பதிவு செய்த நாள்
12
பிப்
2019
12:02
சிந்தித்து செயலாற்றி வரும் மேஷ ராசி அன்பர்களே!
சுக்கிரன் பிப்.25வரை சாதகமான நிலையில் உள்ளார் சூரியன், புதன் மாதம் முழுவதும் நற்பலன் வழங்குகின்றனர். அரசு வகையில் அனுகூலம் உண்டாகும். உங்களின் ஆற்றல் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும் சமூகத்தில் மதிப்பு உயரும். ராகு பிப்.13ல் 3-ம் இடமான மிதுன ராசிக்கு வருகிறார். செயலில் வெற்றி, பொருளாதார வளத்தை தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் விருத்தி ஏற்படும். கேது பிப்.13ல் 9ம் இடமான தனுசு ராசிக்கு செல்வதால் பொருள் இழப்பு, தோல்வி ஏற்படலாம். பயணத்தின் போது கவனம் தேவை.
இதுவரை பொருளாதாரச் சரிவு, வீண் விரோதம் ஏற்படுத்திய குருபகவான் மார்ச்13ல் அதிசாரம் பெற்று 9-ம் இடமான தனுசுவுக்கு வருவதால் இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.
உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை உருவாகும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குருவின் பார்வையாலும் நன்மை கிடைக்கும்.
குடும்பத்தில் சுக்கிரனால் மகிழ்ச்சி நீடிக்கும். குறிப்பாக மாத முற்பகுதியில் குதுாகலம் உண்டாகும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். பொன், பொருள் சேரும். சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். மார்ச் 10,11ல் சகோதரவழியில் பணம் கிடைக்கும். விருந்து, விழா எனச் செல்வீர்கள். பிப்.17,18ல் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். எனவே அப்போது விலகியிருக்கவும். அதே நேரம் மார்ச் 5,6,7ல் உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும்.
பணியாளர்கள் புதனின் பலத்தால் சிறப்பான நன்மை அடைவர். சகஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். மார்ச் 3,4 சிறப்பான நாட்களாக இருக்கும்.
வியாபாரிகளுக்கு லாபம் அதிகரித்த வண்ணம் இருக்கும். அரசு வகையில் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். புதிய வியாபாரம் அனுகூலம் தரும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். பிப்.13,14, மார்ச் 8,9,12,13,14ல் சந்திரனால் தடைகள் வரலாம். பிப். 22,23ல் லாபம் அதிகரிக்கும். பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றல் இருக்கும். மார்ச் 13க்கு பிறகு வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர். பிப்.25க்கு பிறகு ஒப்பந்தம் பெறுவதில் தடைகளை சந்திக்கலாம். எதிரிகளால் தொல்லை ஏற்படலாம். மறைமுகப் போட்டி அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள், பொதுநலசேவகர்கள் சுமாரான பலன் காண்பர். பிப்.19,20,21ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் புதனால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நல்லது. விவசாயிகள் நெல், கோதுமை, சோளம் மூலம் அதிக மகசூல் காண்பர்.
கால்நடைச் செல்வம் பெருகும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். புதிய பதவி தேடி வரும். சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பிப்.15,16ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம். பிப்.24,25 சிறப்பான நாட்களாக அமையும்.
* நல்ல நாள்: பிப்.15,16,22,23,24,25, மார்ச் 3,4,5,6,7,10,11
* கவன நாள்: பிப்.26,27 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,9
* நிறம்: சிவப்பு, நீலம்
* பரிகாரம்:
* செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிேஷகம்
* வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
* வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு நெய் தீபம்