பதிவு செய்த நாள்
21
அக்
2018
02:10
தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலில், நான்காவது முறையாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையினருடன் இணைந்து, ஆய்வு நடத்தினர்.தஞ்சாவூர் பெரிய கோவிலில், பழமையான நடராஜர் சிலை உட்பட, 10 சிலைகள் களவாடப்பட்டு, போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
முழு ஆய்வுஇதையடுத்து, கோவிலில் உள்ள, 41 ஐம்பொன் சிலைகளையும், தொல்லியல்துறை மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.கடந்த மார்ச், 1ம் தேதி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், பெரிய கோவிலில் உள்ள சிலைகளை முழுமையாக ஆய்வு செய்து சென்றனர்.அப்போது, பல சிலைகள் மாற்றப்பட்டு இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பான ஆவணங்களை தொல்லியல் துறைக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அறிக்கையாக அனுப்பினர்.அதன் பின், செப்., 29ம் தேதி, போலீஸ் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், கோவிலில் இருந்த சிலைகளை ஆய்வு செய்தனர். அப்போது, சில சிலைகளில் தமிழ் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.20 சிலைகள்மீண்டும், கடந்த, 11ம் தேதி, இந்திய தொல்லியல் துறை தெற்கு மண்டல இயக்குனர், நம்பிராஜன் தலைமையில், 15 பேரும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.எஸ்.பி., ராஜாராமன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசாரும், ஆய்வு செய்தனர்.மூன்று கட்ட ஆய்வுகள் முடிந்த நிலையில், நான்காவது முறையாக நேற்று, தொல்லியல் துறை தெற்கு மண்டல இயக்குநர் நம்பிராஜன் தலைமையில், 15 பேரும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல், டி.எஸ்.பி.,ராஜாராமன் தலைமையில், 45 பேரும், சிலைகளின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.காலை, 8:30 மணி முதல், மதியம், 2:00 மணி வரை நடந்த ஆய்வுக்கு பின், புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் இருந்த, 20 சிலைகளையும் ஆய்வு செய்தனர்.கோவிலில் உள்ள சிலைகளில் என்னென்ன உலோகம், எத்தனை சதவீதம் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய, நானோ தொழில் நுட்பத்தையும், எக்ஸ்.ஆர்.எப்., கருவியையும் கொண்டு சோதனை செய்தனர்.