சுமதி என்னும் மன்னரின் தவத்திற்கு இணங்கி திருமால் காட்சியளித்த தலம் திருவல்லிக்கேணி. இங்குள்ள மூலவர் வேங்கடகிருஷ்ணர் எனப்படுகிறார். பார்த்தசாரதி என்றும் இவருக்கு பெயருண்டு. இதே தலத்தில் அத்திரி முனிவரின் தவம் கண்டு மகிழ்ந்த திருமால், நரசிம்மராக காட்சியளித்தார். இங்கு தவம் செய்த மதுமான் என்னும் மகரிஷி, ராமச்சந்திர மூர்த்தியாக திருமாலை தரிசிக்கும் பேறு பெற்றார். சப்தரோமர் என்னும் முனிவருக்காக எழுந்தருளிய திருமால், கஜேந்திர வரதராகவும் அருள்பாலிக்கிறார். பிருகு முனிவரின் மகளாக அவதரித்த லட்சுமியை மணம் புரிய ரங்கநாதராக திருமால் இத்தலத்திற்கு எழுந்தருளினார். வேங்கடகிருஷ்ணர், நரசிம்மர், ராமர், கஜேந்திரவரதர், ரங்கநாதர் என்னும் ஐந்து கோலங்களில் திருமாலை தரிசிக்க விரும்பினால் திருவல்லிக்கேணிக்கு வாருங்கள்.