பதிவு செய்த நாள்
02
ஜூன்
2025
12:06
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோவிலில் ஏழுமலையான் கோவில் கருவறையில் மூலவர் வெங்கடேஷ பெருமாள் தவிர இன்னும் நான்கு பெருமாள் விக்ரஹங்கள் உள்ளன. இந்த நான்கு பேரில் ஒருவர் தான் போக ஸ்ரீநிவாச மூர்த்தி. இந்த போகஸ்ரீநிவாசமூர்த்தி பல்லவரணி சாமவையால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் சகஸ்ர கலசாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
போக ஸ்ரீநிவாச மூர்த்தி விக்ரஹம் கி.பி.614 ல் பல்லவ ராணி சாமவை பெருந்தேவியால் திருப்பதி கோவிலுக்கு வழங்கப்பட்டதாகும். இவருக்கு தினந்தோறும் அபிஷேகம் நடைபெறும். இவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தை முன்னிட்டு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவாரி கோயிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி, ஸ்ரீ போகஸ்ரீநிவாசமூர்த்தி, ஸ்ரீ விஸ்வக்சேனர் சந்நிதியில் வழிபாடு நடந்தது. ஸ்ரீவாரி மூலவர் சிலை முன், கருடாழ்வார் சந்நிதியில், கௌதுகமூர்த்தியாக விளங்கும் ஸ்ரீ மணவாளப்பெருமாளும், அவருக்கு எதிரே ஸ்ரீ விஸ்வக்சேனரும் அருள்பாலித்தனர். தொடர்ந்து வேத மந்திரம் முழங்க அர்ச்சகர்கள் சிறப்பு சகஸ்ர கலசாபிஷேகம் செய்தனர். இதற்கிடையில், ஸ்ரீவாரி கோவிலில் உள்ள அனைத்து அர்ஜித சேவைகளும் வழக்கம் போல் நடைபெற்றது. விழாவில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயர் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயர் சுவாமி, தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, கூடுதல் அலுவலர், கோயில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவரான வெங்கையா சவுத்ரி, வேணுகோபால தீட்சிதர், துணை இஓ லோகநாதம், பேஷ்கர் ராமகிருஷ்ணா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.