரக்கலம் உடைந்துழி அதனினின்று ஒடி மரம் பற்றி வருகின்ற மக்கள் அரிதின் உயிர் தப்பி இங்கு வந்து உற்றங்கால் அவரைக் கொல்லும் தீத்தொழிலைக் கைவிட்டு அவருடைய அரிய உயிரைப் பாதுகாத்திடுவாயாக!; மூத்து விளி மா வொழித்து எவ்வுயிர் மாட்டும் தீத்திறம் ஒழிக என்-அப்பாலும் ஊன்தினறல் கைவிட மாட்டாயேனும், தாமே முதுமையுற்று இறந்துபடுகின்ற விலங்குகளின் ஊனை உண்பதல்லது எல்லா உயிர்களிடத்தும் அருள் உடையையாகித் தின்னுதற் பொருட்டாக அவற்றைக் கொல்லுகின்ற தீவினையைச் செய்யா தொழிவாயாக, இவ் விரண்டும் உனக்கு ஒல்லும் அறங்களே யாதலின் இவற்றையே கடைப்பிடித் தொழுகுதி என்று கூற சிறுமகன் உரைப்போன் ஈங்கு எமக்கு ஆகும் இவ்வறம் செய்கேன்-இவற்றைக் கேட்டுக் கீழ்மகனாகிய அந் நாகர் தலைவன் தன் உடம்பாட்டைக் கூறுபவன் ஐய! நீ கூறிய இவ்வற மிரண்டும் எம்மால் மேற் கொண்டொழுகத் தக்க அறமே ஆகும் ஆதலின் இவற்றைக் கடைப் பிடியாகக் கொண்டொழுகுவேன் காண்!; ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்க-அதோ அவ்விடத்தே கிடக்கின்ற உனக்கு ஆக்கமாகின்ற பெறற்கரும் பொருள்களை யெல்லாம் நீ ஏற்றுக் கொள்வாயாக என்று சொல்லிச் சாதுவனுக்குப் பொருட்குவியல் சிலவற்றைக் காட்டிக் கூறுபவன்; பண்டும் பண்டும் கலங்கவிழ் மாக்களை உண்டேம்-ஐயனேபழைய காலந் தொட்டு மரக்கலம் கவிழ்ப்பெற்று உயிருய்ந்து ஈங்கு வந்துற்ற மாந்தர்களைப் பன்முறை கொன்று தின்றேமாக; ஈங்கு இவை அவர் தம் உறுபொருள்-இதோ இவ்விடத்தே குவிந்து கிடக்கும் இப் பொருள்கள் அம் மாந்தர் கொடுவந்தமையாலே மிக்குக் கிடக்கும் பொன் முதலிய பொருள்களாம். இவையேயன்றி; விரை மரம் மெல் துகில் விழுநிதிக் குப்பையோடு- அதோ அவ்விடத்தே சந்தன மரமும் அகிலும் பிறவுமாகிய நறுமணங் கமழும் மரங்களும் மெல்லிய ஆடைகளும் இன்னோரன்ன பிறவுமாகிய இவற்றையும் பொன் முதலிய உனக்குச் சிறந்த பொருட்குவியல்களோடே இக் குவியல்களையும் நீ ஏற்றுக் கொள்வாயாக! என்று வழங்கா நிற்ப; என்க.

(விளக்கம்) நன்று சொன்னாய் என்றான் முன் போன்று கடுநகை எய்தி இவற்றையும் இகழ்ந்து கை விடாமல் எமக்கு ஆம் நல் அறம் உரை என அறத்தைக் கேட்டற்கு அவாவி வேண்டுதல் பற்றி, அவ்வாறு அற நெறியை அவாவி நிற்போர் மேலும் மேலும் அந்நெறி பற்றி ஒழுகுதலியல்பாதல் பற்றி இனி நீ உய்ந்தாய் என்று உவகை கூறுவான், நன்னெறிப் படர்குவை என்று பாராட்டினன்; இக் கருத்தோடு

பல்சான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பின் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை இரங்குவிர் மாதோ
நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமா ரதுவே

எனவரும் இனிய புறநானூற்றுப் பாடற் கருத்தும் ஒப்புக்காணத்தகும் (195)

இனி, ஒல்லும் அறநெறி உரைக்கேன்

என்னும் இது,

ஒல்லும் வகையான் அறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்         (33)

எனவரும் அருமைத் திருக்குறளையும் நினைப்பித்தலுணர்க

அடுதொழில்-கொல்லும் தொழில்

இனி ஊன் உண்ணாமல் என் உயிர் ஓம்புதல் ஆற்றேன் என்றானாகலின் அதற்குப் புறனடையாக ஒரு வழி கூறுவான், மூத்துவிளி மாக்களின் ஊனைத் தின்னுக என்றான்

இனி, ஈண்டு இச் சாதுவன் மூத்துவிளி மாவின் ஊனைத் தின்னுக என்றது செத்ததெல்லாம் மண்ணோடொத்தலினானும் ஊன்தின்னா தோம்புதல் அந் நாகர் தலைவனுக்கு ஒல்லாது என்பதானும் புறனடையாகக் கூறப்பட்டதே யன்றிப் பிறிதொன்று மில்லை. ஆதி புத்தர் அறமுரைக்குங் காலத்தே இங்ஙனமே கீழ் மக்கட்கு அறிவுறுத்தியிருத்தலும் கூடும். இதனைப் பிற்காலத்துப் பௌத்தர்கள் விதியறமே போலத் தஞ்சமய நூல்களினும் புகுத்தி விடுவார் ஆயினர் என்பதும், பிடக நூலிலேறிய இவ் விதி காரணமாக இக் காலத்தே பவுத்த சமயத் துறவோர் தாமும் விலைப்பாலில் ஊன் கொண்டு தின்கின்றனர். இங்ஙன மன்றித் தினற் பொருட்டாய் விலைப்பாலில் ஊன் கொண்டு தின்னலாம் என்று புத்தர் பெருமான் பிடக நூலிற் கூறி வைத்துள்ளார் என்பது அருட்பிழம்பாகிய அப் பெரியோர் இயல்பறியாதவர் படைத்து மொழிக் கிளவியே என்று உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

இனி ஈண்டுச் சாதுவன் ஊன் தின்றலைத் தீவினை என்பதனால் பண்டு பவுத்த சமயத்தைத் தழுவிய தண்டமிழாசான் சாத்தனாரை யுள்ளிட்ட தமிழகத்துப் பவுத்தர் எல்லாம் ஊன் உண்ணாமையை மேற் கொண்டிருந்தவரே என்பது புலனாகும். இது பற்றி யாம் நீலகேசி முன்னுரையினும் ஆராய்ச்சி செய்து வரைந்துள்ளேம். அறிய விரும்புவோர் அம் முன்னுரையைப் பயின்றறிக. ஈண்டு,

தீனற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்    (256)

எனவரும் திருக்குறளும், நினைவிற் கொள்ளற்பாலதாம்.

தீத்திறம்- கொலை செய்யும் தீவினை. பொன்னும் மணியும் விரை மரமும் பிறவுமாகிய அரும்பொருள் எல்லாம் நக்க சாரணர் ஆகிய தமக்குப் பயன் படாமையின் உனக்கு ஆகும் அரும்பொருள் என்றான்.

பண்டும் பண்டும் என்னும் அடுக்குப் பன்மை பற்றி வந்தது. விரை மரம்-நறுமணப் பொருளாகிய சந்தனம் முதலியவை. விழுநிதிக்குவை என்றது பொன்மணி முதலியவற்றாலியன்ற அணிகலன்களை. அவை உடைகலப்பட்டு உய்ந்து வந்தோர் அணிந்திருந்தவை என்க.

காயசண்டிகை மணிமேகலையை ஆதிரை கையாற் பிச்சை பெறுக எனல்

123-129: எடுத்தனன்..................பெறுகென

(இதன் பொருள்) சந்திர தத்தன் என்னும் வணிகன் வங்கம் சேர்ந்தது- சாதுவன் அத் தீவினருகே சந்திர தத்தன் என்னும் வணிகன் மரக்கலம் வந்து சேர்ந்ததனைக் கண்டு; எடுத்துக் கொணர்ந்தனன் வந்து அதில் உடன் ஏறி இந்நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து- நாகர் தலைவன் கொள்கெனக் கொடுத்த சிறந்த பொருள்களில் வேண்டுமவற்றைக் கைக்கொண்டு அவற்றைப் பொதிகளாக்கி எடுத்துக் கொண்டு வந்து அம் மரக்கலத்தி லேறிக் கடல் கடந்து வந்து இப் பூம்புகார் நகரத்தை அடைந்து தன் கற்புடைய மனைவியோடு கூடி இனிது வாழ்க்கை நடத்தி; தன் மனை நன்பல தானமும் செய்தனன் தன்னில்லத்தே நன்மை தருகின்ற பல தானங்களையும் செய்து சிறந்தனன் காண்!; பூங்கொடி நல்லாய் ஆங்ஙனம் ஆகிய ஆதிரை கையால் பிச்சை பெறுக என- மகளிருள் சிறந்த மணிமேகலை நங்காய்! இவ்வாறு பத்தினிப் பெண்டிருள்ளும் தலை சிறந்து விளங்கா நின்ற அவ்வாதிரை நல்லாளுடைய பெருந்தகைமையுடைய கையாலே இடப்படுகின்ற ஆருயிர் மருந்தாகிய பிச்சையினை நீ முதன் முதலாக ஏற்றருளுக என்று அறிவியா நிற்ப என்க.

(விளக்கம்) வங்கம் சேர்ந்ததில் என்றது சேர்ந்த வங்கத்தில் என்றவாறு இனி வங்கம் சேர்ந்தது அதில் என்னும் மொழிகளில் நிலை மொழியீற்றினின்ற குற்றியலுகரமும் அஃதேறிய வல்லொற்றும் ஈற்றபலுயிரும் விகார வகையாற் கெட்டனவாகக் கொண்டு சேர்ந்தது+ அதில் எனக் கண்ணழித்து வினை முற்றும் சுட்டுப் பெயருமாக அறுத்துப் பொருள் கூறலுமாம்.

இந்நகர்-புகார்நகர். இவள்: ஆதிரை. ஆங்கனமாகிய என்றது அவ்வாறு பத்தினிகளுள் தலை சிறந்த பத்தினியாகத் திகழ்கின்ற என்பது பட நின்றது.

பூங்கொடி நல்லாய் என்றது மணிமேகலையை விளித்தபடியாம்

மணிமேகலை ஆதிரைநல்லாள்பாற் பிச்சை ஏற்றல்

130-135: மனையகம்..............மருந்தென்

(இதன் பொருள்) மணிமேகலை தான் மனையகம் புகுந்து புனையா ஓவியம் போல நிற்றலும்-அது கேட்ட மணிமேகலை தானும் அவளறிவுரையை ஏற்றுக் கொண்டவளாய் அவ்வாதிரை நல்லாள் மங்கல மனையின் முன்றிலிலே சென்று அமுத சுரபியைச் செங்கையில் ஏந்தி வண்ணங்களைக் கொண்டு எழுதப் படாத ஓவியம் போன்று வாய் வாளாது நிற்ப; ஆதிரை-அவள் வருகை கண்ட ஆதிரை நல்லாள் தானும்; தொழுது வலம் கொண்டு பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என துயர் அறு கிளவியோடு- நிலவுலகத்தே வாழுகின்ற உயிர்களின் பசி நோய் ஒழிவதாக! என்று சொல்லி வாழ்த்தும் உயிர்களின் துயர் கெடுதற்குக் காரணமான வாழ்த்துரையோடு; அமுத சுரபியின் அகன்சுரை நிறைதர ஆருயிர் மருந்து இட்டனன்-அமுத சுரபி என்னும் அரும் பெறற்பாத்திரத்தினது அகன்ற உள்ளிடம் நிறையும்படி உணவாகிய ஆருயிர் மருந்தைப் பெய்தருளினள் என்பதாம்.

(விளக்கம்) மனையகம் என்றது முன்றிலை. புனையா ஓவியம்- வடிவ மட்டும் வரைந்து வண்ணம் தீட்டப்பெறாத நிலையில் உள்ள வோவியம். இவ்வுவமை மணிமேகலையின் மாண்புடைய இயற்கை யழகை ஆடையணி கலன்களாலே ஒப்பனை செய்யப்படாமை பற்றிக் கூறப்பட்டதாம் இங்ஙனமே ஒப்பனை  செய்யப்படாது இயற்கை யழகோடு மட்டு மிருந்த கோப்பெருந்தேவியாகிய தலைவியை ஆசிரியர் நக்கீரனார் தாமும் அம்மா சூர்ந்த அவிர் நூற் கலிங்கமொடு புனையா வோவியம் கடுப்ப என்றோதுவர் (நெடுநல்வாடை- 146-7) இன்னும் தண்டமிழா சான் சாத்தனார் இவ்வினிய வுவமையை, புனையா வோவியம் புறம் போந்தென்ன மனையகம் நீங்கி வாணுதல் விசாகை உலக அறவியின் ஊடு சென்றேறி எனப் பிறாண்டும் (22-88) ஓதி இன்புறுத்துவர் கவிச்சக்கரவர்த்தி யாகிய கம்பநாடர் தாமும் இப் புனையா வோவியத்தைப் புகையூட்டிச் சீதைக்குவமை கூறுவர்.

தேவுகெண்கடல் அமிழ்து கொண்டு அநங்கவேள் செய்த ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள் என்பது அத் தெய்வப் புலவர் திருவாக்கு (இராமா- காட்சிப்-11)

புனையா வோவியம் போல வாய்வாளாது நிற்றலும் என்க. துறவோர் பிச்சை ஏற்புழி ஒரு பசுக்கறக்கும் அளவுடைய பொழுது முன்றிலிலே வாய்வாளாது நின்று பொறுமையோடு ஏற்றல் வேண்டும்; அவ் வளவில் பிச்சை இட்டால் ஏற்றல் வேண்டும்; இடராயின், அயன் மனை முன்றிலிற் சென்று ஏற்றல் வேண்டும் என்பது துறவோர் திறத்தியன்ற தொரு விதியாம் என்ப.

பாரக மடங்கலும் பசிப்பிணி அறுகென வாழ்த்தும் துயரறு கிளவியோடு இட்டனள் என்க. துயர்அறு கிளவி- துயர் அறுதற்குக் காரணமான வாழ்த்துச் சொல்.

இனி, இக் காதையை- விஞ்சையர் பூங்கொடி ஈங்கு இவள் செய்திகேள்! என உரைப்போள் ஆதிரை கணவன் ஆகிப்போகி வழங்கி வங்கம் போகும் வணிகர் தம்முடன் செல்வுழி, முந்நீர் கலன் வெளவப் பற்றி மலைப்பக்கம் சார்ந்து அவர் பான்மையன் ஆகினன். போந்தோர் சாதுவன் சாவுற்றான் என, ஆதிரை அது கேட்டு எரிபொத்திப் புகுதலும்

எரி உறாஅது இனிதிருப்ப. தீவினை யாட்டியேன் யாது செய்கேன் என்றவள் ஏங்கலும், அசரீரி ஆதிரை கேள் உன் கணவனைக் கொண்டுய்ப்பப் போகி சேர்ந்தனன். இராஅன் வந்தனன் தோன்றும் ஒழிவாய் என மனையகம் புகுந்து முட்டாள் வியப்பினள் ஆயினள். கணவனும் துயில்கொள்ள எழுப்பலும் எழுந்தருள் எனப்போகி நோக்கி உரைத்தலும் கொடுமென வேண்டேன் என்றலும் கொள்கென ஏறி வாழ்ந்து செய்தனன் ஆதிரை கையால் பெறுகென காயசண்டிகை கூற நிற்றலும் ஆதிரை ஆருயிர் மருந்து இட்டனள் என இயைத்திடுக.

ஆதிரை பிச்சையிட்ட காதை முற்றிற்று.

 
மேலும் மணிமேகலை »
temple news
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் ... மேலும்
 

1. விழாவறை காதை நவம்பர் 11,2011

முதலாவது விழாவறைந்த பாட்டு அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ... மேலும்
 
இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் ... மேலும்
 
மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது ... மேலும்
 
நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar