பதிவு செய்த நாள்
25
அக்
2021
06:10
தஞ்சாவூர் : ஹிந்து சமய அறநிலையத்துறையில், 50 சதவீத காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும், என, தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலைய ஆட்சி துறை அலுவலர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூரில், நேற்று, தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், மாநிலத் தலைவர் வாசுகி தலைமையில் நடந்தது.கூட்டத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறையில், அடிப்படை பணியாளர்கள் முதல், ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்கள் வரை 50 சதவீதம் காலிப்பணியிடங்கள் உள்ளது.காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில், கடந்த ஆறு மாதமாக அளவுக்கு அதிகமான புள்ளி விவரங்கள், வலைதளப் பதிவேற்றங்கள் உடனுக்குடன் முடித்துதர அழுத்தம் கொடுப்பதால், ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்,எனவே, இளநிலை உதவியாளர், உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு, தமிழக அரசு தேர்வாணையம் மூலம் அறிவிப்பு வெளியிட்டு, பணி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.