Special supplement · Part 2 · page 44 · 85 / 159
சிம்ம நந்தன தாளம்
மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் பிரகாரத்தில் நடராஜர் சன்னதி உள்ளது. அங்குள்ள இரண்டு தூண்கள் ஒன்றிலே சிம்ம நந்தன தாளமும், மற்றொன்றிலே 35 தாள வகைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. தாளம் சம்பந்தமான சிற்பங்கள் இடம்பெற்ற தூண்கள் இவை. நம் முன்னோர்கள் இத்தாளக் கட்டுகளை எப்படிப் போற்றியுள்ளனர் என்பதற்கு இதுவே சான்று. அதிலுள்ள சிம்ம நந்தனம் தாளம் பின்வருமாறு:
- தத்தி தகதி தத்ததீன்ன தா த்தத டிங்கு டிண்டி குஜேகு தஜேகு தாகு தணகு தா தணகு ஜெணகு தா தா கத ஜெம் தரி தக ததிங்கிணதொம்
- தஜெம் ஜெம் தஜெம் தஜெம் தஜெம் தகிட தரிடக தரிதா தாதாதி தித்தி தஜெம் ததாத தஜெம் ததெய் தஜெம் தகிட தரிடகதரிதா
தஜெம் தகிட தரிடகதரிதா தஜெம் தகிட தெய் தாதா தீதீ தகதக திகிதக தகததி ங்கிணதொம்.
இந்த சிம்ம நந்தன தாளம் திரைப்படத்திலும் இடம்பெற்றுள்ளது. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதையை ஏ.பி. நாகராஜன் இயக்கி தயாரித்த திரைப்படம்தான் தில்லானா மோகனாம்பாள். இதில் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு கே.வி. மகாதேவன் இசையமைத்துள்ளார். அதில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்போம். அப்பாடலில் டனால் தங்கவேலு வாயசைக்கும் ஜதியே இந்த ‘சிம்ம நந்தன தாளம்’ ஆகும்.