லிங்கம் என்பதற்கு ‘குறி’ என்பது பொருள். குறி என்றால் அடையாளம். காணமுடியாத இறைவனைக் காணுவதற்கு அடையாளமே சிவலிங்கமாகும். லிங்கம் என்பதை லிம் + கம் எனப் பிரிக்கலாம். ‘லிம்’ என்பதற்கு உலக வடிவில் எல்லா சராசரங்களும் லயிப்பதற்குரிய இடம் என்பது பொருள். ‘கம்’ என்பதற்கு அவ்வாறு லயித்த பொருள்கள் அனைத்தும் அதிலிருந்தே வெளிப்படும் என்பது கருத்து. ஆகவே, லிங்கம் என்பதற்கு எல்லாம் ஒடுங்கி மீண்டும் வெளிப்படுவதற்குரிய இடம் என்பது பொருள். லிங்கத்தின் அடிப்பாகம் நற்கோணமாயிருக்கும். அது பிரம்ம பாகமாகும். நடுப்பாகம் எட்டுக்கோணமாயிருக்கும். அது ஆவுடை என்ற பீடத்தினுள் அமைந்திருக்கும். இது விஷ்ணு பாகமாகும். இதற்குமேல் காணப்படும் பாணம் நீண்ட வட்டவடிவமாய் இருக்கும். இதனை உருத்திரபாகம் என்பர். பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்னும் மும்மூர்த்திகளின் உள்ளடக்கமே சிவலிங்கமாகும்.