அன்னுார்:அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த ஆண்டு தேர்த்திருவிழா நடக்கவில்லை.இரண்டு ஆண்டுக்கு பின், இந்த ஆண்டு தேர்த்திருவிழாவில் நேற்று முன்தினம் காலையில் கிராம தேவதை வழிபாடு நடந்தது. சின்னம்மன், பெரியம்மன் கோவிலில் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு கிராம சாந்தி நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு கணபதி வேள்வி துவங்கியது. வேள்வி பூஜையிலிருந்து பெறப்பட்ட புனிதநீர் கொடி கம்பத்திற்கு ஊற்றப்பட்டது. காலை 9:15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.அருந்தவச்செல்வி உடனமர் மன்னீஸ்வரர் கோவில் பிரகாரத்தில், வலம் வந்து அருள்பாலித்தார். பின்னர் தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின் ரோடு, ஓதிமலை ரோடு வழியாக சுவாமி திருவீதியுலா நடந்தது.கட்டளைதாரர்கள், திருப்பணிக்குழுவினர் திரளாக பங்கேற்றனர். 19ம் தேதி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு, சுவாமி திருவீதியுலா நடக்கிறது. வரும் 20ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.