பிள்ளையார்பட்டியில் சண்டிகேஸ்வரர் சப்பரத்திற்கு பதிலாக புதிய தேர்; நாளை வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2025 05:08
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் சதுர்த்திப் பெருவிழா தேரோட்டத்தில் சண்டிகேஸ்வரருக்கு புதிய தேருக்கான வெள்ளோட்டம் நாளை காலை நடைபெறுகிறது.
நகரத்தார் கோயிலான இங்கு சதுர்த்திப் பெருவிழா பத்துநாட்கள் நடைபெறும். இவ்விழாவில் 9ம் திருநாளில் நடைபெறும் தேரோட்டத்தில் கற்பகவிநாயகர் தேரிலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் எழுந்தருளி தேரோட்டம் நடைபெறும். சப்பரத்தில் வரும் சண்டிகேஸ்வரரை பெண் பக்தர்களே உற்சாகமாக வடம் பிடித்து செல்வர். தற்போது சப்பரத்திற்கு பதிலாக சண்டிகேஸ்வரருக்கு புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. புதிய தேர் இன்று கோயில் ராஜகோபுரத்திற்கு முன்னதாக பீட ஸ்தானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டு பூஜைகள் நடந்தன.
நடப்பு காரியக்காரர்கள் காரைக்குடி சித.பழனியப்பச் செட்டியார், நச்சாந்துபட்டி மு.குமரப்பச் செட்டியார் ஆகியோர் கூறுகையில்,‛ திருக்கோயில் நிதித் திட்டத்தின் கீழ் ரூ 25 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. அதற்கான வெள்ளோட்டம் நாளை காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் நடைபெறும்’ என்றனர். சதுர்த்தி விழாவில், நாளை மூன்றாம் திருநாளில் காலை 9:30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடும், இரவு 8:30 மணிக்கு சுவாமி பூதவாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும்.