பதிவு செய்த நாள்
02
ஜன
2021
04:01
போத்தனூர்: புத்தாண்டு பிறப்பு முன்னிட்டு சர்ச்களில் சிறப்பு ஆராதனை நடந்தது.
ஆங்கில ஆண்டு, 2020 நேற்று முன்தினம், மழையுடன் முடிவடைந்தது. நேற்று, 2021ம் ஆண்டு பிறந்தது. இதனையொட்டி சர்ச்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதுபோல், போத்தனூர் - வெள்ளலூர் ரோட்டிலுள்ள சி.எஸ்.ஐ.,யூனியன் சர்ச்சில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு சிறப்பு ஆராதனை துதி பாடல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. சிறப்பு செய்திகள், வேத பாடங்கள் வாசிப்பு உள்ளிட்டவை நடந்தன. நள்ளிரவு, 12:00 மணிக்கு புத்தாண்டு பிரார்த்தனை நடந்தது. இதையடுத்து திருவிருந்து வழங்கப்பட்டது. ஆயர் கெர்சோம் ஜேக்கப், ஆராதனையை நடத்தினார். சபை மக்கள் திரளாக பங்கேற்று, புத்தாண்டு வாழ்த்துகளை கூறிக் கொண்டனர்.
போத்தனூர் செயின்ட் ஜோசப் சர்ச்சில், பங்கு தந்தை ஜோசப் டேவிட், உதவி பங்கு தந்தை இமானுவேல் ஆகியோர் சிறப்பு ஆராதனையை நடத்தினர். செயின்ட் மார்க் சர்ச், மேட்டூர் கார்மேல் சர்ச், சுந்தராபுரம் காந்தி நகரிலுள்ள டி.இ.எல்.சி., சர்ச், அறிஞர் அண்ணா காலனி அருகேயுள்ள சி.எஸ்.ஐ.,யூனியன் சர்ச், மோகன் நகர் அருகேயுள்ள டிரினிட்டி சர்ச் மற்றும் மதுக்கரை கிறிஸ்து அரசர் சர்ச், குனியமுத்தூரிலுள்ள இறை இரக்க சர்ச், கோவைபுதூரிலுள்ள சி.எஸ்.ஐ.,யூனியன் சர்ச், குழந்தை இயேசு சர்ச் உள்ளிட்டவைகளிலும் சிறப்பு ஆராதனைகள் நடந்தன. அனைத்து சர்ச்களிலும் அரசு வழிகாட்டுதலை பின்பற்றி சமூக இடைவெளி விட்டு, இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. பங்கேற்க வந்தவர்கள், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.