கம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவ பொங்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2019 05:01
கம்பம்: பசுக்களை தெய்வமாக வணங்கும் ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள், நேற்று காலை நந்தகோபாலன்தம்பிரான் மாட்டுத் தொழுவத்தில் குவிந்த நிலையில், பெண்கள் பொங்கல் வைத்து பசுக்களை வணங்கினர். கம்பம் நந்தகோபாலன் கோயில், நகரின் மேற்கு திசையில் உள்ளது. இங்கு சுவாமி விக்கிரகங்கள் கிடையாது. கருவறையில் ஸ்தம்பம் ஒன்று மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி இங்கு பூஜை புனஸ்காரம் அனைத்தும் இந்த கோயிலின் பட்டத்துக் காளைக்கு மட்டுமே நடைபெறும். ஒக்கலிக சமுதாயத்தின் சார்பில் மாட்டுப் பொங்கல் அன்று இங்கு விழா கொண்டாடப்படும்.
நேற்று காலை ஒக்கலிகர் நாட்டாண்மை காந்தவன் தலைமையில், ஸ்தம்பத்திற்கு முதலில் பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் பட்டத்துக் காளைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. முழு அலங்காரத்தில் நின்றிருந்த பட்டத்துக் காளையை பார்க்க ஆயிரக்கணக்கில் பொது மக்கள் திரண்டனர். பின்னர் கோயில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடந்தது. நுாற்றுக்கணக்கில் பெண்கள் பொங்கல் வைத்தனர். பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினார்கள். குறிப்பாக இப்பகுதியில் வசிக்கும் எல்லா சமூகத்தினரும் தங்களின் வேண்டுதலுக்காக தங்களின் வீடுகளில் பசுக்கள் ஈணும் கன்றுகளை இங்கு அன்பளிப்பாக தருவது வழக்கம். நேற்று காலையும் பலர் தங்களின் கன்றுக் குட்டிகளை கோயிலிற்கு தானமாக வழங்கினர். இதில் நாட்டு மாடுகளின் கன்றுகள் மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். பிற கலப்பின பசுக்களை கோயில் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாது. தொழுவத்தில் அடைக்கப்பட்டுள்ள நுாற்றுக்கணக்கான பசு மற்றும் காளை மாடுகளை அதிகாலையில் குளிப்பாட்டி, நெற்றியில் குங்குமம் இடப்பட்டது. ஏராளமானவர்கள் கரும்பு சோகை, புல், கரும்பு போன்றவைகளை வாங்கி, அவற்றுக்கு உண்பதற்கு வழங்கினர்.