பதிவு செய்த நாள்
25
அக்
2021
06:10
வாலாஜாபாத் : லாஜாபாத் அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு எழுத்துகளுடன் கூடிய நடுகல் சிற்பத்தை, வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டுபிடித்து உள்ளனர்.
இது குறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் கிராமத்தில், 500 ஆண்டுகளுக்கு முன், விஜய நகர காலத்தைச்சேர்ந்த கல்வெட்டு எழுத்துகளுடன் கூடிய, நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது, குறுநில மன்னரின்மெய் காப்பாளர்கள் இருவர் வீர மரணம்அடைந்ததின் நினைவாக, எழுப்பி இருக்கும் நடுகல்லாகும். இதில், இரு வீரர்களின் உருவமும் இடம் பெற்றுள்ளன. இந்த சிற்பம் சிதைந்து, வலது பகுதி முழுமையாக உடைந்துள்ளதால், முழு கல்வெட்டு எழுத்துகள் முழுமையாக இல்லை.முதல் வீரனின் வலது கையில் வளைந்த குறுவாலும், இடது கையில் நீண்ட ஈட்டியை பிடித்த நிலையில் இருக்கிறார். மேலும், கொண்டை தலையும், கை மணிக்கட்டு வளையங்களும், அரை ஆடையில், குறு வாள் உறையும் உள்ளது.இரண்டாவது வீரனின் இடது கையில் வில்லும்; வலது கையில் அழகிய வேலைப்பாடு நிறைந்த கைப்பிடி கொண்ட அம்பு ஏந்தி உள்ளார். மேலும், அரை ஆடையும், இடுப்பில் உறையுடனும் கூடிய குறுவாளும் கால்கள் சற்று வளைந்தும், வலது பக்கமாக முதல் வீரனை பின் தொடர்ந்து செல்லும் நிலையிலும் உள்ளார்.இந்த இரு வீரர்களின் தலை மீது, ஆறு வரிகள் கல்வெட்டு வாசகம் உள்ளது. ஸ்ரீமது, உடையார்,மஹாமண், விபாடன் மோ, டையாருடன், பாதுகாப்பாக என்று உள்ளது. மற்ற எழுத்துகள் சிதைந்து படிக்க இயலாதநிலையில் உள்ளன என்று, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் உறுதி செய்து உள்ளார். இதை, தொல்லியல் துறையினர் மீட்டு, பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.