கோவை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடம் அலங்காரி அங்காளபரமேஸ்வரி அன்னையின் 45ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் மற்றும் குண்டம் திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கியது. விநாயகர் வேள்வி, 108 விநாயகர் பூஜை, கோமாதா பூஜையுடன் திருவிழா ஆரம்பித்தது. காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில், அம்மன் அபிஷேகம், அலங்கார வழிபாடு, கருப்பராயர் பூஜை, கன்னிமார் பூஜை, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், முளைப்பாரி இடுதல், மஹா சரஸ்வதி வேள்வி, புஷ்ப பல்லக்கு உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக குண்டம் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவை முன்னிட்டு, திருக்கல்யாணம், குண்டத்துக்கு பூ இடுதல், குண்டத்துக்கு அக்னி இடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நோயில் இருந்து குணமடைந்தவர்கள், மூடிய குண்டத்தில் உப்பு செலுத்தி வழிபட்டனர். உலகில் அமைதி நிலவவும், மக்கள் நிறைவாக வாழவும், பல்வேறு பூஜைகள் தினமும் நடத்தப்பட்டன. நேற்று மஞ்சள் நீர் உற்சவம், அம்மன் திருவீதி உலா, மகா அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அம்மன் அருள் பெற்றனர். நிறைவு நாளான இன்று பரிவேட்டை, குதிரை வாகன உற்சவம், மகிஷாசூரன் வதம், விளக்கு வழிபாடு, அம்மன் தரிசனம், காமதேனு வாகன உற்சவம் நடக்கிறது.