பதிவு செய்த நாள்
09
அக்
2019
11:10
விழுப்புரம் : விழுப்புரம் அருகே, பல்லவர் காலத்தைச் சேர்ந்த அய்யனார், கொற்றவை சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் அருகே உள்ள, ஆனாங்கூர் மற்றும் சரவணப்பாக்கம் ஆகிய கிராமங்களில், எழுத்தாளர் செங்குட்டுவன், வரலாற்று ஆர்வலர் விஷ்ணு ஆகியோர், கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பல்லவர் கால அய்யனார், கொற்றவை சிற்பங்கள் கண்டறியப்பட்டன. இதுகுறித்து, செங்குட்டுவன் கூறியதாவது: விழுப்புரம் நகரின் கிழக்கே, 5 கி.மீ.,யில், ஆனாங்கூர் கிராமம் உள்ளது. இங்கு ஏற்கனவே, கி.பி., 6 - 7ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, முருகன் உள்ளிட்ட தெய்வ சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வூர் ஏரிக்கரையில், தனியாருக்கு சொந்தமான கோவிலில், சமீபத்தில் கள ஆய்வு நடைபெற்றது. அப்போது, கி.பி.,8ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, அய்யனார் சிற்பம் கண்டறியப்பட்டது. விழுப்புரம் அடுத்த திருவெண்ணைய்நல்லுார் அருகே, சரவணப்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு வயல்வெளிகளின் நடுவே அமைந்துள்ள சிற்பத்தை, அப்பகுதி மக்கள், காளி என வணங்கி வருகின்றனர். 3 அடி உயரத்தில், எட்டுக் கரங்களுடன் கூடிய கொற்றவை சிற்பம், கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. இது, கி.பி.,8ம் நுாற்றாண்டான, பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இச்சிற்பங்களை, உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். மேலும், ஆனாங்கூர் பகுதியில் தொல்லியல் துறையினர் முறையான ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.