Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கட உபநிஷதம் (மரணத்திற்கு பின்னால்) ... மரணத்தை எதிர்கொள்வது எப்படி? மரணத்தை எதிர்கொள்வது எப்படி?
முதல் பக்கம் » கட உபநிஷதம் (மரணத்திற்கு பின்னால்)
முதல் அத்தியாயம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 மார்
2012
12:03

1.1  எல்லாம் உன்னுள்

நசிகேதன்(1-5)

கட உபநிஷதத்திற்கு ஒரு முன்னுரைபோல் அமைகிறது இந்த முதல் அத்தியாயம். மரணத்தை ஆராய, மறு வாழ்க்கையைச் சிந்திக்க, உயர் வாழ்க்கையை விரும்ப, ஆன்மாவை உணர, இறைவனை நாட எத்தகைய மனப்பக்குவம் தேவை, என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதையெல்லாம் இங்கே நாம் காண்கிறோம். நசிகேதன் என்ற சிறுவனிடம் இவையெல்லாம் இருந்தன என்று கூறுவதன்மூலம், உயர்வாழ்க்கையை விரும்புவர்களிடம் இத்தகைய பண்புகள் வேண்டும் என்பதை இந்த அத்தியாயம் சுட்டிக்காட்டுகிறது.

நசிகேதனின் தந்தை செய்த யாகம்

1. ஓம் உசன் ஹ வை வாஜச்ரவஸ: ஸர்வவேதஸம் ததௌ
தஸ்ய ஹ நசிகேதா நாம புத்ர ஆஸ

ஹ வை-முன்பொரு சமயம்; வாஜச்ரவஸ-வாஜசிரவஸ்; உசன்-பலனில் ஆசை கொண்ட வராய்; ஸர்வவேதஸம்-தன்னிடமுள்ள எல்லாப் பொருட்களையும்; ததௌ-கொடுத்தார்; தஸ்ய-அவருக்கு; நசிகேதா நாம-நசிகேதன் என்ற பெயருள்ள; புத்ர:-மகன்; ஆஸ ஹ-இருந்தான்.

பொருள் : முன்பொரு சமயம் வாஜசிரவஸ் என்பவர் பலனில் ஆசை கொண்டவராய் தன்னிடமுள்ள எல்லாப் பொருள்களையும் தானமாகக் கொடுத்தார். அவருக்கு நசிகேதன் என்ற மகன் இருந்தான்.

இயற்கையை எண்ணற்ற சக்திகள் ஆட்சி செய்கின்றன. ஒவ்வொரு சக்தியையும் ஒரு தேவனாகக் கண்டார்கள் வேத முனிவர்கள். காற்று வீசுவதும். சூரியன் சுடுவதும், மழை பெய்வதும் எல்லாம் இந்த தேவர்களின் ஆற்றலால் என்று அவர்கள் கருதினர். இந்த தேவர்களை வழிபடுவதன்மூலம் உலக வாழ்க்கைக்கான அனைத்தையும் பெறலாம் என்று கண்ட அவர்கள், தேவர்களை வழிபடுவதற்காகக் கண்ட வழிமுறையே யாகம். இக உலக வாழ்க்கைக்கான வசதிகளைப் பெறுவதற்கானாலும், சொர்க்க போகங்களை அனுபவிப்பதற்கானாலும், மோட்ச மார்க்கத்திற்கு ஆனாலும் அவர்கள் யாகத்தை வழியாகக் கொண்டனர்.

யாக குண்டத்தில் அக்கினி வளர்த்து, குறிப்பிட்ட தேவனை உத்தேசித்து, உரிய மந்திரங்களுடன் உரிய பொருட்களைச் சமர்பித்து வழிபடும்போது அந்த யாகம் அதற்குரிய பலனைத் தருகிறது. அத்தகையதொரு யாகம் விசுவஜித். பேரரசனாகி உலகத்தையே ஆள்வது இந்த யாகத்தால் பெறப்படும் பலன். ஆனால் அந்த யாகத்திற்கான நிபந்தனை வினோதமானது-அனைத்தையும் ஆள்வது நோக்கம், நிபந்தனை என்னவென்றால் தன்னிடமுள்ள அனைத்தையும் தானம் செய்ய வேண்டும்.

வாழ்க்கையைக் கொடுத்தால் வாழ்க்கையைப் பெறலாம் என்பார் சுவாமி விவேகானந்தர். எல்லாம் நமக்கு வேண்டுமென்றால் நாம் எல்லாவற்றையும் விட வேண்டும். அதாவது அனைத்தையும் துறந்தவனுக்கு அனைத்தும் உரியதாகும். வேதகாலத்திலிருந்தே வந்திருக்கின்ற கருத்துச் செல்வம் இது. உலகையே ஆளும் நோக்கத்துடன் விசுவஜித் யாகத்தைச் செய்தார் வாஜசிரவஸ். யாக முடிவில் தமது செல்வம் அனைத்தையும் தானம் செய்தார்.

தானப் பொருட்களைக் கண்ட நசிகேதனின் சிந்தனை

2. தம் ஹ குமாரம் ஸந்தம் தக்ஷிணாஸு நீயமானாஸு ச்ரத்தா விவேச ஸோமன்யத

தக்ஷிணாஸு-தட்சிணைகள்; நீயமானாஸு-எடுத்துச் செல்வதைக் கண்டபோது; குமாரம்-சிறுவனாக; தம் ஹ ஸந்தம்- இருக்கின்ற அவனை; ச்ரத்தா-சிரத்தை; ஆவிவேச-வந்தடைந்தது; ஸ-அவன்; அமன்யத-சிந்திக்கலானான்.

பொருள் : தட்சிணைகள் எடுத்துச் செல்வதைச் சிறுவனான நசிகேதன் கண்டான். சிரத்தை அவனை வந்தடைந்தது. அவன் சிந்திக்கலானான்.

சிரத்தை என்றால் செயல்பாட்டுடன் கூடிய நம்பிக்கை என்று பொருள் கொள்ளலாம். நம்புகிறேன் என்று சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதல்ல; அந்த நம்பிக்கையைச் செயல்படுத்துவது, அந்த நம்பிக்கையின் லட்சியத்தை அடையப் பாடுபடுவது-இதுவே சிரத்தை. உயர் லட்சியத்தை அடைவதற்கான எல்லா முயற்சிகளுக்கும் சிரத்தை தேவை (ச்ரத்தா யத்பூர்வக: ஸர்வ புருஷார்த்த ஸாதன ப்ரயோக-முண்டக உபநிஷதம்)என்கிறார் ஸ்ரீ சங்கரர். இத்தகைய சிரத்தையே இன்று நமக்கு வேண்டியது என்பார் சுவாமி விவேகானந்தர். சிரத்தையின் பெருமையைப் போற்றுவதாகவும் அது நம்மிடம் வருமாறு பிராத்திப்பதாகவும் ரிக் வேதத்தில் ச்ரத்தா ஸூக்தம் என்று ஒரு பாடலே உள்ளது. சிரத்தை இறைவனின் தலையில் உள்ளது. இதய தாகத்தால் அது அடையப்படுகிறது என்று அந்தப் பாடல் கூறுகிறது. அத்தகைய சிரத்தை நசிகேதனிடம் வந்தது.

நசிகேதனின் சிந்தனைக்கான காரணம்

3. பீதோதகா ஜக்தத்ருணா துக்ததோஹா நிரிந்த்ரியா
அனந்தா நாம தே லோகாஸ்தான் ஸ கச்சதி தா ததத்

பீத உதகா-தண்ணீர் குடித்து முடித்த: ஜகத் த்ருணா-புல் மேய்ந்து முடித்த; துக்த தோஹா-பால் கறந்து முடித்த; நிரிந்த்ரியா-கன்று போடும் சக்தி இழந்த; தா-அந்தப் பசுக்களை; ததத்-தானம் செய்பவன்; அனந்தா நாம-மகிழ்ச்சி இல்லாத; தே லோகா; தான்-அந்த உலகங்களை; கச்சதி-அடைகிறான்.

பொருள் : தண்ணீர் குடித்து முடித்த, புல் மேய்ந்து முடித்த, பால் கறந்து முடித்த, கன்று போடும் சக்தியை இழந்த பசுக்களைத் தானம் செய்பவன் மகிழ்ச்சி இல்லாத உலகங்களை அடைகிறான்.

ஒருவனிடம் இருக்கும் பசுக்களின் எண்ணிக்கையை வைத்து அவனது செல்வாக்கை அந்த நாட்களில் மதிப்பிட்டார்கள். எனவே பசுக்களைத் தானம் செய்வது தானங்களில் சிறந்த ஒன்றாகக் கருதப்பட்டது. விசுவஜித் யாகத்தின் முடிவில் அனைத்தையும் தானம் செய்ய வேண்டும். ஆனால் வாஜசிரவஸ் தனக்கு உதவாதவற்றையெல்லாம் தானம் என்ற பெயரில் கொடுத்தார், ஒன்றுக்கும் உதவாத கிழட்டு பசுக்களைக் கொடுத்தார். இதனால், தானத்தின் பலன் கிடைக்காமல் போவது மட்டுமல்ல, தானத்தின் அடிப்படைக் கருத்தைச் சரியாகக் கடைபிடிக்காததால் இரட்டைத் தவறுக்கு உள்ளானார் வாஜசிரவஸ். அதற்குத் தண்டனையாக மகிழ்ச்சியற்ற உலகங்களில் வாழவும் நேரும் என்பதைப் புரிந்துகொண்ட நசிகேதன் ஆழ்ந்த சிந்தனை வசப்பட்டான்.

நசிகேதன் தந்தைக்கு உண்மையை அறிவுறுத்துதல்

தந்தை செய்யும் தவறை மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் நோக்கத்துடன் நசிகேதன் அவரிடம் சென்று கூறினான் :

4. ஸ ஹோவாச பிதரம் தத கஸ்மை மாம் தாஸ்யஸீதி
த்வதீயம் த்ருதீயம் தம் ஹோவாச ம்ருத்யவே த்வா ததாமீதி

ஸ-அவன்; தத-அப்பா; மாம்-என்னை; கஸ்மை-யாருக்கு; தாஸ்யஸி-கொடுக்கப் போகிறீர்கள்; இதி-என்று; பிதரம்-தந்தையை; உவாச ஹ-சொன்னான்; த்விதீயம்-இரண்டாவது முறை. த்ருதீயம்-மூன்றாம் முறை; த்வா உன்னை; ம்ருத்யவே-எமனுக்கு; ததாமி-கொடுக்கிறேன்; இதி-என்று; தம்-அவனிடம்; உவாச ஹ-சொன்னார்.

பொருள் : நசிகேதன் தந்தையிடம் சென்று, அப்பா, என்னை யாருக்குக் கொடுக்கப் போகிறீர்கள்? என்று கேட்டான். இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் கேட்டான். அதற்குத் தந்தை, உன்னை எமனுக்குக் கொடுக்கப் போகிறேன் என்று கூறினார்.

தந்தை தவறு செய்வதைக் கண்டு ஆழ்ந்து சிந்தித்த நசிகேதன், அவரைத் தவறிலிருந்து காப்பாற்றி, அவர் மகிழ்ச்சியற்ற உலகங்களை அடையாமல் தடுப்பது தனது கடமை என்று உணர்ந்தான். சிறுவனான தான் நேரடியாக நீங்கள் செய்வது தவறு என்று தந்தையிடம் கூறினால் அது அதிகப்பிரசங்கித்தனமாக ஆகிவிடும் என்று கருதி, மறைமுகமாக அவருக்கு விஷயத்தைத் தெளிவுபடுத்த எண்ணினான்.

சிறந்தவற்றை தானம் செய்ய வேண்டும் என்பது யாகத்தின் நிபந்தனை. ஒரு தந்தைக்கு நல்ல மகனைவிடச் சிறந்த செல்வம் இல்லை. எனவே என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப் போகிறீர்கள்? என்று நசிகேதன் வாஜசிரவஸிடம் கேட்டான். இதன் மூலம் சிறந்தவற்றை தானம் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களே! என்று அவருக்கு நினைவூட்டினான்.

நசிகேதனின் இந்தக் கேள்வியை முதலில் வாஜசிரவஸ் பொருட்படுத்தவில்லை. சிறுவன் ஏதோ சொல்கிறான் என்று விட்டுவிட்டார். ஆனால் நசிகேதன் விடவில்லை. தந்தையை அணுகி மீண்டும் கேட்டான். அதற்கும் வாஜசிரவஸ் பதில் சொல்லவில்லை எனவே மூன்றாம் முறையாகக் கேட்டான். அதனால் கோபமுற்ற வாஜசிரவஸ், உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன், அதாவது, நீ செத்துத் தொலை என்று ஆத்திரத்துடன் கூறினார்.

நசிகேதனின் சுய மதிப்பு

5. பஹூனாமேமி ப்ரதமோ பஹூனாமேமி மத்யம
கிம் ஸ்வித் யமஸ்ய கர்த்தவ்யம் யன்மயாத்ய கரிஷ்யதி

பஹூனாம்-பல விஷயங்களில்; ப்ரதம: ஏமி-முதல் நிலையில் உள்ளேன்; பஹூனாம்-பல விஷயங்களில்; மத்யம: ஏமி-இடைநிலையில் இருக்கிறேன்; யமஸ்ய-எமனுக்கு; கிம்ஸ்வித்-என்ன; மயா-என்னால்; கரிஷ்யதி-செய்யப் போகிறார்; அத்ய-இப்போது; கர்த்தவ்யம்-செய்யத் தக்கது; யத்-என்ன.

பொருள் : பல விஷயங்களில் நான் முதல் நிலையில் இருக்கிறேன். பல விஷயங்களில் இடைநிலையில் இருக்கிறேன். என்னை எமனிடம் அனுப்புவதன்மூலம் தந்தை என்ன சாதிக்கப் போகிறார்? என்று சிந்தித்தான் நசிகேதன்.

நசிகேதனிடம் நாம் காணும் ஒரு முக்கியப் பண்பு இது: சுய மதிப்பு. தன்னை, வாழ்க்கையில் தனது இடத்தை, தனது குறைநிறைகளை அறிந்து வைத்திருந்தான் அவன். எனவே, அவன் பல விஷயங்களில் முதல் நிலையில் உள்ளேன், பல விஷயங்களில் இடை நிலையில் உள்ளேன். ஆனால் எதிலும் கடை நிலையில் இல்லை என்று துணிச்சலாக தன்னை மதிப்பிடுகிறான்; அப்படிப்பட்ட என்மீது தந்தை ஆத்திரப்படுகிறாரே! எதற்காக நான் அவரிடம் இதைச் சொல்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளாமல் என்னை எமனிடம் அனுப்புவதாகக் கூறிவிட்டாரே என்று ஆதங்கப்படுகிறான்.

நசிகேதன் தந்தையிடம் சிந்திக்குமாறு கூறியது

தந்தை ஆத்திரத்தால் சொன்னாலும், சொன்னது சொன்னதுதான், தான் எமனிடம் போயே ஆக வேண்டும் என்பதை நிச்சயித்துக்கொண்டான் நசிகேதன். ஆனால் போகுமுன் அவருக்கு உண்மையை உணர்த்த விரும்பிய அவன் அவரிடம் கூறினான்.

6. அனுபச்ய யதா பூர்வே ப்ரதிபச்ய ததாபரே
ஸஸ்யமிவ மர்த்ய பச்யதே ஸஸ்யமிவாஜாயதே புன

பூர்வே-முன்னோர்; அனு-முறையே; யதா-எப்படி இருந்தார்களோ; பச்ய-பாருங்கள்; ததா-அப்படியே செய்யுங்கள்; மர்த்ய-மனிதன்; ஸஸ்யம் இவ-செடிகொடிகளைப் போல்; பச்யதே-அழிகிறான்; புன-மீண்டும்; ஸஸ்யம் இவ-செடிகொடிகளைப் போலவே; ஆஜாயதே-பிறக்கிறான்.

பொருள் : முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். இப்போதுள்ளவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதையும் சிந்தித்துப் பாருங்கள். செடிகொடிகளைப்போல் மனிதன் பிறக்கவும் இறக்கவும் செய்கிறான் என்று தந்தையிடம் கூறினான் நசிகேதன்.

வாழ்க்கையில் அனுபவங்கள் பெரிய வழிகாட்டிகள். நமது அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது உண்மை. ஆனால் பிறருடைய அனுபவங்களிலிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். தீ சுடும் என்பதை நாமே அனுபவித்துப் பார்க்க வேண்டியதில்லை. பிறருடைய அனுபவத்திலிருந்தே அதைப் புரிந்துகொள்ளலாம். அதுபோல், பிறருடைய அனுபவங்களிலிருந்து உண்மையைக் கற்றுக்கொள்ளுமாறு வாஜசிரவஸிடம் கூறினான் நசிகேதன். நல்லவர்கள் இவ்வாறு தானம் செய்யவில்லை, அப்படிச் செய்தவர்கள் மகிழ்ச்சியற்ற உலகங்களை அடையாமலும் இல்லை. எனவே உண்மையாக நடந்துகொள்ளுங்கள் என்று தந்தைக்கு அறிவுறுத்துகிறான் அவன்.

அதுமட்டுமல்ல; தன்னை எமனுக்குக் கொடுப்பதாக தந்தை ஆத்திரத்திலோ கோபத்திலோ சொல்லியிருந்தாலும் அவர் சொன்ன வாக்கு காப்பாற்றப்பட வேண்டும், தான் எமனிடம் போயே ஆக வேண்டும் என்று அதனை எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டான் நசிகேதன், அவனுக்குத் தந்தையிடம் வருத்தமோ கோபமோ வரவில்லை  என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

பிறகு, எமலோகம் போவதான தன் முடிவைத் தந்தையிடம் கூறினான் நசிகேதன். ஆத்திரத்தில், தான் செய்து விட்டதை எண்ணிய வாஜசிரவஸ் கவலையில் ஆழ்ந்தார். அதைக் கண்ட நசிகேதன் அவருக்கு வாழ்க்கையின் உண்மையை எடுத்துக் கூறினான். வாழ்க்கை நிலையற்றது. மனிதன் செடிகொடிகளைப்போல் பிறக்கவும் இறக்கவும் செய்கிறான். பிறந்தவர்கள் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும் உறுதி. எனவே நான் எமலோகம் போவதுபற்றி கலங்க வேண்டாம் என்று அவரிடம் கூறிவிட்டு, எமலோகம் சென்றான் அவன்.

எமதர்மனிடம் மந்திரிகள் கூறியது : 7-8

நசிகேதன் சென்றபோது எமதர்மன் அங்கே இல்லை. எனவே அவன் எமனின் மாளிகையின் முன்னால் மூன்று நாட்கள் காத்திருக்க நேர்ந்தது, அதன்பிறகே எமதர்மன் வந்தான். அவனது மந்திரிகள் அவனிடம் சென்று நசிகேதன் வந்து காத்திருப்பதைப் பற்றி கூறினர்.

7. வைச்வானர: ப்ரவிசதி அதிதிர் ப்ராஹ்மணோ க்ருஹான்
தஸ்யைதாம் சாந்திம் குர்வந்தி ஹர வைவஸ்வதோதகம்

அதிதி-விருந்தினனாக; ப்ராஹ்மண:-தூயவன்; வைச்வானர-நெருப்பு; க்ருஹான்-வீட்டில்; ப்ரவிசதி-நுழைகிறான்; தஸ்ய-அவனுக்கு; ஏதாம்-இவற்றைக் கொடுத்து; சாந்திம்-அமைதியை; குர்வந்தி-செய்கின்றனர்; வைவஸ்வத-எம தர்மனே; உதகம்-தண்ணீர்; ஹர-கொண்டுவா

பொருள் : தூயவன் ஒருவன் விருந்தினனாக வரும்போது நெருப்புப் போலவே நுழைகிறான். நல்லவர்கள், அவனுக்குத் தண்ணீர் முதலானவற்றைக் கொடுத்து, உபசரித்து அவனை அமைதிப்படுத்துகின்றனர். எமதர்மனே! நீயும் அந்தச் சிறுவனுக்கு தண்ணீர் முதலியவற்றைக் கொடு என்று மந்திரிகள் எமதர்மனிடம் கூறினர்.

விருந்தினர் என்பவர் வழிபாட்டிற்குரியவர். அந்த வேளைக்கு அவர் தெய்வமே; அந்த நிலையில் அவர் போற்றப்பட வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். அவர் கூறுவதுபோல், விருந்தினரை உபசரித்தல் என்பது இந்தியாவில் ஒரு காலத்தில் வழிபாடாகவே செய்யப்பட்டு வந்தது. அதன் முக்கியத்துவத்தை இங்கே மந்திரிகள் எமதர்மனிடம் தெரிவிக்கின்றனர்.

8. ஆசா ப்ரதீ÷க்ஷ ஸங்கதம் ஸூன்ருதாம்ச
இஷ்ட்டாபூர்த்தே புத்ர பசூம்ச்ச ஸர்வான்
ஏதத் வ்ருங்க்தே புருஷஸ்யால்பமேதஸோ
யஸ்யானச்னன் வஸதி ப்ராஹ்மணோ க்ருஹே

அல்பமேதஸ-அற்ப புத்தியுடைய; யஸ்ய புருஷஸ்ய-எந்த மனிதனின்; க்ருஹே-வீட்டில்; ப்ராஹ்மண-தூயவன்; அனச்னன்-உணவின்றி; வஸதி-வசிக்கிறானோ; ஆசா-நம்பிக்கைகள்; ப்ரதீக்ஷõ-எதிர்பார்ப்புகள்; ஸங்கதம்-புண்ணிய பலன்; ஸூன்ருதாம்-இனிய பேச்சின் பலன்; இஷ்ட்டா பூர்த்தே-யாக பலன். நற்பணிகளின் பலன்; ஸர்வான்-எல்லாம்; புத்ர பசூன் ச-பிள்ளைச் செல்வம், கால்நடைச் செல்வம்; ஏதத்-அனைத்தையும்; வ்ருங்தே-நாசமாக்குகிறான்.

பொருள் : யாருடைய வீட்டில் தூயவன் ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அற்ப புத்தி உடையவனான அவனது நம்பிக்கைகள், எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் அழிகின்றன. தான் செய்த புண்ணியங்களின் பலன், இனிய பேச்சின் பலன், யாகங்கள் வழிபாடு போன்றவற்றின் பலன், நற்பணிகளின் பலன் அனைத்தையும் அவன் இழக்கிறான். அவனது பிள்ளைச் செல்வம், கால்நடைச் செல்வம் அனைத்தும் அழிகின்றன.

தூயவன் ஒருவன் வீட்டிற்கு வந்தால் அவனை உபசரிக்க வேண்டியது கடமை என்பதை இந்த மந்திரம் உணர்த்துகிறது. உபசரிக்காவிட்டால் எல்லா செல்வமும் அழியும். அதேவேளையில், உபசரித்து அவர்களின் மனம் கனிந்த ஆசிகளைப் பெற்றால் செல்வம் அனைத்தும் சேரும் என்பது உணர்த்தப்படுகிறது.

எமதர்மனின் உபசாரம்

மந்திரிகள் கூறியதைக் கேட்ட எமதர்மன் நேராக நசிகேதனிடம் சென்று அவனை உபசரித்தான்

9. திஸ்ரோ ராத்ரீர் யதவாத்ஸீர் க்ருஹே மே
னச்னன் ப்ரஹ்மன் அதிதிர் நமஸ்ய
நமஸ்தேஸ்து ப்ரஹ்மன் ஸ்வஸ்தி மேஸ்து
தஸ்மாத் ப்ரதி த்ரீன் வரான் வ்ருணீஷ்வ

ப்ரஹ்மன்-வழிபாட்டிற்கு உரியவனே; அதிதி-விருந்தாளி; நமஸ்ய-வணங்கத் தக்க; திஸ்ர; ராத்ரீ-மூன்று இரவுகள்; அனச்னன்-உணவின்றி; மே-எனது; க்ருஹே-வீட்டில்; யத் அவாத்ஸீ-வசித்தாய்; ப்ரஹ்மன்-தூய பாலனே; தஸ்மாத்-அதனால்; மே-எனக்கு; ஸ்வஸ்தி-நன்மை; அஸ்து-உண்டாகட்டும்; தே-உனக்கு; நம: அஸ்து-வணக்கம்; ப்ரதி-அதற்காக; த்ரீன்-மூன்று; வரான்-வரங்களை; வ்ருணீஷ்வ-கேட்டுக்கொள்.

பொருள் : வழிபாட்டிற்கு உரியவனே! விருந்தாளியும் வணங்கத் தக்கவனுமான நீ உணவின்றி என் வீட்டில் மூன்று இரவுகள் தங்க நேர்ந்தது. தூய பாலனே! அந்தக் குற்றம் என்னைப் பாதிக்காமல் எனக்கு நன்மை உண்டாகட்டும். உனக்கு வணக்கம். நீ மூன்று இரவுகள் தங்க நேர்ந்ததற்காக என்னிடமிருந்து மூன்று வரங்களைப் பெற்றுக்கொள்.

முதல் வரம் : தந்தையின் நலம்(10-11)

நசிகேதன் கேட்டது

10. சாந்த ஸங்கல்ப: ஸுமனா யதா ஸ்யாத்
வீதமன்யுர் கௌதமோ மாபி ம்ருத்யோ
த்வத் ப்ரஸ்ருஷ்ட்டம் மாபி வதேத் ப்ரதீத
ஏதத் த்ரயாணாம் ப்ரதமம் வரம் வ்ருணே

ம்ருத்யோ-எமதர்மனே; கௌதம-கௌதமர்; த்வத் ப்ரஸ்ருஷ்ட்டம்-உன்னால் அனுப்பப்பட்ட; மா அபி-என்னை; ப்ரதீத-நினைவைப் பெற்று; சாந்த ஸங்கல்ப-மனக்கவலை அற்றவராக; ஸுமனா: தெளிந்த மனத்தினராக; வீத மன்யு-கோபம் அற்றவராக; ஸுமனா-தெளிந்த மனத்தினராக; வீத மன்யு-கோபம் அற்றவராக; யதா ஸ்யாத்-எவ்வாறு ஆவாரோ; வதேத்-பேச வேண்டும்; த்ரயாணாம்-மூன்று வரங்களுள்; ஏதத்-இதனை; ப்ரதமம் வரம்-முதல் வரமாக; வ்ருணே-கேட்கிறேன்.

பொருள் : எமதர்மனே! உன்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற என்னை எனது தந்தையாகிய கவுதமர் புரிந்துகொள்ளவேண்டும். என்னை ஏற்றுக்கொண்டு, மனக்கவலை அற்றவராக, தெளிந்த மனத்தினராக, கோபம் அற்றவராக என்னுடன் பேச வேண்டும் மூன்று வரங்களுள் இதையே முதல் வரமாகக் கேட்கிறேன்.

எமனைச் சந்தித்து வருகின்ற இவன் ஆவியல்ல, என் மகன்தான் என்று வாஜசிரவஸ் புரிந்துகொள்ள வேண்டும், தான் ஒரு தவறு செய்ததாகக் கோபம் கொண்ட அவர் இப்போது அந்தக் கோபத்தை விட்டிருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதானால், தந்தை தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நசிகேதன் முதல் வரமாகக் கேட்டான்.

எமதர்மன் வரமளித்தல்

11. யதா புரஸ்தாத் பவிதா ப்ரதீத
ஒளத்தாலகிராருணிர் மத்ப்ரஸ்ருஷ்ட்ட
ஸுகம் ராத்ரீ: சயிதா வீதமன்யு
த்வாம் தத்ருசிவான் ம்ருத்யு முகாத் ப்ரமுக்தம்

ஆருணி-அருணனின் மகனான; ஒளத்தாலகி: உத்தாலகர்; புரஸ்தாத்-முன்னால்; யதா-எப்படி; ப்ரதீத: நினைவைப் பெற்று; மத்ப்ரஸ்ருஷ்ட்ட-என்னால் அனுமதிக்கப்பட்டு; ராத்ரீ-இரவில்; ஸுகம்-நன்றாக; சயிதா-தூங்குபவராக; ம்ருத்யு-முகாத்-எமனிடமிருந்து; ப்ரமுக்தம்-திரும்பிச் செல்கின்ற; த்வாம்-உன்னை; தத்ருசிவான்-கண்டு; வீதமன்யு-கோபம் அற்றவராக; பவிதா-ஆவார்.

பொருள் : அருணனின் மகனும் உனது தந்தையுமாகிய உத்தாலகர் உன்னைக் காணும்போது முன்பு போலவே உன்னைப் புரிந்துகொள்வார். என் அருளால் இரவுகளில் கவலையற்று தூங்குவார். என்னிடமிருந்து திரும்பிச் செல்கின்ற உன்னைக் கண்டு கோபம் கொள்ளவும் மாட்டார் என்று கூறி முதல் வரத்தை அளித்தான் எமதர்மன்.

இரண்டாம் வரம் (12-18)

இரண்டாம் வரம்: சொர்க்க லோகம் 12-13

12. ஸ்வர்கே லோகே ந பயம் கிஞ்சனாஸ்தி
ந தத்ர த்வம் ந ஜரயா பிபேதி
உபே தீர்த்வா சனாயாபிபாஸே
சோகாதிகோ மோததே ஸ்வர்கலோகே

ஸ்வர்கே லோகே-சொர்க்கத்தில்; கிஞ்சன-சிறிதும்; பயம்-பயம்; ந அஸ்தி-கிடையாது; தத்ர-அங்கே; த்வம்-நீ; ந-இல்லை; ஜரயா-மூப்பினால்; ந பிபேதி-பயப்படுவதில்லை; ஸ்வர்க லோகே-சொர்க்கத்தில் உள்ளவன்; அசனாயாபிபாஸே-பசியையும் தாகத்தையும்; உபே-இரண்டையும்; தீர்த்வா-தாண்டி; சோகாதிக-கவலையற்றவனாய்; மோததே-மகிழ்கிறான்.

பொருள் : சொர்க்கத்தில் சிறிதும் பயம் கிடையாது. மரண தேவனாகிய நீயும் அங்கில்லை. அங்கே யாரும் மூப்பினால் பயப்படுவதில்லை. அவர்களுக்குப் பசி, தாகம் இரண்டும் கிடையாது. அவர்கள் கவலையற்றவர்களாக மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள்.

13. ஸ த்வமக்னிம் ஸ்வர்க்யமத்யேஷி ம்ருத்யோ
ப்ரப்ரூஹி தம் ச்ரத்ததானாய மஹ்யம்
ஸ்வர்கலோகா அம்ருதத்வம் பஜந்தே
ஏதத் த்விதீயேன வ்ருணே வரேண

ம்ருத்யோ-எமதர்மனே; ஸ்வர்கலோகா-சொர்க்க லோகத்தில் வாழ்பவர்கள்; அம்ருதத்வம்-தேவத்தன்மையை; பஜந்தே-பெறுகின்றனர்; ஸ்வர்க்யம் அக்னிம்-சொர்க்கலோகத்திற்கு அழைத்துச் செல்லக் கூடிய யாகத்தைப் பற்றி; ஸ: த்வம்-உனக்கு; அத்யேஷி-தெரியும்; ச்ரத்ததானாய-சிரத்தை மிக்கவனான; மஹ்யம்-எனக்கு; த்வம்-நீ; ப்ரப்ரூஹி-சொல்; ஏதத்-இதனை; த்வதீயேன வரேண-இரண்டாவது வரமாக; வ்ருணே-கேட்கிறேன்.

பொருள் : எமதர்மனே! சொர்க்கத்தில் வாழ்பவர்கள் தேவத்தன்மையைப் பெறுகின்றனர். அங்கே அழைத்துச் செல்லக் கூடிய யாகத்தைப்பற்றி உனக்குத் தெரியும். சிரத்தை மிக்கவனான எனக்கு அதைப்பற்றி சொல். இதனை இரண்டாவது வரமாகக் கேட்கிறேன்

மனிதனுக்கு இன்ப நுகர்ச்சியிலுள்ள நாட்டம் முடிவற்றது, ஆயுளோ குறைவு. எனவே இங்கே கிடைக்காத, இங்கே பூர்த்தி செய்ய முடியாத இன்பங்கள் வேறோர் உலகத்தில் இருப்பதாகக் கொண்டு, அங்கே சென்று தனது சுகபோக வாழ்க்கையைத் தொடர நினைக்கிறான் அவன். இதன் விளைவாக எழுந்ததே சொர்க்கம் என்ற கருத்து. எல்லா நாட்டுப் புராணங்களிலும் இந்தக் கருத்து இருப்பதைக் காணலாம். பசி, தாகம், மூப்பு, அனைத்திற்கும் மேலாக மரணம் போன்றவை சுகபோகங்களுக்குத் தடையாக உள்ளன. எனவே அந்தத் தடைகள் இல்லாத உலகமாக சொர்க்கத்தைக் கருதினான் மனிதன்.

சொர்க்கத்திற்குப் போவது எப்படி?

வாழ்வில் சாதிக்க வேண்டிய அனைத்திற்கும் யாகத்தை நாடினான் வேதகால மனிதன் என்பதை 1.1.1 விளக்கவுரையில் கண்டோம். சொர்க்கத்திற்குப் போவதற்கென்றும் தனியாக யாகங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றைப்பற்றி எமதர்மனிடம் இரண்டாவது வரமாக நசிகேதன் கேட்கிறான்.

நசிகேத வித்யை

யாகங்கள் புறத்தில் செய்யப்படுபவை. சில பொருட்களைக் கொண்டு புறத்தில் செய்யப்படுகின்ற கிரியைகள் புண்ணியத்தைத் தரலாம், சொர்க்க வாழ்வைப் பெற்றுத் தரலாம்; ஆனால் அக வளர்ச்சியைத் தருமா, அனுபூதியைத் தருமா என்ற கேள்வி காலப்போக்கில் எழுந்தது. அகப் பயிற்சிகளே அக வளர்ச்சியைத் தர முடியும் என்ற கருத்து வலுப்பெற்றது யாகங்கள் அகமுகமாக்கப்பட்டன. வித்யைகள் உருவாயின. இந்த மந்திரத்தில் யாகம் வித்யை யாகப் பரிணமிப்பதைக் காண்கிறோம்.

14. ப்ர தே ப்ரவீமி தது மே நிபோத
ஸ்வர்க்யமக்னிம் நசிகேத: ப்ரஜானன்
அனந்த கோலகாப்திமதோ ப்ரதிஷ்ட்டாம்
வித்தி த்வமேதம் நிஹிதம் குஹாயாம்

நசிகேத: நசிகேதா; தத் உ-நீ கேட்ட அதை; ப்ரஜானன்-அறிந்த நான்; தே-உனக்கு; ப்ர ப்ரவீமி-சொல்கிறேன்; ஸ்வர்க்யம்-சொர்க்கத்தைத் தருவதான; அக்னிம்-யாகத்தை; நிபோத-விழிப்புற்றவனாகக் கேள்; அனந்த லோக ஆப்திம் அதோ-சொர்க்கத்தைத் தருவதும்; ப்ரதிஷ்ட்டாம்-பிரபஞ்சத்திற்கு ஆதாரமானதும்; குஹாயாம்-இதயக் குகையில்; நிஹிதம்-இருப்பதாகவும்; த்வம்-நீ; ஏதம்-இதனை; வித்தி-அறிந்துகொள்.

பொருள் : நசிகேதா! சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற யாகத்தைப்பற்றி கேட்டாய். அது எனக்குத் தெரியும். அதை உனக்குச் சொல்கிறேன். விழிப்புற்றவனாகக் கேள்.  சொர்க்கத்தைத் தருவதும், பிரபஞ்சத்திற்கு ஆதாரமானதுமான அந்த அக்கினி இதயக்குகையில் உள்ளது.

சொர்க்கத்திற்குப் போவதுபற்றிய யாகத்தை அறிய விரும்பினான் நசிகேதன். அது தனக்குத் தெரியும் என்கிறான் எமதர்மன். புறக் கரியையாகச் செய்யும் போது சொர்க்கத்தைத் தருகின்ற அதே யாகம் அக அக்கினியாக, ஆன்ம அக்கினியாகக் கொண்டு வித்யையாகச்  செய்யப்படும்போது பிரபஞ்சத்திற்கு ஆதாரமான இறைவனை அடைவதற்கான ஒரு சாதனை ஆகிறது.

இறை வாழ்வில் முன்னேற முன்னேறத்தான் உபநிஷதங்களின் உட்பொருள் விளங்கும் என்று ஏற்கனவே கண்டோம். விழிப்புற்றவனாகக் கேள் என்று எமதர்மன் அதையே குறிப்பிடுகிறான். அந்த அக்கினி இதயக் குகையில் உள்ளது என்கிறான் எமதர்மன். இதுவே நசிகேத வித்யை. இதயக்குகை என்பதை அறிவதற்கான, புத்தியை விழிப்புறச் செய்வதற்கான ஒரு பயிற்சியாக இது இருந்திருக்க வேண்டும்.
ஆன்மீக உண்மைகளை இறைவனைப்பற்றிய உண்மைகளை அறிய புத்தி விழிப்புற்றிருக்க வேண்டும். இந்தக் கருத்து பல இடங்களில் வலியுறுத்தப் படுவதைக் காணலாம்.

நசிகேத யாகம்: 15-16

சொர்க்கத்தை அடைவதற்கான வழி இதயக் குகையில் இருக்கிறது என்று நசிகேத வித்யையைச் சுட்டிக்காட்டிய எமதர்மன், புறத்தில் அதை யாகமாகச் செய்வதற்கான வழிமுறைகளைக் கூறுகிறான்.

15. லோகாதிமக்னிம் தமுவாச தஸ்மை
யா இஷ்ட்டகா யாவதீர்வா யதா வா
ஸ சாபி தத்ப்ரத்யவதத் யதோக்தம்
அதாஸ்ய ம்ருத்யு: புனரேவாஹ துஷ்ட்ட

லோகாதிம்-ஆதியில் தோன்றிய; தம் அக்னிம்-அந்த யாகத்தை; யா இஷ்ட்டகா-எத்தகைய செங்கற்கள்; யாவதீ: வா-எத்தனை; யதா வா-எவ்வாறு; தஸ்மை-நசிகேதனுக்கு; உவாச-சொன்னான்; ஸ: சஅபி-நசிகேதனும்; தத்-அதனை; யதா உக்தம்-சொன்னதுபோலவே; ப்ரதி அவதத்-திருப்பிச் சொன்னான்; அத-பிறகு; தஸ்ய-நசிகேதனின் பதிலால்; துஷ்ட்ட: மகிழ்ந்த: ம்ருத்யு-எமன்; புன: ஏவ-மீண்டும்; ஆஹ-சொன்னான்.

பொருள் : ஆதியில் தோன்றிய அந்த யாகத்தைப்பற்றி எமதர்மன் நசிகேதனுக்குக் கூறினான். அந்த யாகத்திற்கு எத்தகைய செங்கற்கள் வேண்டும், எத்தனை வேண்டும், எவ்வாறு யாக குண்டத்தை அமைக்க வேண்டும் என்பதையெல்லாம் உபதேசித்தான். எம தர்மன் கூறியவற்றை நசிகேசன் அப்படியே திருப்பிக் கூறினான். நசிகேதன் அவற்றைப் புரிந்துகொண்டதைக் கண்டு மகிழ்ந்த எமதர்மன் மீண்டும் கூறினான்.

16. தமப்ரவீத் ப்ரீயமாணோ மஹாத்மா
வரம் தவேஹாத்ய ததாமி பூய
தவைவ நாம்னா பவிதாயமக்னி
ஸ்ருங்காம் ச இமாமனேகரூபாம் க்ருஹாண

ப்ரீயமாண-மகிழ்ச்சியுற்ற; மஹாத்மா-மகாத்மாவாகிய எமதர்மன்; தவ-உனக்கு; பூய-மீண்டும்; வரம்-வரத்தை; இஹ-இங்கே; ததாமி-தருகிறேன்; தம்-நசிகேதனிடம்; அப்ரவீத்-கூறினான்; அயம்-இந்த; அக்னி-யாகம்; தவ-உனது; நாம்னா ஏவ-பெயராலேயே; பவிதா-விளங்கட்டும்; அனேக ரூபாம்-பல்வேறு வண்ணங்களைக் காட்டுகின்ற; இமாம்-இந்த; ஸ்ருங்காம்-மாலையை; க்ருஹாண-பெற்றுக்கொள்.

பொருள் : நசிகேதனின் பதிலால் மகிழ்ச்சியுற்ற மகாத்மாவாகிய எமதர்மன் அவனிடம், உனக்கு இன்னொரு வரமும் தருகிறேன்: இந்த யாகம் இனி உனது பெயராலேயே விளங்கும். மேலும், பல வண்ணங்களைக் காட்டுகின்ற இந்த மாலையையும் பெற்றுக்கொள் என்று கூறினான்.

நல்ல திறமையான மாணவர்களிடம் ஓர் ஆசிரியருக்கும், தகுதிவாய்ந்த சீடனிடம் குருவிற்கும் ஏற்படுகின்ற உணர்ச்சியில் எமதர்மன் கூறிய வார்த்தைகள் இவை. இரண்டாவது வரத்தையும் அளித்துவிட்டு, இந்த இரண்டு வரங்களையும் அதிகமாகக் கொடுத்தான் அவன். எந்த யாகத்தால் சொர்க்கத்தை அடைய முடியமோ அது நசிகேத யாகம் என்று வழங்கப்படும் என்பது முதல் வரம். இரண்டாவதாக ஓர் அழகிய ரத்தின மாலை. இந்த ரத்தின மாலை என்பது பல்வேறு யாகங்களைப் பற்றிய அறிவைக் குறிக்கிறது( ஸ்ருங்காம் அகுத்ஸிதாம் கதிம் கர்ம மயீம் க்ருஹாண-ஸ்ரீசங்கரர்)

நசிகேத வித்யையின் மகிமை: 17-19

17. த்ரிணாசிகேதஸ்த்ரிபிரேத்ய ஸந்திம்
த்ரிகர்மக்ருத் தரதி ஜன்ம ம்ருத்யூ
ப்ரஹ்ம ஜஜ்ஞம் தேவமீட்யம் விதித்வா
நிசாய்யேமாம் சாந்திமத்யந்தமேதி

த்ரிணாசிகேத-நசிகேத யாகத்தை மும்முறை செய்து; த்ரிபி-மூவருடன்; ஸந்திம் ஏத்ய-தொடர்புகொண்டு; த்ரிகர்ம க்ருத்-மூன்று பயிற்சிகளைச் செய்து; ஜன்ம ம்ருத்யூ-பிறப்பையும் இறப்பையும்; தரதி-கடக்கிறான்; ப்ரஹ்மஜஜ்ஞம்-பிரம்மத்திலிருந்து தோன்றிய; ஈட்யம்-வழிபடத் தகுந்த; தேவம்-இறைவனை; விதித்வா-அறிந்து; நிசாய்ய-அனுபவித்து; இமாம்-இந்த; அத்யந்தம்-நிலைத்த; சாந்திம்-அமைதியை; ஏதி-பெறுகிறான்.

பொருள் : நசிகேத யாகத்தை மும்முறை செய்தவன் மூவருடன் தொடர்பு கொண்டு மூன்று பயிற்சிகளைச் செய்யும்போது பிறப்பையும் இறப்பையும் கடக்கிறான். பிரம்மத்திலிருந்து தோன்றியவரும் வழிபடத்தகுந்தவருமான இறைவனை அறிந்து அனுபவித்து அவன் நிலைத்த அமைதியைப் பெறுகிறான்.

நசிகேதனின் இரண்டாவது வரம் சொர்க்கத்திற்குப் போவதற்கான வழிபற்றியது. அந்த வழி நசிகேத யாகம். அந்தப் புற யாகத்தை சில நிபந்தனைகளுடன் செய்தால் அதுவே ஓர் அகப் பயிற்சியாக, ஒரு வித்யையாக இறை நெறியில் நம்மைச் சேர்க்கும் என்பதை இந்த மந்திரம் சுட்டிக்காட்டுகிறது. அந்த நிபந்தனைகள் என்னென்ன?

1. மூவருடன் தொடர்பு: தாய், தந்தை, குரு ஆகிய மூவர் காட்டும் வழியில் செல்ல வேண்டும். தாயின் அரவணைப்பு, உலக விஷயங்களில் தந்தையின் வழிகாட்டுதல், அக வாழ்க்கையில் தகுந்த குருவின் வழிநடத்தல் ஆகிய மூன்றும் உரிய வேளையில் சரியாகக் கிடைப்பவனின் வாழ்க்கை வெற்றிகரமானதாக அமைகிறது. இதில் ஒன்று குறைந்தாலும் அந்த வாழ்க்கை நிறைவு பெறுவதில்லை. எனவே இந்த மூவரின் ஆசிகளால் வாழ்க்கை நிறைவு பெற்றவனாக இருக்க வேண்டும்.

இந்த மூவரின் தொடர்பால் ஒருவன் இறைவனை அறிகிறான்; அதாவது இறைவன் ஒருவர் இருக்கிறார், அவரை அடைவதே வாழ்க்கையின் நோக்கம் என்பது அவனுக்குத் தெரிய வருகிறது. இதனையே மந்திரத்தில் வரும் அறிந்து (விதித்வா) என்ற வார்த்தை குறிப்பிடுகிறது ஆனால் அப்படி அறிவது மட்டும் போதாது. அனுபூதியில் இறைவனை உணர வேண்டும், அனுபவிக்க வேண்டும் இதனை மந்திரத்தில் வரும் அனுபவித்து (நிசாய்ய) என்ற வார்த்தை குறிப்பிடுகிறது. அதற்கான பயிற்சிகள் எவை?

2. மூன்று பயிற்சிகள்: தவம், ஸ்வாத்யாயம், ஈசுவர ப்ரணிதானம் என்பவை மூன்றும் கர்மங்கள் அல்லது மூன்று பயிற்சிகள் என்று பதஞ்ஜலி முனிவர் கூறுகிறார்( தப: ஸ்வாத்யாயேச்வர ப்ரணிதானானி க்ரியாயோக:).

சொந்த தேவைகளைச் சுருக்கிக்கொள்வதும், தனது வாழ்க்கை பிறருக்குப் பயனுள்ளதாக அமையும் வண்ணம் வாழ்வதும் தவம். நல்ல நூல்களைப் படித்தல், நல்ல கருத்துக்களைப் பிறருக்குச் சொல்லுதல், மந்திர ஜபம், சுய ஆராய்ச்சி போன்றவை ஸ்வாத்யாயம். இறைவனை வழிபடுவதும், அவரைச் சரணடைந்து வாழ்வதும் ஈசுவர ப்ரணிதானம். இவ்வாறு மூவரின் தொடர்புடன் மூன்று பயிற்சிகளைச் செய்பவன் இறைவனை அடைகிறான். அந்த இறைவன் யார்?

பிரம்மத்திலிருந்து தோன்றியவர். உருவமற்ற, குணங்களற்ற அறுதி நிலையில் இறைவன் பிரம்மம் என்று வழங்கப்படுகிறார். சாதாரண மனிதர்கள் புரிந்துகொள்ளத்தக்க நிலையில் குறிப்பிட்ட வடிவத்துடனும் குணங்களுடனும் இருக்கின்ற நிலையில் இறைவன், கடவுள் மற்றும் சிவன், விஷ்ணு, தேவி என்றும் பல்வேறு பெயர்களைப் பெறுகிறார். இந்த நிலையிலுள்ள இறைவனை அவன் அடைகிறான்.

அதனால் விளையும் பலன் என்ன? நிலைத்த அமைதி.

இறைவனைத் தவிர வேறு எதன்மூலம் கிடைக்கின்ற அமைதியும் நிலையானதல்ல. சில புறக் காரணங்களின் வாயிலாகக் கிடைக்கின்ற அமைதி, அந்தக் காரணம் விலகியதும் குலைந்துவிடும். ஆனால் இறைவனைப் பெறுவதால் கிடைக்கின்ற அமைதி, எதனாலும் குலையாது.

18. த்ரிணாசிகேதஸ் த்ரயமேதத் விதித்வா
ய ஏவம் வித்வாம்ச் சினுதே நாசிகேதம்
ஸ ம்ருத்யுபாசான் புரத: ப்ரணோத்ய
சோகாதிகோ மோததே ஸ்வர்க லோகே

த்ரிணாசிகேத:-மும்முறை நசிகேத யாகம் செய்த; ய-யார்; ஏதத்-இந்த; த்ரயம்-மூன்றையும்; ஏவம்-இவ்வாறு; வித்வான்-அறிந்தவன்; விதத்வா-அறிந்த பிறகு; நாசிகேதம்-நசிகேத யாகத்தை; சினுதே-செய்கிறானோ; ஸ-அவன்; ம்ருத்யுபாசாத்-எமனின் பாசக்கயிற்றை; புரத-முன்பே; ப்ரணோத்ய-உதறிக்கொண்டு; சோகாதிக-கவலையைக் கடந்து;ஸ்வர்கலோகே-சொர்க்கத்தில்; மோததே-மகிழ்கிறான்.

பொருள் : (முந்தின மந்திரத்தில் கூறிய) மூன்றையும் அறிந்து யார் நசிகேத யாகத்தைச் செய்கிறானோ அவன் உடல் விழும்முன்பே மரணத்தை வென்று, கவலைகளைக் கடந்து சொர்க்க லோகத்தில் மகிழ்ந்திருக்கிறான்.

நசிகேத யாகத்தை ஒரு வித்யையாகச் செய்யுமாறு இந்த சுலோகம் வலியுறுத்துகிறது. வெறுமனே நசிகேத யாகத்தைச் செய்வதால் சொர்க்க லோகத்திற்குச் செல்கிறான். மூன்றையும் அறிந்து நசிகேத வித்யையைச் செய்பவன் மரணத்தை வெல்கிறான்.

உடல் விழும் முன்பே, அதாவது வாழும்போதே மரணத்தை வெல்வது என்றால் என்ன என்பதை அற்புதமாக விளக்குகிறார் ஸ்ரீசங்கரர். அவன் அறியாமையிலிருந்து விடுபடுகிறான்; ஆசை, வெறுப்பு போன்ற உணர்ச்சிகளின் பிடியிலிருந்து விடுபட்டு வாழ்கிறான் என்கிறார் அவர் (ம்ருத்யுபாசான் அதர்ம அஜ்ஞான ராக த்வேஷாதி லக்ஷணான்) அறியாமை, ஆசை போன்றவற்றின் வசப்பட்டு பிணைக்கிறது; தொடர்ந்த பிறவிக்கு வழியாகிறது. ஆசையோ வெறுப்போ அற்றவனாக வாழும்போது பிறவியற்றுப் போவதால் அது மரணத்தை வென்ற வாழ்க்கை ஆகிறது.

19. ஏஷ தேக்னிர் நசிகேத: ஸ்வர்க்யோ
யமவ்ருணீதா த்விதீயேன வரேண
ஏதமக்னிம் தவைவ ப்ரவக்ஷ்யந்தி ஜனாஸ
த்ருதீயம் வரம் நசிகேதோ வ்ருணீஷ்வ

நசிகேத: நசிகேதா; த்விதீயேன-இரண்டாவது; வரேண-வரத்தால்; யம்-எதனை; அவ்ருணீதா-கேட்டாயோ; ஸ்வர்க்ய-சொர்க்கத்தைத் தருவதான; ஏஷ-இந்த; அக்னி-யாகம்; தே-உனக்கு; உக்த; சொல்லப்பட்டது; ஏதம்-இந்த; அக்னிம்-யாகத்தை; ஜனாஸ-மக்கள்; தவ ஏவ-உனது பெயராலேயே; ப்ரவக்ஷ்யந்தி-அழைப்பார்கள்; நசிகேத-நசிகேதா; த்ருதீயம்-மூன்றாவது; வரம்-வரத்தை; வ்ருணீஷ்வ-கேள்

பொருள் : நசிகேதா! சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கின்ற எந்த யாகத்தைப்பற்றி கேட்டாயோ அதை உனக்குச் சொன்னேன். இந்த யாகத்தை மக்கள் இனி உன் பெயராலேயே அழைப்பார்கள். இனி மூன்றாவது வரத்தைக் கேள்.

மூன்றாவது வரம்(20-29)

மரணத்திற்குப்பிறகு மனிதனின் நிலை: 20-22

இந்த உபநிஷதத்தின் மையக்கருவான மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை பற்றிய உபதேசம் இங்கிருந்து தொடங்குகிறது.

20. யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யே
ஸ்தீத்யேகே நாயமஸ்தீதி சைகே
ஏதத்வித்யாமனுசிஷ்ட்டஸ்த்வயாஹம்
வரணாமேஷவரஸ்த்ருதீய

ப்ரேதே மனுஷ்யே-மரணத்திற்குப் பிறகு; அஸ்தி-இருக்கிறான்; இதி-என்று; ஏகே-சிலரும்; அயம்-இது; ந அஸ்தி-இல்லை; இதி-என்று சிலரும்; யா இயம் இந்த-விசிகித்ஸா-சந்தேகம்; ஏதத்-இதனை; அஹம்-நான்; த்வயா-உன்னிடமிருந்து-அனுசிஷ்ட்ட-கேட்டு; வித்யாம்-தெரிந்துகொள்கிறேன்; ஏஷ-இது; வாராணாம்-வரங்களுள்; த்ருதீய-மூன்றாவது; வர-வரம்.

பொருள் : மரணத்திற்குப் பிறகு மனிதன் வாழ்கிறான் என்று சிலரும், இல்லை என்று சிலரும் கூறுகின்றனர். இந்தச் சந்தேகத்தை உன்னிடம் கேட்டுத் தெளிவுபெற விரும்புகிறேன். நான் கேட்க விரும்பும் மூன்றாவது வரம் இதுவே.

எமதர்மனின் பதில்

21. தேவைரத்ராபி விசிகித்ஸிதம் புரா
ந ஹி ஸுவிஜ்ஞேயமணுரேஷ தர்ம
அன்யம் வரம் நசிகேதோ வ்ருணீஷ்வ
மா மோபரோத்ஸீரதி மா ஸ்ருஜைனம்

நசிகேத:-நசிகேதா; அத்ர-இந்த விஷயத்தில்; தேவை: அபி-தேவர்களுக்கும்கூட; புரா-முன்னர்; விசிகித்ஸிதம்-சந்தேகம் உள்ளது; ஏஷ-இந்த; தர்ம-விஷயம்; அணு-நுண்மையானது; ந ஹி ஸுவிஜ்ஞேயம்-எளிதாக அறியக்கூடியதல்ல; அன்யம்-வேறு; வரம்-வரத்தை; வ்ருணீஷ்வ-கேட்டுக்கொள்; மா-என்னை; மா உபரோத்ஸீ-கட்டாயப்படுத்தாதே; ஏனம்-இதனை; மா-என்னை; அதிஸ்ருஜ-விட்டுவிடு.

பொருள் : நசிகேதா! இந்த விஷயத்தில் தேவர்களுக்கும்கூட சந்தேகம் உள்ளது. இந்த விஷயம் மிகவும் நுண்மையானது; எளிதாக அறியக்கூடியதல்ல. எனவே வேறு வரம் கேட்டுக்கொள். என்னைக் கட்டாயப்படுத்தாதே, விட்டுவிடு.

நசிகேதனின் பதில்

22. தேவைரத்ராபி விசிகித்ஸிதம் கில
த்வம் ச ம்ருத்யோ யன்ன ஸுஜ்ஞேயமாத்த
வக்தா சாஸ்ய த்வாத்ருகன்யோ ந லப்யோ
நான்யோ வரஸ்துல்ய ஏதஸ்ய கச்சித்

அத்ர-இந்த விஷயத்தில்; தேவை: அபி-தேவர்களுக்கும்; விசிகித்ஸிதம் கில-சந்தேகம் உள்ளதா; ம்ருத்யோ-எமதர்மனே; ந ஸுஜ்ஞேயம்-எளிதாக அறிய முடியாது; த்வம் ச-நீயும்; யத்-எதனால்; ஆத்த-சொல்கிறாயோ; அஸ்ய-இதனை; வக்த-உபதேசிப்பவர்; த்வாத்ருக்-உன்னைப்போல்; அன்ய-வேறொருவர்; ந லப்ய-கிடைக்க மாட்டார்; அன்ய-வேறு; கச்சித் வர-எந்த வரமும்; ஏதஸ்ய-இதற்கு; துல்ய-இணையாக; ந-ஆகாது.

பொருள் : இந்த விஷயத்தில் தேவர்களுக்கும் சந்தேகம் உள்ளதா! எமதர்மனே! இதனை எளிதாக அறிய முடியாது என்று நீயும் சொல்கிறாய். ஆனால் இதை உபதேசிப்பதற்கு உன்னைப்போல் வேறொருவர் கிடைக்க மாட்டார். வேறு எந்த வரமும் இதற்கு இணையாகவும் ஆகாது.

நசிகேதனைத் திசைதிருப்ப எமதர்மனின் முயற்சி : 23-25

23. சதாயுஷ: புத்ர பௌத்ரான் வ்ருணீஷ்வ
பஹூன் பசூன் ஹஸ்தி ஹிரண்யமச்வான்
பூமேர் மஹதாயதனம் வ்ருணீஷ்வ
ஸ்வயம் ச ஜீவ சரதோ யாவதிச்சஸி

சதாயுஷ: நூறாண்டு ஆயுள் உள்ள; புத்ர பௌத்ரான்-மகன்களையும் பேரன்களையும்; வ்ருணீஷ்வ-கேள்; பஹூன்-ஏராளம்; பசூன்-பசுக்கள்; ஹஸ்தி ஹிரண்யம்-யானை, பொன், அச்வான்-குதிரைகள்; பூமியில்; மஹத்-பரந்த; ஆயதனம்-அரசையும்; வ்ருணீஷ்வ-கேட்டுக்கொள்; யாவத்-எதுவரை; இச்சஸி-விரும்புகிறாயோ; சரத-வருடங்கள்; ஸ்வயம் ச-நீயும்; ஜீவ-வாழ்க.

பொருள் : நூறாண்டு ஆயுள் உள்ள மகன்களையும் பேரன்களையும் கேள். ஏராளம் பசுக்கள், யானை, பொன், குதிரை போன்றவற்றைக் கேள். பூமியில் பரந்த அரசைக் கேள். நீயும் எவ்வளவு விரும்புகிறாயோ அதுவரை வாழ்ந்துகொள்.

24. ஏதத் துல்யம் யதி மன்யஸே வரம்
வ்ருணீஷ்வ வித்தம் சிரஜீவிகாம்
மஹாபூமௌ நசிகேதஸ்த்வமேதி
காமானாம் த்வா காமபாஜம் கரோமி

ஏதத் துல்யம்-இதற்கு இணையான; வரம்-வரமாக; யதி மன்யஸே-நினைத்தால்; வ்ருணீஷ்வ-கேள்; வித்தம்-செல்வம்; சிர ஜீவிகாம் ச-நீண்ட ஆயுள்; நசிகேத-நசிகேதா; மஹா பூமௌ-பரந்த பூமியில்; த்வம்-நீ; ஏதி-இரு; த்வா-உன்னை; காமானாம்-ஆசைகளையெல்லாம்; காமபாஜம்-அனுபவிப்பவனாக; கரோமி-செய்கிறேன்.

பொருள் : நசிகேதா! இதற்கு இணையான வரம் என்று நீ எதையாவது கருதினால் அதைக் கேள். செல்வம், நீண்ட ஆயுள், பரந்த பூமியில் அதிபதியாக வாழ்க்கை என்று எதை வேண்டுமானாலும் கேள். உன்னை எல்லா ஆசைகளையும்  அனுபவிப்பவனாகச் செய்கிறேன்.

25. யே யே காமா துர்லபா மர்த்யலோகே
ஸர்வான் காமான்ச் சந்தத: ப்ரார்த்தயஸ்வ
இமா ராமா: ஸரதா: ஸதூர்யா
நஹீத்ருசா லம்பனீயா மனுஷ்யை
ஆபிர்மத்ப்ரத்தாபி: பரிசாரயஸ்வ
நசிகேதோ மரணம் மானுப்ராக்ஷீ

நசிகேத-நசிகேதா; மர்த்யலோகே-மானிட உலகில்; துர்லபா-அடைதற்கரிய; காமா-ஆசைகள்; யே யே-எவை எவை; ஸர்வான் காமான்-யுல்லா ஆசைகளையும்; சந்தத-விருப்பம்போல்; ப்ரார்த்தயஸ்வ-கேட்டுக்கொள்; ஸரதா-தேர்களுடனும்; ஸதூர்யா-வாத்தியக் கருவிகளுடனும்; ராமா-ஆண்களை மயக்குகின்ற; இமா-இந்தப் பெண்கள்; ஈத்ருசா-இத்தகைய பெண்கள்; மனுஷ்யை-மனிதர்களால்; ந லம்பனீயா: ஹி-அடையக் கூடியவர்கள் அல்ல; மத் ப்ரத்தாபி-என்னால் தரப்பட்ட; ஆபி-இவர்களால்; பரிசாரயஸ்வ-பணிவிடை பெற்றுக்கொள்; மரணம்-மரணத்தைப்பற்றி; மா அனுப்ராக்ஷீ-கேட்காதே

பொருள் : நசிகேதா! மானிட உலகில் அடைதற்கரிய ஆசைகள் எவையெவை உண்டோ அவை அனைத்தையும் உன் விருப்பம்போல் கேட்டுக்கொள் சாரதிகளுடன் தேர்களைத் தருகிறேன். வாத்தியக் கலைஞர்களைத் தருகிறேன். ஆண்களை மயக்குகின்ற இந்த தேவலோகப் பெண்களைத் தருகிறேன். இத்தகைய பெண்கள் மனிதர்களுக்குக் கிடைக்கக் கூடியவர்கள் அல்லவே! நான் தருகின்ற இவர்களால் நீ வேண்டிய பணிவிடை பெற்றுக்கொள். ஆனால் மரணத்தைப்பற்றி மட்டுமே கேட்காதே.

நசிகேதனின் ஆசையின்மை : 26-29

26. ச்வோபாவா மர்த்யஸ்ய யதந்தகைதத்
ஸர்வேந்த்ரியாணாம் ஜரயந்தி தேஜ
அபி ஸர்வம் ஜீவிதமல்பமேவ
தவைவ வாஹாஸ்தவ ந்ருத்ய கீதே

அந்தக-மரணதேவனே; ச்வோ பாவா-நிலையற்றவை; மர்த்யஸ்ய-மனிதனின்; ஸர்வ இந்த்ரியாணாம்-எல்லா புலன்களின்; யத் தேஜ-ஆற்றலையும்; தத் அவை; ஜரயந்தி-வீணாக்குகின்றன; ஸர்வம் ஜீவிதம் அபி-எல்லா வாழ்க்கையும்; அல்பம் ஏவ-குறுகியதே; தவ-உனது; வாஹா-குதிரைகளும்; ந்ருத்ய கீதே-ஆடல்களும் பாடல்களும்; தவ ஏவ-உன்னிடம் இருக்கட்டும்

பொருள் : மரணதேவனே! நீ கூறுகின்ற இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை அவை மனிதனுடைய புலன்கள் அனைத்தின் ஆற்றலையும் வீணாக்குகின்றன. வாழ்க்கையோ குறுகியது. எனவே நீ சொன்ன குதிரைகள், ஆடல்கள், பாடல்கள் எல்லாம் உன்னிடமே இருக்கட்டும்.

உலகின் இன்பங்கள் நிலையற்றவை. அதாவது உலகப் பொருட்களிலிருந்து கிடைக்கும் இன்பம் நிலையாக இருக்காது. அந்த இன்பங்களைத் தொடர்ந்து எப்போதும் துன்பங்கள் வரும். அது மட்டுமல்ல, இன்பங்களை அனுபவிக்க அனுபவிக்க அது ஆற்றலை விரயம் செய்து புலன்களை அழிக்கின்றன. நம்மையும் அழித்து, துன்பங்களையும் விளைவாகக் கொண்டுவருகின்ற இந்த உலக இன்பங்களை நாடக் கூடாது. மனிதனின் ஆயுள் மிகவும் குறுகிறது. இறைவன் தந்துள்ள இந்தக் குறுகிய ஆயுளை அற்ப சுகங்களில் செலவிடக்கூடாது; உயர் லட்சியத்தை அடைவதற்காகவே பயன்படுத்த வேண்டும். இதனைப் புரிந்துகொண்டு, எமதர்மன் அளித்த சுகபோகங்களை மறுத்துவிட்டான் நசிகேதன்.

27. ந வித்தேன தர்ப்பணீயோ மனுஷ்யோ
லப்ஸ்யாமஹே வித்தமத்ராக்ஷ்ம சேத் த்வா
ஜீவிஷ்யாமோ யாவதீசிஷ்யஸி த்வம்
வரஸ்து மே வரணீய: ஸ ஏவ

மனுஷ்ய-மனிதன்; வித்தேன-பணத்தால்; ந தர்ப்பணீய-திருப்தி அடையக்கூடியவன் அல்ல-த்வா-உன்னை; அத்ராக்ஷ்ம சேத்-பார்த்ததால்; வித்தம்-செல்வம்; லப்ஸ்யாமஹே-பெறுவோம்; த்வம்-நீ யாவத்-எதுவரை; ஈசிஷ்யஸி-ஆள்கிறாயோ; ஜீவிஷ்யாம-வாழ்வோம்; மே-என்னால்; வரணீய-கேட்கத் தக்க; வர: து-வரமோ; ஸ ஏவ-அதுவே.

பொருள் : மனிதன் பணத்தால் திருப்தி அடையக்கூடியவன் அல்ல. உன்னை பார்த்ததால் வேண்டிய செல்வம் பெறுவது உறுதி. நீ ஆளும்வரை என் ஆயுளுக்கும் பஞ்சமில்லை. எனவே ஆயுளோ செல்வமோ எதுவும் எனக்கு வேண்டாம். நான் கேட்கத் தக்க வரம் அது ஒன்றே.

பத்து ரூபாய் கிடைத்தால் நூறு போதும் என்று தோன்றும் நூறு கிடைத்தால் ஆயிரம் சரி என்று தோன்றும். இவ்வாறு வளர்ந்துகொண்டே செல்வது பணத்தின்மீது உள்ள ஆசை என்று எழுதுகிறார் கேரளத்தில் வாழ்ந்த மகானான பூந்தானம். அதனால்தான் ஆசையை ஒரு சங்கிலி (நிகளம்) என்று குறிப்பிட்டார் அருணகிரி நாதர்( ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அனுபூதி பிறந்ததுவே), பணம் என்று மட்டுமல்ல, உலக இன்பங்கள் எதிலும் திருப்தி என்பது வராது. எமதர்மன் கொடுத்த அத்தனை செல்வத்தை அனுபவித்தாலும் விளைவு ஒன்றாகத்தான் இருக்கும்; அதாவது திருப்தி கிடைக்கப்போவதில்லை. எனவே அதை நாடிப் பலனில்லை,

புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப ஒருவரது ஆயுளை நிர்ணயிப்பவன் எமதர்மன். வேண்டிய காலம் வரை வாழ்வதற்கான வரத்தை நசிகேதனுக்கு அவனே அளித்துள்ளான். ஆனாலும் அந்தக் காலம் முடிந்தபின் இறக்கத்தான் வேண்டும். எனவே நீண்ட ஆயுளாலும் பலன் இல்லை. அதனால், மரணத்தைப்பற்றி தான் கேட்டதற்கு விடை வேண்டும், அது மட்டுமே வேண்டும் என்று சாதிக்கிறான் நசிகேதன்.

28. அஜீர்யதாமம்ருதானாமுபேத்ய
ஜீர்யன் மர்த்ய: க்வத ஸ்த: ப்ரஜானன்
அபித்யாயன் வர்ணரதி ப்ரமோதான்
அதிதீர்கே ஜீவிதே கோ ரமேத

அஜீர்யதாம்-மூப்பற்றவர்களும்; அம்ருதானாம்-மரணமற்றவர்களும்; உபேத்ய-அடைந்து; ப்ரஜானன்-அறந்து ஜீர்யன்-மூப்படையக்கூடிய; மர்த்ய-இறக்கக்கூடிய; க்வத; ஸ்த-கீழ் உலகங்களில் வாழ்கின்ற ஒருவன்; வர்ண ரதி ப்ரமோதான்-பாடல், உடல்சுகம்-இவற்றால் உண்டாகும் இன்பத்தை; அபி த்யாயன்-சிந்தித்து; அதி தீர்கே-நீண்ட காலமானாலும்; ஜீவிதே-வாழ்க்கையில்; க-யார்; ரமேத-ஆசைப்படுவான்.

பொருள் : மூப்பற்றவர்களும் மரணமற்றவர்களுமான உங்களை அடைந்து உண்மையை அறிந்துகொண்டேன். நானோ; மூப்பும் மரணமும் உள்ள கீழ் உலகில் வசிப்பவன்; பாடல், உடல்சுகம் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் என்ன என்பதைச் சிந்தித்து அறிந்தவன். எனவே எவ்வளவுதான் நீண்ட ஆயுள் தந்தாலும் அந்த வாழ்க்கையில் நான் ஆசை வைப்பேனா?

தேவர்கள் மூப்பற்றவர்கள், மரணமற்றவர்கள் என்று கூறப்படுகின்றனர். அதாவது நம்முடன் ஒப்பிடும் போது அவர்கள் இன்னும் நீண்ட காலம், மிக நீண்ட காலம் வாழ்கிறார்கள், ஆனால் அவர்களும் அநதக் காலம் முடிந்ததும் மீண்டும் பிறப்பிற்கு உள்ளாகியே தீர வேண்டும். உங்களை அடைந்து உண்மையை அறிந்துகொண்டேன் என்று நசிகேதன் குறிப்பிடுவது இதைத்தான். தேவர்களே ஒருநாள் மரணத்தைத் தழுவ வேண்டுமானால் மனிதனின் ஆயுள் எவ்வளவு சிறியது! அதனை இந்த நிலையற்ற உலக இன்பங்களில் செலவிடுவேனா என்பது நசிகேதனின் கேள்வி. மரணத்திற்குப் பின்னால் என்ன உள்ளது என்பதை மட்டுமே அறிய விரும்புகிறான் அவன்.

29. யஸ்மின்னிதம் விசிகித்ஸந்தி ம்ருத்யோ
யத்ஸாம்பராயே மஹதி ப்ரூஹி நஸ்தத்
யோயம் வரோ கூடமனுப்ரவிஷ்ட்டோ
நான்யம் தஸ்மான்னசிகேதா வ்ருணீதே

ம்ருத்யோ-மரண தேவனே; யஸ்மின்-எதைப்பற்றி; இதம் விசிகித்ஸந்தி-இந்த சந்தேகம் நிலவுகிறதோ; மஹதி-பெரும் பலனைத் தருகின்ற-ஸாம்பராயே-மறு உலக விஷயத்தில்; யத்-எது உண்டோ; தத்-அதை; ந-எங்களுக்கு; ப்ரூஹி-சொல்; ய: வர-எந்த வரம்; கூடம் அனுப்ரவிஷ்ட்ட-ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ; அயம்-இந்த; தஸ்மாத்-அதைவிட; அன்யம்-வேறு வரத்தை; நசிகேதா-நசிகேதன்; ந வ்ருணீதே-கேட்க மாட்டேன்.

பொருள் : மரண தேவனே! எந்த விஷயத்தில் இந்தச் சந்தேகம் நிலவுகிறதோ, மறுஉலக விஷயத்தைப் பற்றிய எதனை அறிந்தால் பெரும் பலன் கிடைக்குமோ, எந்த உண்மை மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ அதை நான் தெரிந்துகொள்ள வேண்டும். வேறு எந்த வரமும் எனக்கு வேண்டாம்.

இதி காடக உபநிஷதி ப்ரதம அத்யாயே ப்ரதமா வல்லீ இவ்வாறு கட உபநிஷதத்தில் முதல் அத்தியாயத்தில் முதல் பகுதி நிறைவுறுகிறது

மூன்று வரங்கள்: ஒரு கண்ணோட்டம்

நசிகேதன்

உயர் உண்மையை நாடுபவர்களுக்கு நசிகேதனின் கதை ஒரு கலங்கரை விளக்கம். அவர்களிடம் இருக்க வேண்டிய சில முக்கியமான குணங்கள் நசிகேதனின்மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன.

முதலாவதாக சிரத்தை(2) வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அந்த நம்பிக்கையைச் சாதிக்கின்ற செயல்திறன்.

இரண்டாவது சுய மதிப்பு. தனது மதிப்பு நசிகேதனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதாவது, தன்னைப்பற்றி அவன் அறிந்திருந்தான். சிரத்தை மிக்கவனான எனக்குச் சொல் என்று (13) அவன் சொல்வதிலிருந்து இதனை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. சிரத்தை உள்ளவரிடம் சொன்னால் அது வீண் போகாது. ஏனெனில் அதை அவன் செயல்படுத்துவான். தன்னால் செயல்படுத்த முடிந்ததையே அவன் கேட்பான். கேட்டதைச் செயல் படுத்துவான். தன்னிடம் அந்தப் பண்பு இருப்பதை, எமன் சொல்வதைக் கடைபிடிக்கின்ற திறமை தன்னிடம் இருப்பதை உணர்ந்திருந்தான் நசிகேதன். இதுவே சுய மதிப்பு என்பது.

அது மட்டுமின்றி, செல்வம், பதவி, பெண் என்று பல விஷயங்களைக் காட்டி திசைதிருப்ப எமதர்மன் முயற்சித்த போது இந்த இன்பம் என்ன என்பதைச் சிந்தித்து அறிந்தவன் நான்(28) என்று தைரியமாகக் கூறுகிறான் நசிகேதன். இதுவும் அவன் தன்னைப்பற்றி அறிந்திருந்தான், தன்னைப்பற்றிய உயர்ந்த மதிப்பு வைத்திருந்தான் என்பதையே காட்டுகிறது. சுயமதிப்பை ஆணவத்துடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. இல்லாத திறமைகளை இருப்பதாகக் காட்டிக் கொள்வதும், பலவீனங்களை மறைப்பதற்காக இடுவதுமான முகமூடியே ஆணவம். சுய மதிப்பு என்பது தன்னிடம் இருப்பதைப் புரிந்துகொள்வது. ஆணவம் பிறரைக் கீழாகப் பார்க்கும், சுய மதிப்பு அனைவரையும் சமமாகப் பார்க்கும். எனவே தன்னறிவு, அதன் விளைவாக வருகின்ற சுய மதிப்பு இரண்டும் உயர் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது.

அடுத்தது உண்மையை ஏற்றுக்கொள்ளல். வாஜசிரவஸ் நசிகேதனை மரண தேவனிடம் அனுப்பத் துணிந்தபோதும் கோபமோ ஆத்திரமோ அடையாமல் அதனை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆழ்ந்து சிந்திக்கிறான் அவன்(5,6) சூழ்நிலை கொண்டு வருபவற்றை, அவை நல்லவையானாலும் கெட்டவையானாலும், அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். உயர் உண்மையை நாடுபவன் ஒருபோதும் சூழ்நிலைகளை மாற்றியமைக்க முயற்சி செய்யக் கூடாது. எத்தகைய சூழ்நிலை வந்தாலும், உடனே மனத்தை உள்ளே திருப்பி அதனை அகவளர்ச்சிக்கான ஒரு படியாக மாற்றும் திறமை வேண்டும்.

அடுத்தது துணிச்சல்(10). எமனையே நேரில் சந்தித்துப் பேசுகின்ற துணிச்சலை நசிகேதனிடம் காண்கிறோம். பாதையில் எத்தனை இடர்கள் வந்தாலும் அத்தனையையும் எதிர்கொண்டு, தான் லட்சியமாகக் கொண்டதைச் சாதிப்பதற்கான துணிச்சல், உண்மையை நாடுபவனிடம் வேண்டும்.

கடைசியாக ஆசையின்மை(29). உயர் உண்மையை நாடுபவனிடம் உலகைப்பற்றிய, அதன் சுகபோகங்களைப் பற்றி தெளிவான கருத்து இருக்க வேண்டும். அப்போது மட்டுமே அவன் தனது லட்சியத்தை அடைய முடியும். உலகம், அதன் சுகபோகங்கள் என்றால் என்ன? அவற்றிற்கு வாழ்க்கையில் எந்த அளவு இடம் கொடுக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. உலகின் சுகங்கள் அத்தனையையும் எமதர்மன் கொடுத்த பிறகும் நசிகேதன் அவற்றை உதறிவிட்டு, லட்சியத்திலேயே குறியாக இருக்கிறான். ஏனெனில் அந்த சுகபோகங்களின் நிலையாமையை அவன் சிந்தித்து அறிந்திருக்கிறான்(28). எனவே உண்மையை நாடுபவனுக்கு உலகின் கவர்ச்சிகள் எதனாலும் நிலைகுலையாத மனம் வேண்டும்

மூன்று வரங்கள்

நசிகேதன் எமனிடம் கேட்கின்ற மூன்று வரங்களில் ஒரு தெளிவான, படிப்படியான லட்சிய நாட்டத்தைக் காண்கிறோம். உயர் வாழ்க்கையை, ஆன்மீக வாழ்க்கையை நாடுகிறோம் என்பதற்காக உலகின் உண்மையையோ சமுதாய உறவுகளையோ தூக்கி எறிய வேண்டும் என்பதில்லை. நசிகேதனின் முதல் வரம் தந்தை தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக இருந்தது. இது குடும்பத்தில் ஒரு நல்ல உறவு நிலவ வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. பெற்றோருடனும் குடும்பத்தில் உள்ளவர்களிடமும் சரியான உறவு நிலவ வேண்டும்.

இரண்டாம் வரம் யாகம் பற்றியது. யாகங்களின் மூலம் இயற்கை சக்திகளுடன் நாம் தொடர்புகொள்கிறோம். நமக்கு வேண்டியவற்றை இயற்கை சக்திகளின்மூலம் சாதித்துக் கொள்கிறோம். அதாவது, இயற்கையைப் பேணுதல் சமுதாயத்துடனும் இயற்கையுடனும் இயைந்து வாழ நாம் கற்றிருக்க வேண்டும்.

மூன்றாம் வரம் உயர் உண்மையைப்பற்றியது

குடும்பத்துடனும் சமுதாயத்துடனும் இயற்கையுடனும் நல்ல உறவை வைத்துக்கொண்டே உயர் ஆன்மீக உண்மைகளை நாம் அடைய முடியும் என்பதை இந்த மூன்று வரங்களும் நமக்குக் காட்டுகின்றன.

 
மேலும் கட உபநிஷதம் (மரணத்திற்கு பின்னால்) »
temple news
வேதங்கள்: உலகின் பெரும் பகுதி அறியாமை இருளில் மூழ்கி, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது பாரதத் திருநாடு ... மேலும்
 
temple news
1.2 பிரித்திறந்து வாழ்! மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை என்ன என்று கேட்டான் நசிகேதன். பலவிதங்களில் ... மேலும்
 
temple news
1.3 விழித்தெழு! உடம்பின் மாற்றங்களாலோ மனத்தின் மாற்றங்களாலோ பாதிக்கப்படாத ஆன்மா என்ற ஒன்று ... மேலும்
 
temple news
2.1 அதுவே நீ கட உபநிஷதத்தின் இரண்டாம் பகுதி ஆரம்பிக்கிறது. உயர் வாழ்விற்கான அடிப்படைகள் சிலவற்றை முதற் ... மேலும்
 
temple news
மரணத்திற்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை இந்த அத்தியாயம் கூறுகிறது. நம்மில் இருவர் இருப்பதாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar