பதிவு செய்த நாள்
02
ஜூன்
2025
12:06
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில் பழமை வாய்ந்த ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. திருமங்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற இக்கோவிலில், நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என, நான்கு கோலங்களில், பெருமாள் அருள்பாலிக்கிறார். கோவில் அடிவாரத்தில், குளம் உள்ளது. இக்குளத்தை முறையாக பராமரிக்காததால் சீரழிந்து வருகிறது. உட்பகுதியிலும், குளத்தை சுற்றியும் குப்பை, கழிவு பொருட்கள் தேங்கி, சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. குளத்தின் மேற்பகுதி, இரவில் மதுக்கூடமாக மாறிவிடுகிறது. சமீபகாலமாக ஆகாய தாமரை வளர்ந்து, குளத்தை மூடிவிட்டது. அதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளத்தின் நிலையை பார்த்து வேதனையடைகின்றனர். குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரையை அகற்றி, சுத்தப்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இப்படியே போனால், குளம் இன்னும் சீர்குலைந்து துர்நாற்றம் வீச வாய்ப்பு உள்ளது. எனவே, மாவட்ட ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டு, ஆகாயத் தாமரையை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.