பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா பூர்வாங்க பூஜைகள் நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2026 10:03
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் பாடல் பெற்ற ஸ்தலமான பெரியநாயகி அம்மன் சமேத பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து 15 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் பங்களிப்புடன் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, கடந்த 2023ம் ஆண்டு மே 5ம் தேதி பாலாலயம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, 40 பெரிய மற்றும் சிறிய கோபுரங்கள் சீரமைக்கப்பட்டு, பஞ்சவர்ணங்கள் பூசும் பணி நடந்தது. கோவில் சுற்றுப்புறத்தில் புதிதாக கருங்கல் பதிக்கப்பட்டது. அனைத்து மர வாகனங்களும் பழுது நீக்கப்பட்டது. புதிதாக நாக வாகனம், கிளி வாகனம், சுவாமிகளின் குடைகள் செய்யப்பட்டுள்ளது. 23 யாக சாலைகள், 54 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறையினர் அறிவுரைப்படி இயற்கை மூலிகைளை தண்ணீரில் கலந்து பீய்ச்சி அடித்து சுவர்கள், துாண்கள் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. நாளை 18ம் தேதி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் துவங்குகிறது. தொடர்ந்து, தினமும் காலை, மாலை பூஜைகள் நடக்கிறது. வரும் 22ம் தேதி முதல் யாக சாலை பூஜை துவங்குகிறது. 25ம் தேதி காலை 9:00 மணிக்குள் மேல், 10:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஹிந்து சமய நிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகிறது. பூஜை ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.