Special supplement · Part 2 · page 44 · 86 / 159
எழுச்சி நாயகன்
இளைஞர்களின் எழுச்சி நாயகன் சுவாமி விவேகானந்தர். அவர் இரண்டு முறை மதுரைக்கு வந்துள்ளார். 1893ல் சிகாகோ உலக சமய மாநாட்டிற்குச் செல்வதற்கு முன்பு, மதுரைக்கு வந்தார். அப்போது ராமநாதபுர மன்னரான பாஸ்கர சேதுபதியை சந்தித்துப் பேசினார். விவேகானந்தரின் ஆன்மிகச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட மன்னர், அவரை சிகாகோ மாநாட்டிற்குச் செல்லுமாறு ஊக்கப்படுத்தி, அதற்குரிய உதவிகளையும் செய்தார். சிகாகோ மாநாட்டில் உரையாற்றி வரலாற்றுச் சாதனை படைத்த பிறகு, அவர் தாயகம் திரும்பிய போது மீண்டும் மதுரைக்கு பிப்ரவரி 2, 1897 ல் வந்தார். மதுரை மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனைத் தரிசித்தார். அன்று மதுரை மக்களிடையே ‘நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன’ என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். தற்போது மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளி இருக்கும் இடத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. மதுரையில் உள்ள விவேகானந்த கேந்திரா ஆண்டுதோறும் பிப்ரவரி 2ம் தேதியை ‘விவேக விஜயம்’ என்ற பெயரில் இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.