சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை நிறைவு: பக்தர்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2018 11:08
சபரிமலை: சபரிமலையில் தந்திரி இல்லாமல் நிறைபுத்தரிசி பூஜை நிறைவு பெற்றது. இன்று மாலை ஆவணி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரை பக்தர்கள் வரவேண்டாம் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. நிறைபுத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5.00 மணிக்கு திறந்தது. பம்பையாற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் பக்தர்கள் சபரிமலை வர தடை விதிக்கப்பட்டது.
பூஜை நடத்துவற்காக தந்திரி மற்றும் ஏழு பேர் குழு போலீஸ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்புடன் புல்மேடு வழியாக சென்றனர். ஆனால் காலநிலை மோசமாக இருந்ததால் அவர்களால் உப்புப்பாறையில் இருந்து சன்னிதானம் வரமுடியவில்லை. இதனால் தந்திரி இல்லாமல், சபரிமலையிலேயே தங்கியிருக்கும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நேற்று நிறைபுத்தரிசி பூஜைகளை நடத்தினார். இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை மீண்டும் திறக்கிறது. ஆனால் பம்பையாற்றில் தண்ணீர் தொடர்ந்து அதிகரிப்பதால் மறு அறிவிப்பு வரும் வரை பக்தர்கள் சபரிமலைக்கு வர வேண்டாம் என்றும், மீறி வருவோர் நிலக்கல்லில் இருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
கொச்சு பம்பை, மூளியாறு அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பம்பை கணபதி கோயில் வரை உள்ள மணி மண்டபம், ஒட்டல்கள், ஓய்விடம் போன்றவை தண்ணீரில் மூழ்கியுள்ளன.சன்னிதானத்தில் தங்கியுள்ள மேல்சாந்திகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார். சபரிமலையில் மின்சாரம் மற்றும் டெலிபோன், அலைபேசி சேவை பாதிக்கப்பட்டுள்ளது.