பதிவு செய்த நாள்
22
செப்
2019
03:09
சேலம்: பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, நேற்று, பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக, பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில், நேற்று காலை, 4:30 மணிக்கு திறக்கப்பட்டு, சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், பூஜை நடந்தது. சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், அழகிரிநாதர் சமேத சுந்தரவள்ளி தாயார் சிறப்பு அலங்காரத்திலும், ஆஞ்சநேயர் தங்கக்கவச சாத்துபடியிலும் காட்சியளித்தனர். மேலும், பெருமாள், பத்மாவதி தாயாருடன் கண்ணாடி மாளிகையில் அருள்பாலித்தார். அதேபோல், செவ்வாய்ப்பேட்டை வெங்கடாஜலபதி, பாண்டுரங்கநாதர், கடைவீதி வேணுகோபாலசுவாமி, பட்டைக் கோவில் வரதராஜர், நாமமலை வெங்கடேச பெருமாள், நெத்திமேடு கரியபெருமாள், அரியானூர், 77 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர், அதன் அருகேவுள்ள தசாவதார பெருமாள் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது.
அத்திவரதருடன்... : சேலம், அம்மாபேட்டை, பாபு நகரில், வளர்பிறை நண்பர் குழு சார்பில், 21ம் ஆண்டாக, திருப்பதி வெங்கடாஜலபதி அலங்கார விழா, நேற்று நடந்தது. அதில், காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும், அத்திவரதர் உற்சவம், நடப்பாண்டு நடந்ததை குறிக்க, சயன கோலத்தில், அத்திவரதருடன், அலர்மேல் மங்கை தாயார் சமேத திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 2,001 சுமங்கலி பெண்களுக்கு திருமாங்கல்ய கயிறு, 5,001 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருக்கோடி தீபம்: காளிப்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில், மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுயம்பு சென்றாய பெருமாள், வீரபக்த ஆஞ்சநேயருக்கு, சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. மூலவர் முன், திருக்கோடி தீபமேற்றி, பூஜை செய்து, தீபத்துடன் கோவிலை வலம் வந்து, கல்மரத்தில் ஏற்றினர். வீரபக்த ஆஞ்ச நேயருக்கு, வெள்ளி கவசம், வெற்றிலை மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் சென்றாய பெருமாள், ஆஞ்சநேயருக்கு மலர்மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல், க.புதூரிலுள்ள, இடைப்பாடி, மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவிலில், திருக்கோடி தீபமேற்றி, ஸ்ரீதேவி, பூதேவியருடன், சுவாமி சிறப்பு அலங்காரத்திலும், வாழப்பாடி, அக்ரஹாரத்திலுள்ள, பழமையான சென்றாய பெருமாள் கோவிலில், திருக்கோடி தீபமேற்றி, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி, சென்றாய பெருமாள், ஆபரண அலங்காரத்திலும் காட்சியளித்தனர்.
மாவட்டத்தில்...: ஆத்தூர், கோட்டை வெங்கடேச பெருமாள், வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலித்தார். பெத்தநாயக்கன்பாளையம், சின்னமசமுத்திரத்தில், 1,000 அடி உயர மலை உச்சியிலுள்ள கொப்புக்கொண்ட பெருமாள் கோவிலில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அடிவாரத்தில், மொட்டை போட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல், இடைப்பாடி, வெள்ளக்கரட்டு திம்மராய பெருமாள், ஏரிரோடு சென்றாய பெருமாள், வீரகனூர் கஜவரதராஜ பெருமாள், பேளூர், அஷ்டபுஜ பால மதனவேணுகோபால சுவாமி, பெத்தநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்மர், ஏத்தாப்பூர் லட்சுமி கோபால சுவாமி, பேளூர் கரடிப்பட்டி லட்சுமி நாராயண பெருமாள் கோவில்களில், பூஜை நடந்தது.
சிறப்பு கட்டணத்தை குறைக்க கோரிக்கை: சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், சிறப்பு தரிசனத்துக்கு, 25 ரூபாய் கட்டணம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு, பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர். சனி தோறும், பெருமாளை அனைத்து தரப்பினரும் வழிபட வசதியாக, சிறப்பு தரிசன கட்டணத்தை, 10 ரூபாயாக குறைக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர்...: காடையாம்பட்டி, சின்னதிருப்பதியிலுள்ள, பழமையான வெங்கட்ரமண சுவாமி கோவிலில், மூலவருக்கு சிறப்பு அபி?ஷகம், தீபாராதனை நடந்தது. மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். மேலும், நடைசாத்தப்படாமல், இரவு, 7:00 மணிவரை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு தரிசனத்துக்கு, 20 ரூபாய், விரைவு தரிசனத்துக்கு, 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். அதேநேரம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.