நாடகம் மற்றும் திரைத்துறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் தியாகி எப்.ஜி.நடேசய்யர். நடிகரான இவர் ’சேவா சதனம்’ திரைப்படத்தில் நடித்தவர். எம்.எஸ்., கே.பி. சுந்தராம்பாள், தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர். போன்ற கலைஞர்களைத் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு, திருச்சியில் தாம் நடத்திய ரசிக ரஞ்சனி சபை மூலம் ஊக்குவித்தவர். இளமைக்காலத்தில் ஆங்கிலேயரின் பராமரிப்பில் இருந்ததால், தாய்மதமான இந்து மதத்தை விட்டு கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார். இருந்தாலும் அவரது மனதில் ஆன்மிக சந்தேகங்கள் பல எழுந்தன. அதைப் போக்க விரும்பி ஒருமுறை காஞ்சிபுரத்தில் மகாசுவாமிகளை சந்திக்க வந்தார்.
விடையளித்த சுவாமிகள், யார் எந்த மதத்தில் பிறந்திருக்கிறார்களோ அதைப் பின்பற்றுவதே சரியானது என்றும், மதம் மாறுவது பெற்ற தாயாரை அனாதையாக விடுவது போலாகும் என்றும் தெரிவித்தார். இந்த உண்மையை உணர்ந்த நடேசய்யர் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பியதோடு, ”மதம் மாறுவது என்பது பாவச்செயல் என்றும், யாரும் இனியும் அத்தகைய பாவச்செயலில் ஈடுபட வேண்டாம்” என்றும் கேட்டுக் கொண்டார். திருச்சியின் மேயராக விளங்கிய நடேசய்யர் மகாசுவாமிகள் மீது அளவற்ற மதிப்பு கொண்டிருந்தார். தம் ஆதரவாளர்களுடன் இணைந்து மகாசுவாமிகளை பெருமைப்படுத்தும் விதமாக பிரம்மாண்ட ஊர்வலநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். ஏழு நாதஸ்வரக் குழுவினர், மூன்று பாண்டு வாத்தியக் குழுவினர் இசைக்க, உடன் வந்தனர். யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் ஊர்வலத்தில் இடம்பெற்றன. பஜனைக் குழுவினர்கள் பாடியபடி வந்தனர். ௧௧ கி.மீ., நீளத்திற்கு ஊர்வலம் தொடர்ந்தது. அதில் சுவாமிகளின் பல்லக்கைத் தூக்கிய அன்பர்களில் நடேசய்யரும் ஒருவர். எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் சுவாமிகளை தரிசித்தனர். வழியெங்கும் பூரண கும்ப மரியாதையுடன் மக்கள் வரவேற்றனர். மாலை 6:00 மணிக்குத் தொடங்கிய ஊர்வலம் இரவு 10:00 மணிக்கு நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சி குறித்து நடசேய்யர், ”சுவாமிகளுக்கு செய்யும் சேவையை மகேஸ்வரனுக்குச் செய்யும் சேவையாக உணர்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். - திருப்பூர் கிருஷ்ணன்