குமரகுருபரர் ஒருமுறை காசி யாத்திரை சென்ற போது, கங்கைக் கரையில் மடம் ஒன்று அமைக்க விரும்பினார். அப்போது காசியை மொகலாய மன்னர்கள் ஆண்டு வந்தனர். மன்னரின் சார்பாக நவாப் தாரா ஷிக்கோஹ என்பவர் நிர்வகித்து வந்தார். அவரை எளியவரான குமரகுருபரர் சந்தித்து, தம் விருப்பத்தை உணர்த்தி நிதி பெற எண்ணினார். அதற்காக தம் தவசக்தியால் சிங்கம் ஒன்றை வயப்படுத்தி, அதன் மீது மீதமர்ந்து நவாபைக் காணச் சென்றார். நவாப் அவரைக் கண்டு திகைத்தார்; வியந்தார். இருந்தும் மொழி அறியாததால் இருவராலும் உரையாட முடியவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் கலைவாணியை நினைத்து, சகலகலாவல்லி மாலை எனும் பாடலைப் பாடினார். தேவி மனம் குளிர்ந்து அற்புதமாய் இந்தி பேசும் ஆற்றலை குமரகுருபரருக்கு நல்கினாள். அதன்பின் நவாப்பிடம் இந்தியில் உரையாற்றிய குமரகுருபரர், மடம் கட்டுவதற்கு உரிய மானியத்தை வேண்டிப் பெற்றார். கங்கை கரையில் கேதார கட்டத்தில் இன்றும் இம்மடம் உள்ளது. கலைவாணியின் அருளுக்கு சாட்சியாக!