வேலுார் மாவட்டம் ஜோலார் பேட்டையில் மகாசுவாமிகளின் பக்தரான இளைஞர் ஒருவர் இருந்தார். படிப்பை முடித்த அவர் பல நிறுவனங்களுக்கு விண்ணப்பம் அனுப்பியும் வேலை எதுவும் கிடைக்கவில்லை. மனம் சோர்வுற்ற நிலையில் ஒருநாள், திருப்பத்துாரைச் சேர்ந்த நிறுவனத்தில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. வேலை கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தபடியே நேர்காணல் அன்று காலையில் ரயில்வே ஸ்டேஷன் வந்தார். திருப்பத்துாருக்கு பயணச்சீட்டு எடுத்தார். அப்போது சற்று தொலைவில் முதியவர் ஒருவர் கீழே விழுவது போல தடுமாறினார். ஓடிப் போய் அவரை தாங்கிப் பிடித்தார். பசி மயக்கமாக இருக்கும் என எண்ணி காப்பியும் வாங்கிக் கொடுத்தார். அதற்குள் திருப்பத்துார் செல்லும் ரயில் சென்று விட்டது. அடுத்த ரயிலில் சென்றால் உரிய நேரத்திற்குள் போக முடியாது என்பதால், ‘இதுவும் மகாசுவாமிகளின் சித்தம்’ என முடிவுடன் முதியவரிடம் விடைபெற்றார், ஸ்டேஷனை விட்டு வெளியேறிய போது கார் ஒன்று அருகில் வந்து நின்றது. ‘எங்கு போகிறீர்கள்?’ எனக் கேட்டார் காரை ஓட்டி வந்தவர். அவசரமாக திருப்பத்துார் செல்ல வந்ததாகவும், வந்த இடத்தில் முதியவர் ஒருவருக்கு உதவியதால் தாமதமானதையும் சொல்லி வருந்தினார் பக்தர். கார் திருப்பத்துார் செல்வதாகவும், உரிய நேரத்திற்குள் கூட்டி செல்கிறேன் என்றும் கூப்பிட்டார் காரில் வந்த நபர். பழம் நழுவி பாலில் விழுந்தது போல மகிழ்ச்சியுடன் ஏறிக் கொண்டார் பக்தர். சரியான நேரத்திற்குள் கார் வந்து சேர்ந்தது.. நன்றி தெரிவித்து பக்தர் இறங்கிய போது, அழைத்து வந்த புதியவரும் நிறுவனத்திற்குள் சென்றார்! தன்னை அழைத்து வந்தவர் நிறுவனத்தின் உரிமையாளர் என்பது அப்போது தான் தெரிந்தது. ‘ உதவி மனப்பான்மை கொண்டவர்கள் தான் எங்களுக்கு தேவை’ என்று இளைஞரை தேர்வு செய்தார் உரிமையாளர். அவரது அறையில் மகாசுவாமிகளின் படம் இருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்தார். அப்போது ‘நல்ல மனம் வாழ்க’ என்று சுவாமிகள் ஆசியளிப்பதை உணர்ந்தார்.