பதிவு செய்த நாள்
15
டிச
2018
01:12
வந்தவாசி: கர்நாடகாவுக்கு செல்லும், பிரமாண்ட சிலைக்காக, சாலையை அகலப்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஈஜிபுராவில் உள்ள, கோதண்டராம சுவாமி கோவிலில், ஒரே கல்லினாலான, 64 அடி உயர, 11 முகங்கள், 22 கைகள் கொண்ட மகாவிஷ்ணு வராட்ட விஸ்வரூப சிலை, பீடம், ஆதிசேஷன் சிலை, 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி உயரம் என, 108 அடி உயரத்தில், சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த, கொரகோட்டையில், சிலை வடிக்கப்பட்டது. கடந்த வாரம், 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் சிலை பெங்களுரு புறப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், பேட்டையில் சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதனால் இரண்டு நாட்களாக, தெள்ளார் பகுதியில் லாரி நின்றது. நேற்று காலை, 10:00 மணிக்கு, லாரி புறப்பட்டது. சு.காட்டேரி வழியாக, விழுப்புரம் மாவட்டம் பேட்டைக்கு சென்றது. பஜார் வீதியில் சென்றபோது, சிலை மோதியதில், மாடி வீடு, மின் கம்பம், கடைகள் சேதமடைந்தன. இதனால் லாரி நிறுத்தப்பட்டது. எவ்வளவு அகலம் தேவையோ, அந்த அளவுக்கு இயந்திரம் மூலம் சுவர்களை இடித்து, சாலையை அகலப்படுத்தி, சிலையை கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை சார்பில், இதற்கான பணி துவங்கியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு தருவதாக, சிலை எடுத்து சென்றவர்கள் உறுதியளித்தனர்.