இன்றைய சுற்றுப்புற சூழ்நிலையால் தவறான பழக்கங்கள் மனிதனை ஆட் கொள்வது இயற்கை. அவற்றை விட்டு நாம் தப்பி ஓடியாக வேண்டும். ஊர் முழுக்க மதுக்கடைகள் நிறைந்துள்ள நமது மாநிலத்தில் குடிக்காதவர்களும் குறிப்பிட்ட சதம் இருக்கத்தானே செய்கிறார்கள்! அவர்களில் நீங்கள் ஒருவர் என்ற பெருமை பெற வேண்டுமானால் இந்த சம்பவத்தைப் படியுங்கள். ஒருவன் குடித்து விட்டு தள்ளாடி வந்து, ரோட்டில் வந்து கொண்டிருந்த பெரியவர் மேல் மோதினான். ஏம்ப்பா..இப்படி கெட்டுப்போறே! இந்தப் பாழாப்போன குடியை விட்டுடேன். நான் விடத்தயாரா இருக்கேன், அது என்னை விடமாட்டேங்குதே! என்றவனை, சரி சரி.. நாளைக்கு என் வீட்டுக்கு வா, என்று சொல்லிவிட்டு போய்விட்டார். இளைஞனும் போனான். பெரியவர் ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு நின்றார். வந்தவனை வா என்று கூட சொல்லவில்லை. ஐயா! வீட்டுக்கு வந்தவனை வான்னு கூட சொல்லாம, தூணை புடிச்சுகிட்டு நிக்கிறீங்களே! அதை விட்டுட்டு வாங்களேன்! நான் விடணுமுனு தான் நினைக்கிறேன். அது விடமாட்டேங்குதே!. அது எப்படிங்க! உயிரில்லாத தூண் எப்படி உங்களை புடிச்சு வைக்கும், உயிரில்லாத மது உன்னை புடிச்சுகிட்டு விட மாட்டேங்குதே!அது மாதிரி தான் இதுவும்! இளைஞன் அன்றே மதுவை விட்டுவிட்டான். மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் மது அரக்கன் அழிந்து போவான். அதை அறிமுகப் படுத்திய அரசாங்கம் உங்களிடம் தோற்றுப் போகும்.