ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலம் ஒரு ராசியில் தங்கியிருக்கும். குருபகவான் ஒரு ராசியில் ஓராண்டும், நிழல்கிரகங்களான ராகு, கேது ஒன்றரை ஆண்டும், சனீஸ்வரர் இரண்டரை ஆண்டும் தங்குவர். ஆனால் சூரியன் ஒரு ராசியில் ஒரு மாதம் மட்டுமே தங்குவார். இவர் மேஷ ராசியில் நுழையும் மாதம் சித்திரை. ரிஷப ராசியில் நுழையும் மாதம் வைகாசி. மிதுன ராசிக்கு ஆனி, கடகத்தில் ஆடி, சிம்மத்தில் ஆவணி, கன்னியில் புரட்டாசி, துலாமில் ஐப்பசி, விருச்சிகத்தில் கார்த்திகை, தனுசுவில் மார்கழி, மகரத்தில் தை, கும்பத்தில் மாசி, மீனத்தில் நுழையும் போது பங்குனி என தமிழ் மாதங்கள் கணக்கிடப்படும். இவற்றில் மகர ராசியில் நுழையும் நாளையே பொங்கல் விழாவாக கொண்டாடுகிறோம்.