Special supplement · Part 3 · page 61 · 127 / 159
தங்க கோபுரத்தை காவல் காக்கும் குடும்பம்
மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளத்தின் திருநீறு விநாயகர் சன்னதியை ஒட்டி பார்த்தால் அம்மன், சுவாமி தங்ககோபுரங்கள் தெரியும். சுவாமி சன்னதியின் விமானத்தை தேவர்களின் தலைவனான இந்திரன், தேவ சிற்பியான மயன் மூலம் உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. 8 யானைகள், 32 சிங்கங்கள், 64 சிவகணங்கள் இக்கோபுரத்தை தாங்குகின்றன. இக்கோபுரத்திற்கு விஸ்வநாத நாயக்கர் 1559 – 63ம் ஆண்டில் தங்கம் பூசி திருப்பணி செய்தார். அம்மன் சன்னதி தங்க விமானம் 1559ல் சிராமலை செவ்வந்திமூர்த்தி செட்டியாரால் அமைக்கப்பட்டது. முக்குறுணி விநாயகர் கோபுரமும் இவர்தான் கட்டினார். கோபுரங்களை தலைமுறை தலைமுறையாக செல்லையா என்பவரின் குடும்பம் காவல் காத்து வருகிறது. இன்றும் அந்த காவல் பணி தொடர்கிறது. மன்னர் காலத்தில் கள்வர்களிடம் இருந்து தங்ககோபுரங்களை காக்க இவர்களின் மூதாதையாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு கூலியாக நிலம் வழங்கப்பட்டது. இதற்கான செப்பு பட்டயத்தையும் பாதுகாத்து வருகின்றனர். சித்திரைத் திருவிழா, ஆவணி மூல உற்ஸவ விழாவின்போது கோயில் சார்பில் இவர்களுக்கு பரிவட்டம் கட்டப்படுகிறது.