சரஸ்வதி, த்ருஷ்த்வதி ஆகிய இரு நதிகளுக்கு மத்தியில் குருக்ஷேத்திரம் அமைந்துள்ளது. குருக்ஷேத்திரத்தில் பறக்கும் தூசி கூட மனிதனுக்கு மோட்சத்தைத் தரவல்லது. ‘குருக்ஷேத்திரம் போய், பிரம்ம சரோவரில் மூழ்கி எழுந்தாலே அஸ்வமேத யாகம் செய்த பலனும், பாவ நிவர்த்தியும். கிடைக்கும்’ என்பர்.... இந்த பிரம்ம சரோவரில் சூரிய கிரகணம் ரொம்ப விசேஷம், கிருஷ்ணன் சூரிய கிரகணத்தன்று, ‘ஸ்நானம் செய்வதற்கும், தானம் செய்வதற்கும் வந்தார் ’ என ஸ்தல வரலாறு கூறுகிறது. ராமனும், சீதையுடனும் மற்ற சகோதரர்களுடனும் சூரிய கிரகணத்தின்போது இங்கு ஸ்நானம் செய்ததுடன்.. யானை, குதிரை, ஒட்டகம் ரதம் ஆகியவற்றை தானம் செய்ததாகக் கூறப்படுகிறது. பிரம்ம சரோவரில் சூரியகிரகண அமாவாசையன்று ஐந்து லட்சம் பேர் ஸ்நானம் செய்வர். இதே போல் தீபாவளி அமாவாசையும் ரொம்ப விசேஷம். அன்று பிரம்ம சரோவில் லட்சக் கணக்கான மக்கள் நீராடுகிறார்கள். பிறகு ஸர்வேச்வர் மகாதேவ் மந்திருக்குச் சென்று வழிபடுகின்றனர். ஒரு சிறு பாலம் வழியாக இதனை அடையலாம். தில்லிக்கு வடக்கே 172 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.