பதிவு செய்த நாள்
21
அக்
2018
02:10
திருநெல்வேலி - துாத்துக்குடி நாற்கரச் சாலையில் வல்லநாடு அருகே, திருநாமக்காடு எனப்படும் நாணல்காடு என்ற சிறிய கிராமம். இங்கு, கிழக்கு திசையில், அருள்தரு சிவகாமி அம்மை உடனாய, ஸ்ரீ கண்டீஸ்வரர் சிவாலயம் அமையப் பெற்றுஉள்ளது. ஆலயத்தின் மேற்கு பகுதியில், தாமிரபரணி நதிக்கரையும், நதிக்கரையின் மேற்கு பகுதியில், ஆழிசூடி வெங்கடாசலபதி பெருமாள் கோவிலும், ஆலயத்தின் வடபகுதியில், வடகிழக்கு முகமாக, முறப்பநாடு கிராமத்தில், நவ கைலாயங்களில் வியாழனுக்குரிய கைலாயநாதர் ஆலயமும் உள்ளன.மேற்குப் பகுதியில், 2 கி.மீ., தொலைவில், முறம்பீஸ்வரர் எனும் சிவாலயமும், வரதராஜப்பெருமாள் எனும் பெருமாள் கோவிலும், நாணல்காட்டிலிருந்து, 7 கி.மீ., தொலைவில் செய்துங்கநல்லுார் செல்லும் சாலையில், விட்டிலாபுரம் எனுமிடத்தில், பாண்டுரங்கப் பெருமாள் ஆலயமும், எழுந்தேற்றம் ஆகியுள்ளன.ஸ்ரீகண்டீஸ்வரர் ஆலயத்தின் பின்புறப் பகுதியில் (மேற்கு) வட - தென் திசையாக தாமிரபரணி ஆறு திருப்பம் பெற்று அதாவது தாமிரபரணி நதி தொடங்கிப் பாய்ந்து செழிப்படையச் செய்து வரும், திருநெல்வேலியின் திருப்புடை மருதுாரில் மட்டுமே, இப்படி ஒரு தற்செயலான திருப்பம் நடைபெறுகிறது.
தெட்சிண கங்கையாக, காசிக்கு நிகரான கங்கையம்பதியாகத் திகழ்வது கண்கூடு. சிறப்பம்சம் என்னவெனில், இந்த இடத்தில் பாய்ந்தோடும் நதி தீர்த்தத்தில், அனைத்துப் புண்ணிய நதிகளின் சங்கமம் நடைபெறுவதாகிய ஜதீகம் உள்ளது.தாமிரபரணி நதி தீர்த்தம், நெல், புல், மூங்கில் மற்றும் நாணல் என, அடர்ந்த தாவரக் காடுகளுக்குப் பெயர் பெற்ற பகுதியாகும்.நாணல் எனும் தர்ப்பைப்புல், சுற்றுச் சூழலின் நண்பன். நோய்க்கிருமிகளைத் துரத்தியடிக்கின்ற இயற்கை வரம் தந்த, ஒரு கிருமி நாசினி. இத்தகைய ஆரோக்கியமான, இயற்கையான, இதமான தட்ப வெப்பச் சூழலில், ஸ்ரீ கண்டீஸ்வரப் பெருமாள் அருளாட்சி செய்து வருகிறார். ஸ்ரீ என்றால் விஷம். கழுத்தில் விஷம் தாங்கி நிற்கும் பரமேஸ்வரன், ஸ்ரீ கண்டீஸ்வரர் எனப்படுகிறார்.உலக உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, பாற்கடலைக் கடையும் போது, முதலில் உற்பத்தியான விஷத்தை சிவன் உண்டார்.பிறர் வாழ, நம்மை இழக்கச் செய்யும் தியாகத்தை, தொண்டு மனப்பான்மையை உலகுக்கு எடுத்துரைத்த, தியாகராஜனாக இங்கு வீற்றிருக்கிறார் எம்பெருமாள்.இம்மையில், நம்மைப் பிடித்திருக்கும் ஆணவ மலம் என்ற நஞ்சுத் திரை விலக்கப்பட வேண்டும். அம்மாயத்திரை விலக, மாமறையோன் அருள் கிடைக்கப் பெறும்.
இக்கோவிலில் வீற்றிருக்கும், அம்பிகை சிவகாமி அம்பாள், இவள் வலக்கையில் தாமரைச் செண்டும், இடக்கையை தொங்கவிட்ட படியுமாக கல்யாணத் திருக்கோலத்தில், பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.இவர்களை வணங்கிச் சிறப்பிப்போருக்கு திருமணத் தடை நீங்கப் பெறும்.ஈசன் தர்ப்பாரண்யம் என்னும் நாணல்காட்டில் உள்ள, நாணற்புல்லில் எழுந்தேற்றம் ஆகி திருநள்ளாற்றுக்கு இணையான, தென் திருநள்ளாற்று தர்ப்பாரண்யேஸ்வரராக காட்சியளித்தக் கொண்டிருப்பதால், இது நள்ளாற்று ஈசனுக்குரிய சாந்நித்தியத்தோடு விளங்கும் சன்னிதியாகும்.தாமிரபரணி நதியில் நீராடிவிட்டு, இங்கு வழிபாடு நடத்தினால், முன்னோரை நினைவு கூறும் நீத்தார் கடன் நிறைவேற்றியதற்குச் சமம் ஆகும்.
- நமது நிருபர் -